Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Sunday, July 28, 2013

வனதேவதையின் இசைக் குறிப்புகள்


1.
திரும்பவுமொருமுறை டேவிட் கீபோர்டை தொட்டு பார்த்தான். பழக்கப்படாத வளர்ப்பு பிராணியைப்போல் அது பிடிகொடுக்காமல் முரண்டு பிடித்தது.அவன் இதை கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. நான்கைந்து வருடங்களாய் தன்னோடு உடலுறுப்பு போல் ஒட்டிக்கொண்டிருந்த இசையறிவு சட்டென்று ஒரு அதிகாலையில் முழுமையாய் அந்நியப்பட்டுப் போய்விடுமா என்ன? பயத்திலும் அதிர்ச்சியிலும் அவனது கை கால்கள் உறைந்து போய்விட்டன.ரொம்பவே சிரமப்பட்டு இயல்பான உடல்மொழியை வலிந்து மீட்டவனாய் தன்னறையை விட்டகன்று கூடத்திற்கு வந்தான். அப்பா நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியின் அலைவரிசையை மாற்றிக்கொண்டிருந்தார். அவரிடம் தன்னிருப்பை காட்டிக் கொள்ள விரும்பாமல் வாசலுக்குச் செல்லும் பாதைச் சுவரை ஒட்டி அமைதியாய் நடந்தபடி அவன் வீட்டிற்கு வெளியே வந்தான்.
வானம் இன்னமும் தூறிக்கொண்டுதான் இருந்தது. தார்ச்சாலையின் வெடிப்புகளில் தேங்கிய மழைநீரின் மேல் விழுந்த சாரல் துளிகள் நீர்க்குமிழிகளை எழுப்புவதும் பின் உடைப்பதுமாய் போக்குக்காட்டிக் கொண்டிருக்க, மின் கம்பத்தை ஒட்டிய இறக்கத்தில் சகதியாய் பிசுபிசுத்துப் போயிருந்த மணற் மேட்டில் ஒரு பெரியத் தவளை சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. பீதியின் கண்களோடு மழையை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அழுகை வந்துவிடும் போல் தோன்றியது. எத்தனைக் கச்சேரிகளில் இதே கீபோர்டை வைத்து நூற்றுக்கணக்கில் பாடல்கள் இசைத்திருப்பான்? ஆடி மாதத்தில் தொடர்ந்து இருபது இருபந்தைந்து நாட்களுக்குக்கூட கச்சேரிகள் நடந்திருக்கின்றன.இவற்றையெல்லாம் இப்பொழுது நினைத்து பார்த்ததில் அவனுள் ஆழமான வெறுமையே மிஞ்சியது.
சற்றைக்குள் மழை பலமாக பிடித்துக் கொண்டது. மழையின் கனத்த துளிகள் கொய்யா மரக்கிளைகளிலும் வாழை மரத்திலைகளிலும் பட்டு தெறிக்கும் ஓசையில் தன் நினைவுகளின் குழப்பமான பாதையை அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தவன் வெளிக்கதவின் இரும்பு பிடி நகர்த்தப்படும் கிறீச்சொலியை கேட்டதன் மூலம் தன்னிலைக்கு திரும்பினான். ஈரத்தில் மூழ்கிய தலையை கைக்குட்டையால் துவர்த்தியபடி நடந்து வந்துக்கொண்டிருந்தார் அவனது மாமா. இவனை பார்த்ததும் மெலிதாய் சிரித்தப்படி இவனருகே வந்து அன்பாய் தோள்களை பற்றினார்.
"என்னடா மழை பெய்து வெளியில நிக்குற..."
"இல்ல மாமா...சும்மாதான்..."
"ம்ம்ம்..எப்ப ஹாஸ்டல்ல இருந்து வந்த..?"

"நேத்து ராத்திரி..."
டேவிடினுடைய மாமா தபேலா இசைக் கலைஞர். முன்னர் தனது வாலிப வயதில் சிங்கப்பூரில் ஏதோவோரு நட்சத்திர பொதுவிடுதியில் தபேலா வாசித்துக்கொண்டிருந்தவர் அவ்வேலை சலித்துப்போனதும் ஊர் திரும்பி "கிங்க்ஸ்" என்கிற பெயரில் இசைக்குழு தொடங்கி கல்யாணங்களிலும் கோயில் திருவிழாக்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டிருக்கிறார். அவர்தான் டேவிட் எட்டாவது படித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய அம்மாவிடம் பேசி அவனை கீபோர்ட் வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தது. அதேப் போல் பத்தாவது பரீட்சை எழுதி முடித்து விடுமுறையில் சும்மா இருந்தவனை கச்சேரிகளுக்கு முதன்முதலாக அழைத்து போனதும் அவர்தான். அதற்கு பிறகு "கிங்க்ஸ்" இசைக்குழுவின் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் டேவிட்டே கீபோர்ட் வாசிக்க ஆரம்பித்தான்.
நள்ளிரவு வரை கச்சேரி நடத்திவிட்டு அதற்கு பிறகு வீடு திரும்பிய நாட்களின் அனுபவத்தை இப்பொழுது யோசித்து பார்ப்பது அவனுக்கு ஆசுவாசம் தரும் நினைவாக இருந்தது. நொடிகளுக்குள்ளாக அந்நினைவே தீராத துயரமாய் மாறி பச்சைக் கொடியென படர்ந்து அவனை நெருக்கி அழுத்தியது. போன முறை கல்லூரி விடுதியிலிருந்து வீட்டிற்கு வந்தபோதுக்கூட முருகன் கோயில் திருவிழாவிற்கு இவன் கீபோர்ட் வாசிக்கப் போயிருந்தான்.அப்பொழுது குறிப்புகளிசைப்பதில் அவனுக்கு எந்த பிரச்சனையும் உண்டாகவில்லை.எனில் இப்பொழுது மட்டும் ஏன் இப்படியென யோசித்து அவனது மனம் பெரும் புதிரின் சிக்கலான முடிச்சுகளுக்கு நசுங்கி தவித்தது.
2.
மலைச் சரிவின் கீழேயிருந்த மிகச் சிறிய ஊர் அது. தூர தேசத்திலிருந்து தனது இசைக் கருவியோடும் அந்த விசித்தரமான பறவையோடும் அவ்வூருக்கு வந்து சேர்ந்தவனை ஊர்க்காரர்கள் அன்பாகவே வரவேற்றார்கள். ஏரியில் குளித்துவிட்டு ஈரத்துணியோடு கோயில் மண்டபத்திற்கு வந்தவனுக்கு ஊர் பூசாரியின் தயவால் கோயிலேயே தங்கிக் கொள்ள அனுமதி கிடைத்தது. நாடோடியாய் வருபவர்களிடம் ஏகத்திற்கும் கதைகளும் இதுவரை கண்டிராத பொருட்களும் கிடைக்குமென்பதால் எல்லோரும் அவனை ஆச்சரியத்தோடும் மரியாதையோடும் அனுகி நலம் விசாரித்து பேச்சுக்கொடுத்தார்கள்.ஆனால் அடுத்த சில மணிநேரங்களுக்குள்ளாகவே தங்களது கற்பனை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய நாடோடி அவனில்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டதில் சுவராஸ்யமிழந்து தத்தம் வேலைகளுக்கு திரும்ப நேர்ந்தது.
வந்த நாள் தொட்டு யாரிடமும் அதிகம் பேசாமல்,பகலெங்கும் மலைக்காடுகளில் அலைவதையும் பின் ராத்திரியில் மண்டபத்தில் அமர்ந்தோ அல்லது ஊர் எல்லையிலிருந்த ஏரிக்கரையில் அமர்ந்தோ தன் இசைக் கருவியில் இருந்து துயரத்தின் முடிவற்ற பாடலை இசைப்பதையும் அவன் வழக்கமாக்கிக் கொண்டான்.அவனுடைய இசை யுவதிகளின் இரவுகளுக்குள் புகுந்து அவர்களின் காதல் புத்தகங்களில் இரத்தத்தால் பிரிவையும் காயங்களையும் வரைந்து வைத்தது. ஊருறங்கிய ஜாமங்களில் இளம் பெண்கள் மட்டும் தனிமையில் அமிழ்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்கள்.அவனுடைய பாடல் அவர்களது நினைவில் ஒரு அழிக்கமுடியாத வடுப்போல் ஆகிவிட்டிருந்தது. முன்பு சிரித்துப் பேசி விளையாடிக்கொண்டிருந்த பெண்கள் பின்வந்த நாட்களில் சோகம் பூசிய முகத்தில் களையற்றவர்களாய் பித்து பிடித்ததுப்போல் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள்.
அவனது இசை அப்பெண்களுக்குள் மதுவின் காட்டமான போதையை ஊட்டியிருந்தது. வழக்கமாய் பிற்பகலில் வீட்டுத் திண்னைகளில் கூடி ஊர்க் கதைகள் யாவும் பேசி சிரிக்கும் பெண்கள் இராத்திரிகளில் அவன் வாசிக்கும் மாய சங்கீதம் பற்றி மட்டும் தங்களுக்குள் பேச்செழும்பாத வண்ணம் கவனமாய் பார்த்து கொண்டனர். காடுகளின் ஈரத்தை தன்னுள் கொண்டு வரும் அவனது இசை ஒவ்வொருத்தருக்குள்ளும் தனிப்பட்ட உணர்வலைகளை உக்கிரமாய் எழுப்பியதில் யாருக்குமே அதை பொதுவில் ஒரு விவாதப் பொருளாகவோ அல்லது காட்சி பொருளாகவோ முன்வைப்பதில் விருப்பமிருக்கவில்லை. இரவுகளை நிறைக்கும் அவனது ஸ்வரங்கள் இவர்களது மனதின் பெருந்துயர் கானகத்தில் அன்பின் மலர்களை தேடி ஆயிரம் மழைத்துளிகளாய் அலைந்து திரிகின்றபோது இவர்களல்லாத பிறராலான ஊர் இவனது இசையை செவிகளில் கேட்டுணராததாய் தூங்கி வழிந்து கொண்டிருந்தது .பெண்கள் விடியற்காலை கனவுகளில் அவன் வளர்க்கும் விசித்திர பறவை ,முந்தைய இரவில் நீண்ட இசை சஞ்சாரத்தை காற்றில் மீட்டியபடி வானில் நீந்துவதைக் கண்டார்கள்.
3.
மாமா வாசலில் நின்று செருப்பு மாட்டியபடியே இவனை சமிக்ஞை செய்து கூப்பிட்டார். அவர் பக்கமாய் வேகமாக நகர்ந்ததில் சிமென்ட் தரையிலிருந்து அவனது வலது கால் வழுக்கி ஈரச் சகதிக்குள் புதைந்தது.
"பார்த்து வாடா.." என்றார் அவனது மாமா.
காலில் ஒட்டிய சேரை உதறியபடியே அவரருகே சென்று சொல்லுங்க என்பதுப் போல் பார்த்தான் .
"இன்னைக்கு ராத்திரி தின்னனூர் ஜான்சன் ஸ்கூல் பக்கத்துல இருக்குற புத்து கோயில்ல கச்சேரி இருக்கு... வாசிக்க வர்றீயா..."
முகத்தில் பேயறைந்தது மாதிரியாகிவிட்டது அவனுக்கு.
பதற்றமேறிய குரலில் "இல்ல மாமா...உடம்பு ஒரு மாதிரி சரியில்ல...என்னால வாசிக்க முடியாதுன்னு நினைக்கிறேன்..கச்சேரிக்கு மட்டும் சும்மான்னா வரேன்" என்று அவசரமாக பதில் சொன்னான்.
அவர் அதிருப்தியான பார்வையில் அவனை ஒருமுறை ஏறிட்டு நோக்கினார்.
"ம்ம்..வீட்டுல நேரம் போலயா என்ன?சும்மா வந்து என்ன பண்ணப்போற?"
அவனுக்கு உடனடியாக என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. எந்த எதிர்வினையும் செய்யாது கண்களை மட்டும் அப்படியும் இப்படியுமாக அசைத்து பரிதாபமாக விழித்தான்.
"எனக்கொன்னுமில்ல வரதுன்னா வா.. உடம்புக்கு முடியலன்னா ரெஸ்ட் எடுத்துக்கோ" என்றபடி அவர் கிளம்ப எத்தனித்தார்.
"இன்னைக்கு கீபோர்ட் யாரு வாசிக்கிறா?". தனக்கே பதில் தெரிந்த இக்கேள்வியை ஏதோ பேச வேண்டுமென்பதற்காக பொய்யான ஆர்வத்தோடு அவன் கேட்டான்.
"நீதான் வரலன்னுட்டியே...அப்போ சுரேஷதான் கூப்பிடனும்"
அவர் போனப் பிறகும் வீட்டிற்குள் செல்ல மனமில்லாது வாசலிலேயே அமர்ந்து அலைபேசியில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தவனின் வானத்தில் மழை விட்டுவிட்டு பெய்துக்கொண்டிருந்தது.
3.
சாயுங்காலம் அவனது பெற்றோரும் தங்கையும் வேலூரில் யாரோ சொந்தக்காரர் திருமணத்திற்கு போகிறோம் என்று சொல்லி கிளம்பிவிட்டார்கள். இனி மறுநாள் மதியம்தான் அவர்கள் வருவார்கள் என்கிற நினைப்பு நீளப்போகும் தனிமையின் கணங்களை அவனுள் வலியாய் பதித்திருந்தது. விளக்கொளியின்றி இருட்டாய் தெரிந்த தன்னறையை கூடத்து நாற்காலியில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் வெகு இயல்பாய் கீபோர்ட் பக்கம் நின்று தனக்கு பிடித்த பாடலை வாசிக்க முயன்றபோது அவனது மனம் அவன் கற்பனைக்கூட செய்திராத அளவிற்கு பழக்கமற்றதாகவும் ஞாபகங்களற்றதாகவும் பைத்தியக்காரனை போல் கீபோர்டை வெறுமையோடு பார்த்து செயலிழந்து ஸ்தம்பித்தது. எட்டாவது படித்துக்கொண்டிருந்தபோது முதன்முதலாக செந்தில் மாஸ்டர் முன் நின்று இதே இசைக் கருவியை வாஞ்சையோடு பார்த்த கண்களை அதீத பயத்தின் சிவப்பு வண்ணத்தில் அவன் திரும்பவும் உணர்ந்தான். வாசிக்க தெரியாதவன்போல் வாத்தியத்தை வெறிக்க மட்டுமே அவனால் முடிந்தது. சுத்தமாக அவனுக்கு ஒன்றுமே நினைவில் இல்லை. கற்றுக்கொண்ட குறிப்புகள், வாசித்த பாடல்கள், ஸ்தாயிகளுக்கான அளவுகள் என எதற்குமே அவன் மூளையடுக்குகளில் பொருள் இல்லையென்றுணர்ந்தபோது நெளிந்தும் படர்ந்தும் ஓடும் மூளை நரம்புகளை வெட்டுக்கத்தியால் அறுத்தெறிந்தால் என்ன என்றே அவன் யோசித்தான். ஒரு உந்துதலில் நாடகக்காரனையொத்த விரலசைவுகளோடு கீபோர்டு பொத்தான்களை அவன் அழுத்தியபோது அவனது கால்கள் பலமிழந்து நடுக்கம் கண்டு கொண்டிருந்தன.மனம் கற்பிதம் செய்த இசை சுவரமற்ற வெற்று சப்தமாய் வெளிவரவும் அவன் சுயக்காழ்ப்புணர்ச்சியில் ஓங்காரமாய் கதறியழ துடித்தான்.பின்னர் சடுதியில் வீட்டிலிருப்பவர்களின் நினைவு தட்டவும் தன்னுடைய ஆன்மபலம் முழுவதையும் பிரயோகித்து தன்னைத் தானே கட்டுபடுத்திக் கொண்டான்.
அப்பா சமயங்களில் பழைய இளையராஜா பாடல்களை இவனை வாசிக்க சொல்லி கேட்டு ரசிப்பதுண்டு. எங்கே இன்றைக்கு அதுபோல் ஏதாவது கேட்டுவிடுவாரோ என்று அவன் மனதால் பயந்து தன்னுள் அரற்றிக்கொண்டேயிருந்தான். நல்லவேளையாக அப்படியெதுவும் நடந்துவிடவில்லை. எனினும் இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கோ அல்லது மறுநாளோ அவர் அவனை இசைக்கச் சொல்லி கேட்கக்கூடும். அப்பொழுது என்ன செய்வது?
மீண்டுமொருமுறை முயன்று பார்ப்போம் என்று தன்னறைக்குள் சென்றான். இந்த தடவை தோல்வியைவிடவும் கருணையற்று விரிந்திருந்த தனிமையே அவனை அதிகமாய் அச்சுறுத்தியது. மின்விளக்கை உயிர்ப்பித்துவிட்டு பாலையின் நிலத்திற்குள் நுழைந்தவன் வறண்ட நதியின் தடங்களின் வழியே கால்கள் அழுந்தியெரிய நடந்துபோய் அதனை நெருங்குவதற்குள்ளாக பெரும் முதுமையின் சோர்வும் இயலாமையும் அவனை மூழ்கடித்து தாழ்வுணர்ச்சி கொள்ள செய்துவிட்டிருந்தன. கருப்பும் வெள்ளையுமாக பாம்பின் நாவுகள் வளைந்து நீண்டு அவன் முன்னே விஷம் கக்கி நீலமாய் ஜ்வலித்துக் கொண்டிருந்த வேளையில் அவன் தன் நினைவில் புதைந்த இசைக் குறிப்புகளை அவற்றின்மேல் படிந்த சாபங்களின் இருண்மையிலிருந்து விடுவிக்கப் போராடிக் கொண்டிருந்தான். உடலெங்கும் நீர்ப்பாசிகள் அப்பிக்கொண்டதைப் போன்ற அருவெறுப்பில் அவன் பொத்தான்களில் இருந்து வெடுக்கென்று விரல்களை எடுத்த போது, இமையோரங்களில் வெம்மையாய் கண்ணீர்த்துளிகள் தங்கிவிட்டிருந்தன.
விளக்குகளையெல்லாம் அவசர அவசரமாய் அணைத்துவிட்டு கண்ணாடிக்கு முன்னிருந்த பூட்டையும் சாவியையும் விரைந்தெடுத்து அவற்றை கைகளில் திணித்தப்படி வேகமாய் ஓடி வந்தவன் வாசற் கதவை பலமாய் இழுத்தறைந்தான். பிடித்திழுத்த வேகத்தில் கதவு நிலைச்சட்டத்தின் மேல் மோதி அதன் எதிர்விசையால் பின்னுக்கு போனது.அதை மறுபடியும் பற்றியிழுத்து தாழிட்டு பூட்டினான். முதுகு வியர்வையில் உடலே கசகசத்து காந்திக்கொண்டிருந்தது. வாசற்படியில் கால்களை இடுக்கிக்கொண்டமர்ந்து கால்சராய் பையில் கைக்குட்டையை தேடியவன் தன் மறதிக்காய் தன்னையே கடிந்துக்கொண்டான். வீட்டிற்குள் சென்று எடுத்து வரலாமா என்கிற எண்ணத்தை ஒற்றை நொடிக்குள்ளாகவே மறுதலித்து மழைவிட்ட சாலையில் தன் கவனத்தை திருப்பினான். மாபெரும் இசைக்கோர்வையின் கடைசித் துளி மௌனத்தைப்போல் அவனது மனம் அவ்வளவு ரணமாக இருந்தது.
4.
அதிகாலையிலேயே ஊரைத் தாண்டியிருக்கும் தோட்டத்தில் இருந்து மல்லிப்பூக்கள் பறித்து வந்து அவற்றை பகல் முழுவதும் தொடுத்து சரமாக்கி இரவு படுக்கபோகும்போது தலையில் சூடிக் கொள்வது வயதுப் பெண்களின் தினசரி பாடாகிப்போனது. வீட்டுப் பெரியவர்கள் எவ்வளவோ சொல்லியும் திட்டியும் அடித்தும் கூட இந்த பழக்கத்தை அப்பெண்களால் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. பின்னிரவில் அவனது இசைக்குறிப்புகள் அடியாழ நிலத்திலிருந்து கசிந்து வந்து கற்பாறைகளுக்குள் ஓடும் கனவின் பெருநதியை ஒற்றைக் குமிழாக்கி இலைகளற்ற மரத்தின் உச்சிக்கிளையில் நர்த்தனம் புரிய செய்த போது மல்லிப்பூக்கள் ஒவ்வொன்றாய் வாடத் துவங்குகின்றன.விரிந்த மொட்டுக்களில் வலித்தரும் ஞாபகங்களின் கரிய சாயங்கள் படர்ந்து அப்பெண்களின் கண்ணீர் மீட்கப்படாத மௌனம்போல் கனத்து போகிறது. நாள்தோறும் வைபவத்திற்கு செல்வதைப்போல் பூக் கட்டுவதும் அது இரவில் வாடிப்போக தாங்கவொண்ணா துக்கத்தில் அரற்றுவதும் அவர்களுக்கு வாடிக்கையானது. வாடிய மலர்கள் இல்லத்தின் கொள்ளைப்புறத்தில் மறுநாள் புதைக்கப்பட்டன.
.ஊர்ப்பெண்களின் செயல்பாடுகளில் இயல்புத்தன்மை வெகுவாய் குறைந்துப் போனதன் உச்சமாய் ஒரு வெய்யில் நாளில் ஊர்த் தலைவரின் மகள் நிர்வாணமாய் பொதுக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டாள். தொடர்ந்து ஒரு வாரத்திற்குள்ளாக அடுத்தடுத்து மூன்று பெண்கள் அரிவாள்மனையா கழுத்தறுத்துக் கொண்டும், கோயில் முகப்பில் தூக்குப் போட்டுக்கொண்டும், எரியும் கொள்ளியை வயிற்றில் சொருகிக் கொண்டும் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டதில் ஊரே பதறிப் போனது.
தொடர்ந்து நிகழ்ந்த துர்மரணங்கள் வயதுப்பெண்களுக்கு மத்தியில் பயத்தை கிளப்பியிருந்தாலும் யாராலும் அவனது இசையை கேட்காமலிருக்க முடியவில்லை. தினமும் துயரத்தில் துவண்டு பின்னிரவு தாண்டி கண்ணயரும்போது நாளை மல்லிப்பூ பறிக்கக்கூடாது எனவும் இரவு சீக்கிரமே படுத்துறங்கிட வேண்டுமெனவும் மனதளவில் உறுதியெடுத்துக் கொள்வார்கள். இருந்தும் மறுநாள் தங்கள் மனதை கட்டுப்படுத்த முடியாமல் ஊர் எழுவதற்கு முன்னே பூந்தோட்டத்தை அடைந்து மல்லி அள்ள தொடங்கிவிடுவார்கள். இதுதான் பிரச்சனை என்று மற்றவர்களிடம் சொல்லவும் அவர்களுக்கு திராணியெழவில்லை. ஊர்க்காரர்களோ அவனை கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தார்கள்.எப்பொழுதேனும் ஊரின் இளவட்ட ஆண்கள் வேட்டைக்காக காடுகளுக்குள் செல்லும்போது அவனை பார்த்ததாக பேசிச் செல்வதோடு அவனைப் பற்றிய ஊரின் நினைவு மரத்துப் போயிருந்தது.
வருகிற அமாவாசையன்று ஊருக்கு எல்லைக் கட்டி பெண்களை காவு வாங்கும் கெட்ட ஆவியை மந்திரித்து விரட்டுவதாக பூசாரி பஞ்சாயத்துக் கூட்டத்தில் சத்தியம் செய்தார்.
5.
கச்சேரி முடிந்து அவர்கள் அப்பொழுதுதான் வீடு திரும்பி கொண்டிருந்தார்கள். மாமாவும் பிற வாத்தியக்காரர்களும் டெம்போவில் சென்றுவிட டேவிட்டும் ஹரிஷும் ஆளற்ற பின்னிரவின் சாலையில் மங்கலான மஞ்சளொளி மறைக்க முடியாத இருள் நிழல்களின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்தார்கள். பேச்சுகளற்று நீண்ட நொடிகளில் அவனுள் எண்ணங்கள் சுருள் சுருளாய் மடிந்துக் கொண்டிருந்தன. கச்சேரியின் தொடக்கம் முதல் முடிவு வரையிலும் சுரேஷ் கீபோர்ட் வாசிப்பதையே கண் கொட்டாது அவன் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த விரல்களின் லாவகமும் சப்தங்கள் இசையாவதன் ரசவாதமும் அவனுள் திரும்ப பெற முடியாத கனவென கிளைவிட்டு ரத்தம் உறிஞ்சிக்கொண்டிருந்தன. எவ்வளவு கூர்மையாக கவனித்தும் அவனுக்கு தான் பயின்ற வாசிப்புமுறையின் பிடி கிடைக்கவேயில்லை. இத்தனைக்கும் அனைத்தும் பாடல்களுமே அவன் திரும்ப திரும்ப இசைத்து பழகியவை.சமீபம் வரையிலும் அவனை முழுமையாக ஆட்கொண்டிருந்த இசையது.ஆற்றாமையில் அவன் உள்ளம் பிதுங்கி திணறியது.
"டேய்..கேக்குதா இல்லயாடா..?"
நான்கு முறைக் கூப்பிட்டும் டேவிட்டிடம் எந்த எதிர்வினையுமில்லாததைக் கண்டு வண்டியின் வேகத்தை மட்டுபடுத்தியபடி சத்தமாக பேசினான் ஹரிஷ்.
"ம்ம்...சொல்லு.."
"உடம்பு சரியில்லைன்னியே இப்போ பரவாயில்லையா..அப்ப பார்த்தப்பவே கண்ணெல்லாம் ஜீரத்துல செவப்பாயிருந்துச்சு"
உண்மையிலேயே தனக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டதோவென்று அவன் சந்தேகித்தான். காய்ச்சல் கண்டது போல் உடல் தளர்ந்துபோக உள்ளே குளிரெடுத்துக் கொண்டிருந்தது.
"இன்னும் சரியாகல.."
தொடர்ந்து ஹரிஷ் பேசிய எந்த சொல்லும் அவனது காதுகளை எட்டவேயில்லை.
வெகுதுல்லியமாய் தனது மூளையை தீண்டிய மெல்லிய சிறகசைப்பின் ஓசைக் கேட்டு டேவிட் பின்பக்கமாய் தலையை திருப்பி பார்த்தான். ஊதாப்பூ நிறத்தில் வெல்வெட்டில் துணி நெய்ததுப் போன்ற உடலமைப்போடு சிறிய அலகுக்கொண்ட நீளமானதொரு பறவை தாழ பறந்துக்கொண்டிருந்தது.அந்த பறவையின் சிறிய உருளை விழிகளை எங்கேயோ முன்பே பார்த்ததுப் போன்ற நினைவில் தொலைந்து கண்கள் விலக்காது அதன் சிறகசைப்பையே கவனித்துக் கொண்டிருந்தான். நீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறுவதைப் போல் அப்பறவையினுடைய சிறகசைப்புகள் எழுப்பிய பெருங்காற்றில் மூச்சழுந்திப் போக சீராய் சுவாசிப்பதே அவனுக்கு சிரமமாகயிருந்தது.இமைப்பொழுதிற்குள் மேகம் கூடிக்கலைவதைப் போல் அவனுக்கும் அப்பறவைக்குமிடையே ஒரு அடர்த்தியான பனித்திரை தோன்றி விலகிய கணத்தில் அது படுவேகமாய் உயரப் பறந்து பின் அவனுடைய பார்வை எல்லையை கடந்து வானத்தில் கரும்புள்ளியாக கரைந்து மறைந்து விட்டிருந்தது.
ஒழுங்கற்ற வெவ்வேறு இசைக்குறிப்புகள் வெவ்வேறு வாத்தியங்களில் பெரும் இரைச்சலாக வாசிக்கப்பட இவன் தனது செவிகளை இரு கைகளாலும் இறுக்கமாக மூடிக்கொண்டான்.
6.
கும்பம் சுமந்தபடி எல்லைக் கட்டும் பொருட்டு ஊருக்கு வெளியே இருந்த ஏரியில் தொடங்கி மலை ஏற்றத்தின் முனையிலிருக்கும் பூந்தோட்டம் வரை மந்திர உச்சாடனம் செய்தபடி ஓடிக்கொண்டிருந்தார் பூசாரி. அவரோடு இன்னும் சில ஊர் வாலிபர்களும் சேர்ந்திருந்தார்கள். ஊர் எல்லையை சுற்றிவிட்டு திரும்பவும் ஏரிக்கரைக்கு வந்தபோது பின்னிரவாகியிருந்தது.
தனது பறவையோடு மலையிலிருந்து இறங்கி வந்தவன் இவர்களை பார்த்தும் கண்டுகொள்ளாது, தான் எப்பொழுதும் அமரும் மரத்தினடியே உட்கார்ந்து இசைக்கருவியை மீட்ட துவங்கினான். கும்பம் மீது அலங்காரமாய் ஜோடிக்கப்பட்டிருந்த மல்லிப்பூச்சரத்தில் மொட்டவிழாது மூடியிருந்த இதழ்கள் பொலிவிழந்து வாடி உதிரத் தொடங்கி,சடுதியில் மொத்தச் சரத்திலும் வெறும் நார் மட்டுமே மிச்சமிருக்க பூக்கள் யாவும் வதங்கி கொட்டி தீர்ந்திருந்தன.கண்கள் ரத்தச் சிவப்பாக பூசாரி அவன் பக்கமாய் பார்வையை திருப்பினார். இமை மூடியிருக்க தன்னிசை எழுச்சியில் அவன் புறவுலகிலிருந்து துண்டுப்பட்டு தனக்கான பெருவனங்களில் உலவிக் கொண்டிருந்தான். அருகில் அவனது பறவை ஆப்பிள் பழமொன்றை கொத்தித் தின்றுக்கொண்டிருந்தது.
ஹரிஷின் முதுகைத் தட்டி டேவிட் மெல்ல அவனிடம் பேச்சுக்கொடுத்தான்.
"மச்சான்...இப்போ கீபோர்ட் வாசிக்கவே எனக்கு மறந்துடுச்சுன்னு வச்சிக்கியேன்..நான் என்ன பண்றது?"
"மறக்கறதுன்னா எப்படிடா சொல்ற...?ஸ்கேல் மாறி நோட்ஸ் வாசிக்கறதயா.. அதெல்லாந் எவன்டா கண்டுபிடிக்கப் போறான்"
"அதில்லடா...இப்போ ஒரு பாட்டோட பேக்ரவுண்டை வேற பாட்டுக்கு வாசிக்கிற மாதிரி.. வாசிக்க வேண்டிய பாட்டோட மொத்த ட்யூனும் மறந்துடுச்சுன்னா..."
"அது எப்படி மச்சான்? ஒவ்வொரு பாட்டுக்கும் ரிதம் வேறவேறல்ல..."
டேவிட்டிற்கு தன் பிரச்சனையை இவனிடம் எப்படி விளக்குவதென புரியவில்லை. இயலாமை அவனுள் புகையும் நெருப்பென தீய்ந்துக் கொண்டிருந்தது.
அவன் தன் சுயநினைவை முற்றிலுமாக இழந்துவிட்டிருந்தான்.குளக்கரையை ஒட்டியிருந்த யுகலிப்டஸ் மரத்தில்,முட்கிளைகள் சொருகிய தென்னை நார் கயிறால் அவனை ஓரிரவு முழுக்க கட்டிப் போட்டிருந்தார்கள்.முட்கள் தைத்த காயங்களில் எரிச்சலெடுத்து வாட்டியது. ஊரைத்தாண்டி தூக்கியடிக்கப்பட்டிருந்த அவன் கந்தலாக நொடிந்து போயிருந்தான். கழுத்து நரம்புகள் யாவும் சாட்டையடியில் வீங்கிப் போய் விண்ணென வலி உண்டாக்கி துடிக்க வைத்தன. வெகுவாய் சிரமப்பட்டு மெல்ல கண்களை திறந்த அவனால் தனக்கு சமீபத்தில் ஒடித்து முறிக்கப்பட்டு துண்டமாயிருந்த இசைக்கருவியை தெளிவில்லாமல் பார்க்க முடிந்தது.
அன்றிரவு அவன் எவ்வளவோ முயன்று பார்த்தும் இதுநாள் வரை அவனிசைத்துக் கொண்டிருந்த பாடலை அவனது பிரக்ஞையில் திரும்பவும் உருப்பெறச் செய்யவே முடியவில்லை.அவனது நினைவை விடுத்து அது வேறெங்கோ தொலைந்து போயிருந்தது. அவனுடைய பறவை அவன் கால்களுக்குள்ளேயே வட்டமிட்டுக் கொண்டிருக்க அவன் கண்களை மூடி தன்னுளின்றி மறைந்து போய்விட்ட தனக்கான பாடலை கண்ணீர் விடும் இதயத்தால் தேடத் துவங்கினான்.
7.
ஊர் பெண்கள் இயல்பிற்கு திரும்பிய மூன்றாம் நாள் கோயில் குளத்தில் அவனது சடலம் மிதந்துக் கொண்டிருந்தது. பிணத்தை சுற்றி சின்ன சின்ன மீன்கள் குவிந்தும் விலகியும் அலைந்துக் கொண்டிருக்க அவனுடைய பறவை தொலைதூர வானத்தில் அவனைத் தேடித்தேடி அலுத்து பின்வெயில் முற்றிய வேளையில் ஓய்ந்தொடுங்கியது.
தலையைத் திருப்பி பறவையை பார்த்துக்கொண்டிருந்த டேவிட்டின் முகத்தில் பின்னால் வந்த லாரியின் மஞ்சள் விளக்கொளி பளிச்சென்று அறையவும் அவன் தன் கண்களை குறுக்கிக் கொண்டான். வேகத்தடையின் மேலேறி பைக் குலுங்கியதில் சமநிலை குலைந்து ஹரிஷின் தோள்களை பிடித்திருந்த கைகளை அவன் விலக்க வேண்டியாகியது.எல்லாம் கண நேரம் தான். தரையில் கிடந்த பொடிக்கற்களின் மீதேறி வழுக்கி சரிந்து விழயிருந்த பைக்கை தன்னாலான மட்டும் முயன்று இழுத்து பிடித்து நிறுத்தினான் ஹரிஷ். அதற்குள்ளாக சாலையில் தலைக் குப்புற கவிழ்ந்திருந்த டேவிட் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி இரு துண்டுகளாய் வீசியெறிப்பட்டிருந்தான்.
8.
அறைக்குள் நுழைந்த அவனது முகம் தன்னம்பிக்கையில் சிவப்பாய் ஒளிர்ந்து பிரகாசித்திருந்தது. இலையுதிர்கால பாடலின் குறிப்புகள் அவனது நினைவின் பாதையில் பயணித்து நீண்டன. கீபோர்டின் மேல் அவன் விரல்கள் படவும் முன்பு அவனது மரணத்தில் தொலைந்த காடுகளின் ஈரமும் பச்சைய வாசனையும் காற்றலைகளில் படர்ந்து விரிந்தது.தேவதைக் கதைகளில் கொலை செய்யப்பட்ட சாத்தான்கள் அவனது இசையிலிருந்து வெளிப்பட்டு அறையெங்கும் நிரம்பி ஆங்காரமாய் நடனமிட தொடங்கினார்கள்.
ஜன்னல் கம்பிகளில் கால்களை பற்றக் கொடுத்திருந்த அப்பறவை தன் பெரிய சிறகுகளை அகலமாய் விரித்தசைத்து அவனது கண்களுக்குள் நீல வானத்தை படரச் செய்தது. இரவுகளின் ஆழ்ந்த சுழிப்புகளில் இசையின் அதிர்வலைகளை ஊடுருவச் செய்தவன் பிளவுப்பட்ட தன்னுடலையும் உப்பலாகி நீரில் மிதந்த தன்னுடலையும் நரிகள் கடித்து திண்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.
O
பெருவனங்களின்
அத்தனை வேர்களிலும்
நஞ்சூற்றி என் ஞாபகங்களை
ஒரு வெற்றிடத்தில்
புதைத்து வைத்ததில்
நான் தொலைத்த
குறிப்புகளும்
என்னில் இல்லாமல் போன
நானும்
இந்த மழையில்
இந்த குளிரில்
இந்த காற்றில்
உன்னை தேடி வருகிறோம்
உன் கூடாயிருக்கும் வானத்தில்
எனக்கு திசைகள் தெரியவில்லை
என் சிறகுகள்
உதிர்ந்துக் கொண்டே இருக்கின்றன
என் குருதி வெப்பம் தணிந்து
குளிர தொடங்கி விட்டிருக்கிறது
இனி அதிகமும் அவகாசம் கிடையாது
பழிகளறியாத இசையின் பறவையே
என்னை ஆட்கொள்ள சீக்கிரமே வா....
நான் இறந்துக் கொண்டிருக்கிறேன்

O
துரோணா

நன்றி : மலைகள்



Monday, December 10, 2012

பிறழ்வு

அருண் மதியம் பார்த்த ரயில் நிலையம் இதுவல்ல.எரிந்துக் கொண்டிருந்த தண்டவாளங்களும் இறுகிப் போய் மூச்சழுத்தி திமிறிய ரயிலும் வண்ணங்களழிந்த முகங்களுமாய் அடிமனதை புரட்டிய ரயில் நிலையம் கூடடையும் பறவைகளின் வானத்தில் கரும்புள்ளியாய் தொலைந்து போய்விட்டிருக்க வேண்டும்.  பகல் பொழுதின் அனல் கோடுகள் உண்டாக்கிய இறுக்கம் முற்றிலுமாக தளர்ந்து போக இதமாக வீசி  வருடியது நள்ளிரவின் மென்காற்று.சப்தங்கள் வடிந்து போன இந்த இடம் அவன் கற்பனையே செய்திராத அளவிற்கு ரம்மியமாக இருந்தது.கழுத்தை திருப்பி கண்களை அங்குமிங்கும் மேயவிட்டவன் தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் மங்கலாய் நீண்ட இருளை ஊடுருவி பார்க்க முயற்சித்தான்.ரயில் நிலையத்தினிலிருந்து இறங்கி சாலைக்கு போகும் வழியில் மின்கம்பம் பக்கமாய் ஒரு  வண்டிக் குதிரை  வெம்மையாய் மூச்சுவிட்டு நின்றுக் கொண்டிருந்தது. வெள்ளை ரோமங்களின் மேல் பூசியது போலிருந்த பழுப்பு கோடுகள் அதன் உடல்வாகிற்கு கொஞ்சமும் பொருந்தமில்லாமல் அந்நியமாய் துருத்திக் கொண்டிருந்தன.குதிரைக்கு பின்னிருந்த பழைய வண்டியில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான் அதன் வண்டிக்காரன். குதிரைக்கருகே சாலை விரிவாக்கத்தில் இடிந்துப்போன ஒரு பழைய கட்டிடம் ஒடிந்து பெயர்ந்த செங்கற்களுக்கும் வளைந்த கம்பிகளுமாய் பார்க்க பரிதாபமாய் காட்சி தந்துகொண்டிருந்தது.சாய்ந்து கிடந்த சுவரில் கை ஊன்றி சமதளத்தில் நீளமாய் படிப்போலிருந்ததின் மேல் அருண் உட்கார்ந்துக்கொண்டான்.

அறைக்கு செல்லக்கூடாது என முடிவெடுத்ததும் அருண் முதலில் கடற்கரைக்குதான் செல்ல நினைத்தான்.அவன் ரயில் நிலையத்திற்கு வந்தபோது மணி மதியம் மூன்று.அப்பொழுது கிளம்பியிருந்தாலும் ஆறு ஆறரைக்கெல்லாம் கடற்கரைக்கு போய் சேர்ந்திருக்கலாம். இன்றைக்கு பௌர்ணமி வேறு.கடல் தேவ உருவாய் அலைகளை எழுப்பிக் கொண்டிருக்கும்.நிலவுக்கு கீழே நீல சமவெளியென நர்த்தனம் புரியும் கடல்தான் எவ்வளவு அழகு.ஆனால் அவனுடைய அனுபவம் வேறு மாதிரியானதாக இருந்தது.முன்னரொரு ஞாயிற்றுக்கிழமை பெசன்ட் நகர் கடற்கரையில் நின்று அவன் முழுநிலவை பார்க்க ஒரு நூற்றாண்டின் துயரம் மொத்தமாய் அவனை சூழ்ந்துக்கொண்டு நெருப்பில் நெளியும் புழுவாய் துடிக்க வைத்தது.ஒரு நூற்றாண்டு துயரத்தை ஒரே தினத்தில் ஒற்றை ஆளாய் சுமக்க நேர்வதன் அவலத்தை அதன் வலியை  அநுபவித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.அந்த கடற்காற்றிலும்கூட அவனுக்கு அப்படி வியர்த்துவிட்டது. தோலில் கைப்பையை  மாட்டிக்கொண்டு கால் அழுத்த நடக்கும் குடும்ப தலைவிகள், செல்போனில் கடற்கரையை படமெடுத்துக் கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள், வேகமாய் ஓடி தடுக்கி விழும் சிறுபிள்ளைகள், அதிர்ந்து சிரிக்கும் யுவன்கள்,பிதுங்கி வழியும் உடல் கொண்ட சுடிதாரில் பாந்தமாய் பொருந்தும் உடல் கொண்ட குச்சி போன்ற ஒல்லியான உடல் கொண்ட உடல் கொண்ட உடல் கொண்ட யுவதிகள் யுவதிகள் என தான் கண்ட அனைவருமே சந்தோஷமாயிருந்தது அவனை இன்னும் அதிகமாய் எரிச்சல் கொள்ள செய்தது. தனக்கு மறுக்கப்பட்ட ஏதோ ஒன்றால் எல்லோரும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தால் மனதளவில் புழுங்கி தவித்தான்.அதிலும் குறிப்பாக இளம்பெண்களின் ஆனந்தம்தான் அவனை தன்னை மிஞ்சிய சித்திரவதைக்கு ஆளாக்கியது.அந்த சிவப்பு நிற சல்வாருக்கு என்ன அப்படியொரு இளிப்பு?இங்கிருக்கும் அத்தனை பெண்களையும் கடற்கரையிலேயே வைத்து வன்புணர்ச்சி செய்ய வேண்டும்  என்று நினைக்கிற அளவிற்கு அவனது மனம் சடுதியில் வன்மம் கொண்டது. இந்த பெண்கள் எல்லோரும் வலியில் அலற அதன் எதிரொலி கடலிலிருந்து வெளிப்பட்டால் எப்படியிருக்குமென யோசித்து பார்த்தான்.சட்டென்று தான் ஏன் இப்படி வக்கிரம் பிடித்தவனாக மாறினோம் என்ற கேள்வி மனதுள் எழுந்து அவனை கழிவிரக்கம் கொள்ளச் செய்தது. எல்லாவற்றிற்கும் காரணம் இந்த கடல் தான்.கடலும் அதன் ஈரநிலமும் அவனது மனதை சாக்கடையாக்கி நாற்றமெடுக்கச் செய்தன. நடுக்கடலில் நின்று மூத்திரம் பெய்தாலொழிய இப்பொழுதிற்கு தன் ஆத்திரம் தீராது என்று தோன்றியது அவனுக்கு.

மதியம் தொடங்கி இரவின் இந்த கணம் வரை அங்கேயும் இங்கேயுமென வெறுமனே அலைந்து கொண்டிருந்ததிலேயே நேரம் தீர்ந்துவிட்டது. காலையில் கல்லூரிக்கு சென்றபோது சாதாரணமாக என்றைக்கும் செல்வதைப் போல்தான் கிளம்பினான்.கொஞ்சம் நஞ்சமென்றில்லாமல் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது உச்சிவெயில்.மதியம் சாப்பாட்டு இடைவெளியின் போது எல்லோரும் கேன்டீனுக்கு போய்விட இவன் மட்டும் தனியாய் வகுப்பிலேயே உட்கார்ந்து கொண்டான். என்னென்னவோ சிந்தனைகளில் உழன்று மனம் பித்து பிடித்தது மாதிரி அரற்றிக் கொண்டிருந்தது. கரும்பலகையில் சுருக்கங்களை உடைய அப்பாவின்  முகமும் எப்பொழுதும் கோபித்துக் கொண்டேயிருக்கும் அம்மாவின் முகமும் பூதாகரமாய் விரிந்து பயமுறுத்தின.கால்களை எழுத்து மேஜையின் இரும்பு கம்பியில் பிணைத்துக் கொண்டு இரு கைகளாலும் இருக்கையை மூர்க்கமாய் குத்தத் தொடங்கியவனின் வலது காது மடல் சிவந்துப் போய் நடுங்கி கொண்டிருந்தது. அப்பொழுதுதான் கிரி வகுப்பிற்குள் நுழைந்தான். தனக்கு அருகில் வந்து தனது தோல்களை அதிர்ச்சியோடு பற்றிய கிரியை தள்ளிவிட்டு அவன் சுதாரிப்பதற்குள் முகத்தில் ஒரு அறை விட்டான் அருண். இப்பொழுதுவரை கிரியை ஏன் அடித்தோம் என்பது அருணுக்கு தெரியாது.இன்னமும் கூட அந்த நிகழ்வு யாரோ மூன்றாவது மனிதருக்கு நடந்தது மாதிரியும் அதை எவனோ தன்னிடம் சொல்ல கேட்டது மாதியும்தான் இருக்கிறது.

குதிரை லேசாய் கனைத்தது.யாரோ நகரும் ஓசை கேட்டது.குதிரை வண்டிக்காரன் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். கசங்கிய லுங்கியும் அதற்கு சம்பந்தமேயில்லாத அடர் நீல சட்டையுமாய் காண்பதற்கே விசித்திரமாக இருந்தவன் நிச்சயமாக இந்நேரத்தில் அருணை இந்த இடத்தில் எதிர்பார்த்திருக்க மாட்டான். சொல்லபோனால்,அவன் எந்த வகையிலுமே இன்னொரு மனிதனின் இருப்பை அங்கே எதிர்பார்த்திருக்க மாட்டான்.அது சரி,அருண் மட்டும் இங்கொரு குதிரையையும் பைத்தியக்காரத்தனமாய் ஆடை உடுத்தியிருக்கும் அதன் வண்டிக்காரனையும் எதிர்பார்த்தானா என்ன?எல்லாம் விதி.வண்டிக்காரன் அருண் அருகே வந்தமர்ந்தான்.

- இந்நேரத்துல இங்க என்ன நைனா பண்ணுற?

- …..

-பதில் சொல்லாக்காட்டி எப்புடி? வூட்ல எதுனா ப்ராப்ளமா?ஓடியாந்துட்டியா?

சாராய வீச்சம் அருணை வெறுப்புற செய்தது.எதையும் கண்டுகொள்ளாத மாதிரி அமைதியாய் தன் பாட்டிற்கு கண்களை மூடிக்கொண்டான்.

சட்டென்று ராஜலட்சுமியின் ஞாபகம் வந்தது அவனுக்கு. அவன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தபோது உடன் பயின்றவள் ராஜலட்சுமி.அவள் மீது அவனுக்கு பிரத்யேக கவனம் என்று எதுவும் கிடையாது. சிறுநகரத்தின் வழமையான முகமும் வாளிப்பற்ற உடலும் கொண்டவளின் கண்கள் சின்னதாய் இருக்கும்.அந்த வருடம்தான் அவன் படித்துக்கொண்டிருந்த பள்ளியில் வந்து புதிதாய் சேர்ந்திருந்தாள் .எப்பொழுதும் சாதாரணமாய் இருப்பவள் திடீரென ஒரு நாள் காலை இடைவெளியின் போது ரிக்கியைப் போட்டு செமத்தியாக அடிக்க துவங்கிவிட்டாள்.சைக்கிள் கேரியரில் புத்தக பையை இறுக்கிக்கட்ட பயன்படும் எலாஸ்டிக் கயிறால் ரிக்கியின் கழுத்தை சுற்றிவிட்டு ரௌத்திரம் தெறிக்க தனது கையிலிருந்த இயற்பியல் புத்தகத்தினாலேயே அவனை அவள் சாத்தி எடுத்ததை பார்த்த சக மாணவர்கள் எல்லோரும் அரண்டே போனார்கள். யாருக்குமே எதுவுமே புரியவில்லை.சர்க்கஸில் பழக்கப்பட்ட யானை எதிர்பாராவிதமாக மதம் கொண்டு பார்வையாளர்களை தாக்க முற்பட்டால் எப்படியிருக்கும்? சில நொடிகளில் சாமியாடி ஓய்ந்த பெண்ணைப்போல் சரிந்து விழுந்தவள் கண்களில் நீர்த்துளிகள் மின்ன புத்தகத்தை வாசற்பக்கம் வீசியெறிந்தாள்.

கிரி கன்னத்தை தடவியபடியே எழுந்திருத்தபோது பாலாஜியும் இன்னும் மூன்று பேரும் வகுப்பிற்குள் வந்துவிட்டிருந்தார்கள்.அருணுக்குள் கோபம் சிகரெட்டில் எரியும் புகைப்போல் கசப்பாய் தகித்துக்கொண்டிருந்தது. நிலைமையை ஊகித்துக்கொண்ட  பாலாஜி உடனடியாக அருணை வயிற்றோடு சேர்த்து பிடித்துக்கொண்டான்.அவன் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்குள் அருண் அவனை எக்கித்தள்ளி வாசற்பக்கத்தில் இருந்த நீளமான கட்டையை கைகளில் பற்றிக்கொண்டு விலங்கிடப்பட்ட மிருகம்போல் உறுமினான்.முகமெங்கும் கருப்பாய் சிரிப்பு படர கட்டையை அவர்கள் பக்கம் வெறித்தனமாக அவன் வீசத் தொடங்கியதில்,நரேனுக்கு தாடையில் விழுந்தது அடி.பொறுத்து பொறுத்து பார்த்தவர்கள் இனியும் மாளாதென்பதை கிரகித்துக்கொண்டதும் காட்டுத்தனமாய் நடந்துக் கொண்டிருந்த அருணை சேர்ந்தாற்போல் ஒன்றாய்  அழுத்தி கட்டையை பலவந்தமாய் பிடுங்கி தூர அடித்தார்கள். திமிறிக்கொண்டிருந்த அருணின் முகத்தில் பளீரென அறைந்தான் முகுந்த். சாம் நெற்றியில் அடித்ததில் மோதிரம் கீறி ரத்தம் சொட்டியது.சூடுபட்ட பூனைப் போல் மெல்ல பதுங்கி ஒடுங்கலானான் அருண்.வெறியெல்லாம் வடிந்து போய் அப்போதைக்கு பயம் மட்டும் மீதமிருக்க அவனது உடல் சுருங்கி குறுகியது.

கொஞ்ச நேரம் சம்பந்தமேயில்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்த வண்டிக்காரன் சட்டென்று வானத்தை வெறித்துப் பார்த்து மௌனமானான். முழுநிலவைச் சுற்றி மேகங்கள் சதுர துளைகளாய் பரவிக்கிடந்தன. சற்றைக்குள் விருட்டென்று எழுந்தவன் வண்டிக்குள் விரிக்கப்பட்டிருந்த போர்வைக்கடியே கையை விட்டு எதையோ எடுத்து அதை தனது சட்டைக்குள்ளாக மறைத்து வைத்துக்கொண்டான்.அவன் முகத்தில் பரவசமோ பயமோவென கண்டறிய முடியாதபடிக்கு சமனற்ற கலவையாக உணர்ச்சியலைகள் எழுந்தோடிக் கொண்டிருந்தன.போன வேகத்திலேயே திரும்பி வந்தவன் மறுபடியும் அருணுக்கருகிலேயே அமர்ந்து கொண்டான்.மிதமிஞ்சிய ஜாக்கிரையுணர்வோடு கயிறு மேல் நடப்பவனினுடையதைப் போலிருந்தது அவனுடைய இயக்கம்.சட்டைக்குள் பத்திரமாய் ஒளித்து வைத்திருந்த ‘அதை’ மிகவும் லகுவாய் வெளியே எடுத்தான்.

இதையெல்லாம் கண் கொட்டாமல் கவனித்துக்கொண்டிருந்த அருணுக்கு ஆர்வம் தாங்கவில்லை.மெல்ல எழும்பி அவன் கைகளில் என்ன வைத்திருக்கிறான் என எட்டிப் பார்த்தான்.கண நேரத்தில் அவனுடைய எதிர்பார்ப்பு சப்பென்று ஆகிப்போனது. குறி சொல்பவர்கள் கையில் பிடித்திருப்பார்களே அந்த மாதிரியானதொரு சின்ன கருப்புத் தடி அது.இந்த குறி சொல்பவர்கள்,கிளி ஜோசியம் பார்ப்பவர்கள்,ரேகை கணிப்பவர்கள் மற்றும் இதுபோல் நிறைய இத்யாதி செய்வர்களின் மேல் அருணுக்கு எக்கச்சக்கமான அவநம்பிக்கை உண்டு.ஒரு கட்டத்திற்கு மேல் அளவற்ற நம்பிக்கையின்மையே வெறுப்பாக பரிமணித்துவிட்டது.ஆங்காரமான அசட்டைப் பார்வையில் வண்டிக்காரனை ஒரு முறை முறைத்துவிட்டு வேறுபக்கமாய் திரும்பிக்கொண்டான் அருண்.இருந்தும் அவனுக்குள்ளிருந்த குரங்கு மனம் அவனை சும்மாயிருக்கவிடவில்லை.கண்கள் நிலைக் கொள்ளாது வண்டிக்காரன் பக்கமாய் அடிக்கடி போய் வந்துக் கொண்டிருந்தன.கொஞ்ச நேரத்திற்கு பிறகு அநிச்சையாய் அவன் மேலேயே பதிந்துவிட்ட கண்களை அருணால் விலக்க முடியவில்லை.

அக்கரிய உருளைத்தடியை மெல்ல நீவிக்கொடுத்தபடியே மந்திரம் போல் எதையோ உதட்டிற்குள்ளாக வண்டிக்காரன் முனகிக்கொண்டிருந்தான். அவனது மொத்த உடலும் விறைத்து போயிருந்தது.இறுக்கமாய் மூடியிருந்த மணிக்கட்டில் பச்சை நரம்புகள் பாம்பு போல் வளைந்து புரண்டன.அருணுக்கு ஒரு பக்கம் இவனை நினைக்க லேசாக பயமாகவும் மறுபக்கம் பயங்கர வேடிக்கையாகவும் இருந்தது.சரியான கிறுக்கிடம் வந்து மாட்டிக் கொண்டோம் என்று தனக்குள்ளாக சொல்லிக்கொண்டான்.

ரயில் நிலையத்தை கடந்த ரயில் தண்டவாள சரளைக்கற்களுக்கு மேலிருந்த பாலீதின் கவர்களையும் நடிகைகளின் உடல்களை தாங்கிய செய்தித் தாள்களையும் கிழித்தெறிந்துவிட்டு தணலாய் தகித்து மறைந்தது.வெயிலை நினைத்தாலே அருணுக்கு அடிவயிற்றில் மண்வெட்டியால் கொத்தியது போலிருக்கிறது.மொத்த நகரத்தையும் வெயில் தன் பாலைக் கரங்களால் வதைக்க நிலத்தடியிலிருந்து அனல் கக்கும் தீ நாக்குகள் மேலெழும்பி காற்று மரம் வெளியென புலனில் தட்டுப்படும் யாவற்றையும் பொசுக்கி கருக்கி விட்டன.எங்கும் எதிலும் வியாபித்து வெயில் இப்பெரு நகரத்தை தனது வெப்ப மதில்ளின் ஆக்கிரமிப்பிற்கு கொண்டு வந்துவிட்டது.மனிதர்கள் எல்லோரும் புழுங்கி தீய்கிறார்கள்.நிழலையையும் நீர்மையையும் தேடியலைந்தவர்களுக்கு  கிடைப்பதெல்லாம் கெட்ட வாடையடிக்கும் பிசுபிசுப்பும் கசந்து வடியும் விஷமும் மட்டுமே.

அருகிலா தொலைவிலா என்று கணிக்க இயலாத ஒரு அலைவரிசையில் ரோந்து போகும் போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் அருணின் காதுகளை வந்தெட்டியது. சட்டென்று உடலெங்கும் பீதி பரவ ஒரு கணம் பயத்தில் அவன் உறைந்தே போய்விட்டான்.இவ்வளவு நேரம் எப்படி போலிஸ் பற்றிய நினைப்பே இல்லாமல் இங்கே உட்கார்ந்திருந்தோம் என்பதை யோசித்து பார்த்ததில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி மட்டுமே இறுதியில் மிஞ்சியது. பக்கத்தில் வண்டிக்காரன் இன்னமும் மூடிய கண்கள் மூடியபடியேதான் கிடந்தான்.இவனுக்கோ உள்ளே அல்லில்லை.போலீஸ் சும்மா சந்தேகத்தின் பெயரில் பிடித்து போனால்கூட அவ்வளவுதான் கதை முடிந்தது. உடனிருப்பவன் வேறு பார்ப்பதற்கு கஞ்சா விற்கும் பேர்வழி மாதிரி இருக்கிறான். போலீஸ் முடிவே கட்டிவிடும் இவன் நிச்சயமாக பச்சை பொறுக்கிதான் என்று. அப்புறம் இரவெல்லாம் அடித்து துவைத்து விடுவார்கள்.சமயங்களில் காவல் நிலையங்களில் ஒரு பால் வன்கலவியெல்லாம்கூட நடக்குமென அவன் கேள்வி பட்டிருக்கிறான். அடங்கவே அடங்காத வெறி கொண்டவர்கள் போலீஸ்காரர்கள். அவர்கள் எப்படி ஒருவனை வதைப்பார்களென நாம் யோசிக்கவே முடியாது.இப்படியாக அவனது மனம் என்னவென்னவோ அபத்தங்களை பற்றியெல்லாம் சிந்தித்து கவலையில் பதறியது. நடுங்கும் கை விரல்களின் நகத்தை கொஞ்சம் தோலோடு சேர்த்தே கடித்து துப்பினான்.

காலங்களிலேயே படுமோசமானது வெயிற்காலம் என்பதில் அவனுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது.வெண்பனி உலர் நினைவுகளையும் பெருமழை ததும்பும் காதலையும் கொண்டு வருகிறதெனில் வெயிலோ வாதைகளையும் ரணங்களையும் கொண்டுவருகிறது.தாரொழுகும் தீப்பிழம்பாய் சாலையில் ஊரும் வெயிலில் வயோதிகர்கள் மரணத்தை அதன் வலி மிகுந்த நிர்வாணத்தோடு அவ்வளவு பக்கத்தில் பார்த்தார்கள்.அவனிருந்த லட்சுமிபுரத்து தெருக்களில் தொடர்ந்து சங்கொலிகளும் தப்பட்டை சத்தங்களும் கேட்ட வண்ணமிருந்தன. போன வாரம் பண்டரிநாதன்.அதற்கு முந்தைய வாரம் ரமேஷண்ணின் பாட்டி. நேற்று செல்வியக்காவின் சின்ன தாத்தாவென ஊரே சவப்பெட்டிகளை சுமந்துச் சென்று புதைத்துக் கொண்டிருக்கிறது. சுடுகாட்டைவிடவும் சூன்யம் பிடித்தவை எழவு வீடுகள். வயசாளிகள் செத்த வீடுகளில் ஓலமுமில்லை கண்ணீருமில்லை. விழிகளும் தொண்டையும் இறுகி நீர்க்கட்டிப்போல் ஆகிவிட எல்லோரும் வெற்று சுவரையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மரணத்தின் ரகசிய குறியீடுகளை சாத்தான் அச்சுவரில் வரைந்து வைத்திருக்கிறான். எல்லோருக்குள்ளும் பயம் காட்டு முள் செடியைப் போல் வேரிட்டுப் படர்கிறது.

வெயிலை அவன் எவ்வளவு வெறுத்தான் என்பதை வார்த்தைகளில் சொல்லவே முடியாது.செத்துப் போன கிழவன் கிழவிகளை வெயிலே குருதி சொட்ட கொலை செய்தது என அவன் நம்பினான்.மரணத்திற்கும் பிறழ்வுக்குமிடையே பெரிய தூரமெல்லாம் கிடையாது.இரண்டிற்கும் நடுவே இருப்பது ஒரு மெல்லிய ஜிகினாத் தாள்தான்.கிரியை அருன் அறைய வெயிலும்கூட ஒரு காரணமாக இருக்கலாம். ராஜலட்சுமி ரிக்கியை அடித்ததும் ஒரு நெடுங்கோடையில் தான்.அப்படியென்றால் அனைத்து பிறழ்வுகளையும் வெயிலே உற்பத்தி செய்கிறது. கருனையை அதன் கடைசி துளிவரை உறிஞ்சி குடித்துவிட்டு எவ்வளவு இரக்கமற்றதாக உலவிக்கொண்டிருக்கிறது வெயில்?

திடீரென்று பக்கத்து சந்திலிருந்து வொள்ளென்று குரைத்தபடியே ஒரு வெள்ளை நாய் ஓடி வந்து இவர்களுக்கு முன்நின்றது.ஒலியற்று கிடந்த இருளின் திரையை கிழித்துக்கொண்டு அது தாவி வரவும் இவனுக்கு போலீசார் கழுத்தை திருப்பி முதுகில் மிதித்தது மாதிரியாகிவிட்டது.சைரன் சத்தத்திற்கு பயந்துதான் நாயும் ஓடி வந்திருக்க வேண்டும் என்று புரிந்துக்கொண்டு ஆசுவாசமடைந்தான்.அதுவரை சலனமே காட்டாமல் எவன் விட்ட வழியோ என்று மௌனச் சாமியார்போல் அமர்ந்திருந்த வண்டிக்காரன் நாய் வந்து குரைக்கவும் கிழே இருந்த கற்களில் பெரிதாய் ஒன்றை பொறுக்கி அதன் தலையை குறிவைத்து ஓங்கி எறிந்தான். குறி சிறிதும் பிசகவில்லை. நாயின் மண்டையை பதம் பார்த்துவிட்டது அந்த கல்.வீறலிட்டலறியபடி ஓடி மறைந்த நாய் அதற்கு பிறகு சத்தமே கொடுக்கவில்லை.

எல்லோரையும் போல் மிகவும் இயல்பாகத்தான் இருக்கிறோமென்றாலும் அடிக்கடி ஏன் இப்படி கட்டிலடங்காத ஆத்திரத்திற்குள்ளாக அமிழ்ந்துப்போய் பழி தீர்க்கும் சர்ப்பம் போல் ஆகிவிடுகிறோம் என்று யோசித்தாள் ராஜலட்சுமி.ரிக்கி எப்பொழுதுமே அமைதியாக இருக்கக்கூடியவன்.யாரைக் கேட்டாலும் வகுப்பிலேயே அவன்தான் நல்ல பையன் என்று சொல்வார்கள். ஒருவேளை அவன் அவ்வளவு நல்லவனாக இருந்ததுதான் தன் கோபத்திற்கு காரணமோ? தெரியவில்லை.

அன்றைக்கு சாயுங்காலம் தனக்கு விருப்பமான இரண்டு தோழிளோடு குறுஞ்செய்திகளின் வழியே அவள் உரையாடிக்கொண்டிருந்தாள்.ஒருத்தி ஹேமா மற்றொருத்தி ருக்கு.ஹேமாவிடம் தன் துயரங்களை அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டால் கொஞ்சம் ஆறுதலாயிருக்கும் என்று அவளுக்கு தோன்றியது. ஹேமாவால்தான் தன் கண்ணீரை புரிந்துகொள்ள முடியும் என்பதில் அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.அதே நேரம் ருக்குவிடம் தான் இயல்பாகவே இருக்கிறோம் என்பதை ஆழமாக நிறுவ வேன்டும்.எனவே அதிக பிரய்த்தனம் எடுத்து அவளிடம் ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருப்பது மாதிரி காட்டிக்கொண்டாள். இயல்பிற்கும் முகச்சாயத்திற்குமிடையே சிக்கிக்கொண்டு தத்தளிக்கும் கோமாளியினுடையதைப் போலிருந்தது அவளது செயல்பாடு.

ஒரு குறுஞ்செய்தியில் தனது வலிமிகு துயரக்கதையை அழுகை பொங்க ஹேமாவிற்கு தட்டச்சு செய்து விட்டு நிமிர்ந்தால் அதற்குள்ளாக ருக்குவின் காதல் சாகசத்தை ஏந்திய குறுஞ்செய்தி இவள் படிப்பதற்காய் சத்தமெழுப்பி அலைபேசியில் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.கன்னத்தை துடைத்துவிட்டு அவளுக்கு வாழ்த்துக்கள் எழுத ஆரம்பிப்பாள். துக்கத்திற்கும் சந்தோஷத்திற்கும் நடுவே ஊடாடும்போது தனது முகம் எப்படியிருக்கும்? நிலைக் கண்ணாடியில் கொடுவிஷம் பாரித்த நீலநிற நாகக்கன்னியை பார்த்தவள் சத்தம்போட்டு சிரித்தாள்.

-என்ன கண்ணு…இன்னமும் இங்கதான் இருக்கியா..?

இந்தமுறை அவனது குரலில் முன்பில்லாத தெளிவும் தீவிரமும் சேர்ந்து ஒலிப்பதாக தோன்றியது அருணுக்கு.

-இல்லங்க….ரூமுக்கு போகனும். கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன்.

-யப்பா பாருய்யா…அப்போ பேசாம கம்முனு இருந்த..இப்போ என்னடான்னா பேசுற. சரி முகமெல்லாந் வாடிபோய் கெடக்குதே எதுனா ப்ராப்ளமான்னு கேட்டா ஒன்னியும் சொல்ல மாட்டேங்குற…

-அதெல்லாம் ஒன்னுமில்லங்க.சும்மாதான் இங்க வந்தேன்.

-தோடா…அர்த்த ராத்திரில ரயில்வே டேஷனாண்ட வந்து உட்காந்துக்கினு சும்மா வந்தேன்னு கதை சொல்றியே செல்லம்.

லுங்கி மடிப்பிற்குள்ளிருந்து பாதி பிரிந்த நிலையிலிருந்த மாணிக்சந்தை எடுத்து வாயில் கொட்டிக்கொண்டு தொடர்ந்தான்.

-நீ என்னமோ கன்பீஸன்ல இருக்கேன்னு மட்டும் புரியுது. ங்கொம்மா….சும்மா நடந்துக்கினும் ஓடிக்கினும் இருந்தாலே இப்படிதான்…ஜனங்களோடு
சேர்ந்து கயிதையாய் ஆயிடுவோம்.அப்படியே வானத்துல பறந்தோம்னு வச்சிக்கியேன்..ஒரு தொல்லையும் கிடையாது…நம்ம குமாரை(குதிரையை தட்டிக்கொடுத்து) தரேன். ஒரு ரௌண்டு பறக்கிறியா?

பாவமாய் நின்ற குதிரையை ஓரக் கண்ணில் பார்த்து தனக்குள் தானே நொந்துகொண்டான் அருண். ஒரு பஞ்சு மூட்டையை தூக்கிக்கொண்டு இரண்டடி எடுத்து வைத்தால்கூட சொத்தென்று விழுந்து தெத்துவிடும்போல் இருந்தது அந்த குதிரை.இந்த லட்சணத்தில் அது வானத்தில் பறக்குமாம்.போதையில் மூளையேயில்லாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொண்டிருக்கிறான் லூசுக்கூ…

-என்னப்பா லூசுக்கூதியாட்டம் உளறான்னு நெனைக்கிறியா…சத்தியமா சொல்றேன்.. இந்த குதிரை சும்மா ஏராப்ளேனாட்டம் பறக்கும்.அதோ அந்த முக்குல ஒரு பயுப்பு இருக்குல்ல அதுக்கு பின்னாடி இருக்க வூட்ல ஒரு தெவடியா முண்டை இருக்கா.அவளை பின்னக்க வச்சிக்கினு குமார் மேல ஏறி ராட்டின சுத்தறாப்புல ஒலகத்தையே ரவுண்டடிச்சிருக்கேன்.

இதை சொல்லும்போது தீவீரம் மிகுந்த ஒரு மத நம்பிக்கையாளனின் குரலை ஒத்திருந்தது அவனது குரல்.உடன் பரவசத்தின் உச்சியில் மனம் உடைந்தழ காத்திருப்பவனை போல் இரத்த சிவப்பேறிய கண்களுடனிருந்தான். அருணுக்குள் சின்னதாயொரு சந்தேகம் தோன்றியது.ஒரு வேளை இந்த குதிரை உண்மையிலேயே பறக்குமா? அப்படி பறக்குமென்றால் நமக்கே சிறகு கிடைத்த மாதிரிதானே. சனியன் போல் பிடித்துக்கொண்டு உயிரை எடுக்கும் பயங்கள் யாவற்றிலிருந்தும் விடுதலை பெற்று எங்கேயாவது மனிதர்களே இல்லாத இடத்திற்கு பறந்துபோய் விடலாம்.அதற்கு பிறகு நமக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.உயர உயர பறந்து நட்சத்திரக் கூட்டங்களுக் கிடையே ஒரு துகள் மண்ணாய் உறைந்துவிட்டால்கூட நன்றாகத்தான் இருக்கும்.

அருண் வண்டிக்காரனை ஒருமுறை கரிசனத்தோடு திரும்பி பார்த்தான்.அவனுக்கு சட்டென்று நிதர்சனம் பொளீரென்று உரைத்தது.இவன் ஒரு குடிகாரன்.அதுவும் குடித்துவிட்டு நாதியில்லாமல் நடுத்தெருவில் கிடக்கிறான். முழுசாய் மப்பேறிப் போய் எதையாவது இவன் உளறி கொட்டினால் அதை அப்படியே நம்பிவிடுவதா?குதிரை பறக்கும் என்று வேறு யாரிடமாவது இவன் சொல்லியிருந்தால் கதையே வேறுமாதிரி இருந்திருக்கும்.ஒன்று இவன் முகத்திற்கு நேராகவே காறித் துப்பியிருப்பார்கள். இல்லையென்றால் வயிறு வலிக்கும்வரை சிரித்துவிட்டு பிறகு தங்கள் வேலையை பார்க்க கிளம்பியிருப்பார்கள்.ஆனால் நாமோ  இவ்வளவுதூரம் முட்டாள்தனமாய் சிந்தித்து வேண்டாத கனவுகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்து அருண் வருத்தம் கொண்டான்.

இப்பொழுது மிகவும் தெளிவாக பக்கத்திலேயே கேட்டது சைரன் சத்தம். தலையை திருப்பி பார்த்தால் தெருமுனையில் சிவப்பாய் ஒளிக்கீற்றுகள் படர அவனிருந்த திசை நோக்கி மெதுவாய் நகர்ந்து வந்துக் கொண்டிருது போலீஸ் ரோந்து வண்டி. ஒரு கணத்திற்கும் குறைவான நேரத்தில் மனம் இதுவரை சுழன்று கொண்டிருந்த எண்ணங்களிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டு நிகழ்காலத்திற்கு திரும்பியது. வண்டிக்காரனுக்கு அண்டையாய் பார்வையை உருட்டினான்.அவனோ கால்களுக்கடியே முகத்தை பொருத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தான்.இவனுக்கு சட்டென்று ஒன்றுமே புரியவில்லை. காரணமேயில்லாமல் மனதில் இரக்கம் சுரந்து அவனது உடலை எடையிழக்க வைத்தது. சைரனின் அலறல் நெருங்கி வருவதை உணந்துக்கொண்ட மறுநொடியிலிருந்து அதிவேகமாய் செயல்பட துவங்கினான் அருண். வண்டிக்காரனுக்கருகே கீழே கிடந்த அந்த கருப்பு தடியை இடக்கையிலெடுத்து கால்சராயின் பைக்குள் சொருகிக் கொண்டான்.எந்த நினைப்புமில்லாது வெறுமையாயிருந்த அவன் உள்மன அடுக்குகளில் ராஜலட்சுமியின் பிம்பம் பெருகி நிரம்பியது.எந்த நம்பிக்கையால் உந்தப்பட்டு இயங்குகிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் சேணத்தில் கால் வைத்து குதிரையின் மேல் தாவியேறி அமர்ந்துக் கொண்டான்.எப்பொழுது அதன் மேல் ஏறினோம்?எப்படி ஏறினோம் என்பதெல்லாம் அவனுக்கு சுத்தமாய் கவனத்திலில்லை.கண்களை இறுக மூடிக்கொண்டு கடிவாளத்தை முடுக்கி விட்டான்.வியர்வை நீரில் தளும்பியது அவனது முகம்.குதிரை ஒரு கணம் நகர்வது போலவும் மறுகணம் நகராதது போலவும் பிரம்மை தட்டியதில் சுத்தமாய் குழம்பிப் போனான். போலீஸ் வண்டியின் டையர் தரையில் தேய்ந்து கிறீச்சிட சைரன் சத்தம் அதிர்ந்தடங்கியது.

நன்றி : மலைகள்

Wednesday, April 18, 2012

திரவஒளி தேவதை



அரவிந்த் சுவரில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். ராஜேஷ் தியானம் செய்யும் தோரணையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருப்பது மங்கலாக தெரிந்தது. குரு சந்தோஷோடு சென்றிருக்க வேண்டும். ஊர் முழுக்க சுற்றியலைந்துவிட்டு நேற்றிரவு அறைக்கு வந்து சேர்ந்தபோது மணி பதினொன்றைக் கடந்துவிட்டிருந்தது. அப்பொழுதே யூகித்தேன் இவன்கள் நாளைக்குக் கல்லூரிக்கு மட்டம் போடதான் திட்டமிடுவான்கள் என்று. ஆனால் இவ்வளவு பெரிதாக வேலை செய்வான்களென நினைக்கவில்லை. காலையில் நான் எழுவதற்கு முன்னே கிளம்பிப் போய் குருவும் அரவிந்தும் சரக்கு வாங்கி வந்துவிட்டான்கள். ராஜேஷையும் சந்தோஷையும் என்ன சொல்லி கவிழ்த்தான்களெனத் தெரியவில்லை. சரக்கென்றவுடன் நாக்கைத் தொங்கவிட்டுக் கிளம்பியிருப்பான் ராஜேஷ். ராஜேஷ் சரி என்று சொல்லிவிட்டால் சந்தோஷுக்கு வேறு வழியில்லை. அவனும் தலையாட்டிதான் தொலைக்க வேண்டும். இம்மாதிரியான சமயங்களில் பலத்த எதிர்ப்பு தெரிவிப்பது நான் மட்டும்தான். அதனாலேயே என்னைப் பொதுவாக கூட்டாலோசனைகளில் சேர்த்துக் கொள்வதில்லை. அவன்களாகவே காரியத்தில் இறங்கிவிடுகிறான்கள்.
இந்த மாதத்தில் மட்டும் இதுவரை எட்டு தடவை சரக்கடித்தாயிற்று. ஒரு கணம் உள்ளுக்குள் வீட்டு ஞாபகமெழவும் உடலில் ஒரு மெல்லிய அதிர்ச்சி புழுவைப் போல் ஊர்ந்தது. கல்லூரி விடுதியிலிருந்தபோதாவது விடுதி காப்பாளரது கட்டுபாட்டின் பெயரில் கொஞ்சம் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தோம். தனியாக அறையெடுத்து தங்கிய பிறகு, தட்டிக் கேட்பதற்கு நாதியில்லை. இஷ்டத்திற்குத் திரிந்து கொண்டிருக்கிறோம்.
அரவிந்த் என்னவோ முனங்கினான். தள்ளாட்டமான உச்சரிப்பில் அவன் பிதற்றலாக முனகியது யாரோ முன்பின் தெரியாத ஒருவரின் குரலில் தொலைதூரத்தில் எதிரொலித்தது. ஒன்றும் விளங்கவில்லை. தலை தனியாய் கழன்று விழுவது போன்ற பிரமை மூடிய இமைகளில் நிறக்குமிழ்கள் உடைந்து சிதற, ஏதோவோர் அரூப விசை என்னை இயக்குவதாய்ப் பட்டது. குளியலறைக்குள் சென்று கதவைத் தாழிடாமல் சாத்தினேன். ஷவரைத் திறக்கவும் மெல்லிய இரைச்சலோடு தண்ணீர் கீழே விழத் தொடங்கியது. சட்டை பேண்ட்டைக் கழற்றிவிட்டு வெறும் ஜட்டி பனியனோடு ஷவருக்கடியில் கால்களை நீட்டி உட்கார்ந்துக் கொண்டேன். சில்லிடும் நீர்த்துளிகளின் ஸ்பரிசம் நடுக்கம் கொடுத்தது. சில நிமிடங்களில் உடல் குளிருக்கு பழகிவிட தண்ணீர் என்னை இதமாக வருடியது. என்னுள்ளிருந்த சுயம் சார்ந்த சிறிய கவனமும் பிசகி நழுவுவதாய் உண்ர்ந்தேன். நினைவுகளின் காட்சி பிம்பங்கள் நீர்த்துளிகளிலிருந்து தெறித்து தரையில் விழுந்து அசுர வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருந்தன. என்னால் அவற்றைத் தொடர்ச்சியாக கவனித்து எனது பிரக்ஞையில் சேகரித்து ஞாபகங்களோடு பொருத்திப் பார்க்க முடியவில்லை. மின்னல் வெட்டுகளாய் காட்சிகள் என்னை கடந்து கொண்டே இருந்தன. பெரும்பாலும் யாவுமே நான் கண்ணீர் சிந்தும் காட்சிகள்தான். வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு விதங்களில் நான் அழுவதைப் பார்க்க எனக்கே கிளர்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு முறை அழும்போதும் நான் இதுவரை செய்த அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டவனாக உணர்கிறேன். உடன் இந்த உலகத்தால் கைவிடப்பட்ட ஒரு தூய ஆன்மாவாக என்னைக் கற்பனை செய்துகொண்டு பிறத்தவர்கள் யாவரையும் பெரும்பாவிகள் என உருவகம் பண்ணிக் கொள்கிறேன். திடீரென சரிந்து விழுந்துக் கொண்டிருந்த நிறமற்ற நீர்த்துளிகளில் ஒற்றைத் துளி மட்டும் வித்தியாசமாக சிவப்பு நிறத்தில் மின்னியது. அது இரத்தம் போன்ற ஒன்றாகவோ அல்லது இரத்தமாகவோ இருக்கலாம். வலது கால் பெருவிரல் நகத்தின் மேல் படர்ந்த அச்செந்துளி மெல்ல பெருத்து வீங்கத் தொடங்கியது.
அச்செந்துளியின் உள்ளே திவ்யாவின் பிம்பம் அலைந்தபடி இருப்பதை கொஞ்சம் நேரம் கழித்தே கணித்தேன்.
”லவ் கிவ்வுனு கிளம்புன நமக்குள்ள கான்டேக்டே இருக்காது..சரியா?”
திவ்யாவுடனான எனது பெரும்பாலான உரையாடல்கள் இந்த வாக்கியத்தோடுதான் நிறைவுறும். நானும் பொதுவாக உச்சுக்கொட்டி வைப்பேன். கடைசியாக பேசியபோதுகூட இந்த வாக்கியத்தை அவள் மறக்காமல் சொன்னாள். ஆனால் வழக்கமாக அவள் இதைச் சொல்லும்போது எனக்கு கோபமே வராது. கொஞ்சலான தோரணையில் சிறுபிள்ளை போல் பொய்க் கோபத்தோடு அவள் பேசுவதைக் கேட்கவே ரசமாயிருக்கும். என்ன நடந்ததோ தெரியவில்லை, அன்று அவளுடன் பேசியபோது என் மூளைக்குள் பாயும் நரம்புகள் சிக்கிக் கொண்டு சூடாகி வலியாய் உறுத்தல் உண்டாக்கின. மாலைக் காற்று அனலேற்றியதுபோல் கொதித்தது. தொலைபேசி இணைப்பை ஆத்திரத்தோடு துண்டித்துவிட்டு வீட்டிற்குள் சென்று எதை பற்றியும் யோசிக்காமல் படுத்து கண் அயர்ந்தேன். ஒரு மணி நேரம் கழித்து எழுந்ததும் காலையில் மோசஸ், திவ்யா தனக்கு அனுப்பியதாய் சொல்லி காண்பித்த குறுஞ்செய்தியின் ஒவ்வொரு வார்த்தையும் இராட்சஸ கற்பாறையென ஞாபகத்திற்கு வந்து எரிச்சல் கிளப்பியது. அதற்குப் பிறகு நான் திவ்யாவிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டேன். இது நடந்து இரு வருடங்களிருக்கும்.
இதற்கிடையே நான் பலமுறை சிந்தித்து பார்த்ததுண்டு. எனக்கு ஏன் திவ்யாவின் மேல் கோபம் வர வேண்டும்? அவள் என்னைக் காதலிப்பதாய் சொல்லியதில்லை. நானும் அவளிடம் என்னுடைய காதலைத் தெரிவித்தது கிடையாது. பின்னர் ஏன் அவள் என்னை ஏமாற்றிவிட்டதாய் எனக்குத் தோன்ற வேண்டும். அதற்குக் காரணமில்லாமல் இல்லை. நான் சொல்லாவிட்டாலும் நான் அவளைக் காதலிக்கிறேன் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளுடைய ஒவ்வொரு செய்கையிலும் நான் அதைக் கண்டிருக்கிறேன். “நீ என்னைக் காதலிக்கிறாய்தானே.ஆனால் பார் நான் அது தெரியாதது போல் எவ்வளவு இயல்பாய் இருக்கிறேன்” என்ற ஏளனம் அவளது உடல்மொழியில் அப்பட்டமாக வெளிப்படும். இதையொரு புதிராக உருமாற்றி அவள் என்னுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறாள். இலக்கேயில்லாமல் நானும் அந்தப் புதிரில் கலந்துகொண்டு என்னுடையப் பாதையை இன்னும் முடிச்சடர்ந்ததாக வகுத்து கொண்டிருக்கிறேன்.
திவ்யாவின் பிம்பம் சுமந்த செந்துளி நீர் சுழிப்பில் அடித்து செல்லப்பட்டது (அல்லது அப்படியெனக்கு தோன்றியது) வலது கால் பெருவிரலில் உறைந்த இரத்தத்தின் பிசுபிசுப்பை நான் உணர்ந்தேன். ஆழமான வடுவில் தண்ணீர் படவும் காந்தல் எடுத்தது.
ஈரத்தோடே சட்டையையும் பேன்ட்டையும் அணிந்துக் கொண்டு குளியலறையை விட்டு வெளியே வந்தேன். அரவிந்த் இன்னமும் தூங்கிக் கொண்டுதானிருந்தான். அடுக்களையில் ராஜேஷ் குழம்பு சட்டியை உருட்டிக் கொண்டிருக்கும் சத்தம் காதில் விழுந்தது. அடுக்களைக்கு சென்றேன்
“மச்சி என்ன குளிச்சிட்டு வர்றியா? …த்தா..தண்ணி தலையிலிருந்து எப்படி கொட்டுது பாரு..மயிரு தலை துவத்தித் தொலைக்க வேன்டியதுதானடா..?”
ராஜேஷ் சொன்னதையே காதில் வாங்கிக் கொள்ளாமல் நான் பாட்டிற்கு தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு அடுக்களையிலிருந்து கிளம்பினேன். பைக்கை எடுத்துக்கொண்டு வெளியேறியபோது வெயில் உக்கிரமேறி சிவந்திருந்தது. சதைக்குள் ஊடுருவித் தகிக்கும் வெயிலில் தடுமாறியபடியே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சிறிய கருப்பு திட்டு மண்தரையிலிருந்து மேலெழும்பி வெளிச்சத்தினூடே அந்தரத்தில் ஊர்ந்து செல்லத் துவங்கியது. பூச்சியோ என்னவோ என்று முதலில் சந்தேகித்தேன். ஆனால் அது உயிரிலி என்பதை என்னால் சீக்கிரத்தில் கிரகித்துக்கொள்ள முடிந்தது. ஒழுங்கற்ற வடிவில் பிய்த்தகற்றப்பட்ட நிலத்துண்டென உருக்கொண்டிருந்த அந்த இருள்திட்டை ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவனைப் போல் நான் பைக்கில் பின்தொடரலானேன். எந்த இடமென தெரியவில்லை. ஆட்கள் நடமாட்டமேயில்லாத வெறும் கட்டிடங்களும் வெயிலும் நிரம்பிய ஒரு பிரதேசத்திற்குள் நுழைந்துவிட்டது போலிருந்தது. திடீரென அந்த சின்ன கரும்பரப்பு நகர்வதை நிறுத்திக் கொண்டு அந்தரத்தில் மிதக்கலானது. வண்டியை உடனடியாக நிறுத்தும் பொருட்டு சடாரென பிரேக் பிடித்தேன். வேகத்தை மட்டுப்படுத்தாது நான் பிரேக் அடிக்கவும், உராய்வின் கிறீச் ஒலி எழும்ப மண் சாலையில் சின்னதாய் புழுதி படலம் உருவாயிற்று. சடுதியில் சுதாரித்துக் கொண்டு சமநிலையை எட்டினேன். இன்னும் அந்தரத்திலேயே இருந்தது அந்த கரிய இருள்திட்டு. கொஞ்ச நேரத்தில் அந்தரத்திலிருந்தபடியே அது மெல்ல சுழன்று சுற்றியது. நான் கண்ணிமைக்காது அதனையே பார்த்துக் கொண்டிருந்தேன். மெல்ல தொடங்கிய அதன் சுழற்சியில் இப்பொழுது அதிகப்படியான வேகம். இதுவரை என்னை அறுத்து பாய்ந்துக் கொண்டிருந்த வெயிலின் சுடுகதிர்கள் சென்ற இடம் காணவில்லை. அதன் சுழற்சியில் வேகம் அதிகரித்தபடியே இருக்க எங்கும் பரவி வியாபித்தது. இருள். மழைக்குப்பின் படரும் செம்மண்ணுலர் வாசம் இருளின் வழியே நாசியை நிறைத்தது. தலை கவிழ்த்து இமை மூடினேன். நொடிகளில் இமையைத் திறக்கவும், என் முன்னே கரிய நிறம் மட்டுமே மீதமிருந்தது. சற்று முன்னிருந்த கனன்று எரிந்த வெயில், என்னை இழுத்து வந்த கருநிலத் துண்டு, ஆளில்லாத கட்டிடங்கள், மண் சாலை எதையுமே காணவில்லை.வலது காலை தரையில் ஊன்றி பைக்கின் மீது அமர்ந்திருப்பதும்கூட ஒரு நினைவாகத்தான் தோன்றியதே தவிர என்னால் எதையும் உணர முடியவில்லை.
கையை வெளியே நீட்டினேன். நீர் வாலிக்குள் கையை நுழைத்தது போலிருந்தது. கையை உதறி உள்ளிழுத்துக் கொண்டேன். இருள் பெரும் கருந்திரவமாக, நதி சலசலத்துச் செல்வதைப் போல் என்னைச் சுற்றி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நினைத்தபோதே பயமாக இருந்தது. எனக்கு விருப்பமான அந்தப் பாடலின் இசை எங்கிருந்தோ கசிந்து வந்து என்னை அடைந்தது. அவ்வளவுதான் நான் விரும்பவே விரும்பாத அழுகலான அகோர எண்ணங்கள் என்னை நிரப்பி மூச்சுமுட்ட செய்தன.
d
திவ்யாவை நேரில் பார்த்தே பல மாதங்களாகிவிட்டன.மூன்று மாதங்களுக்கு முன் அவளாக முகநூலில் நட்பு கோரிக்கை விடுத்திருந்தாள். போன மாதத்தில் ஒரு முறை மின்னரட்டைக் கூட நிகழ்ந்தது. என்றாலும் எல்லாவற்றிலும் பொய்களும் வேஷங்களுமே பிரதானமாக இருந்தன ‘.உன்னால் நான் எதையும் இழந்து விடவில்லை’ என்பதை அவளுக்கு செவிலில் அறைவதைப் போல் உணர்த்திவிட வேண்டுமென நான் அதிகம் பிரயாசை எடுத்துக் கொண்டேன். ஆனால் அவளுடைய குறிக்கோள் வேறாக இருந்தது.’உன்னைப் போன்ற நிறைய பேரை நான் பார்த்துவிட்டேன். நீயும் அவர்களில் ஒருவனாய் இருந்துவிட்டுப் போவதில் எனக்கு எந்த ஆட்சேபணையுமில்லை’ என்பதை நிறுவவே அவள் பெரிதும் முயற்சி செய்தாள். இதை நான் எளிதில் கண்டுபிடித்து விடுவேன் என்பது அவளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இருந்துமென்ன?அவளுக்கு தேவைப்படுவதெல்லாம் விளையாட்டின் போதை மட்டுமே. மற்றபடி மனம் சொல்லும் புனித விதிகளையெல்லாம் அவள் சட்டை செய்வதே கிடையாது. இவ்வளவு தெரிந்தும் நானேன் அவளது போதைக்கு பலியாக விரும்புகிறேன்? ஒருவேளை எனக்கும் இந்த விளையாட்டு பிடித்திருக்கலாம். ஆனால் எங்களுக்குள் நிகழும் இந்த நாடகத்தில், நான் வெளிப்படுத்தும் அதீத ஜாக்கிரதையுணர்வும் அதன் பயனாய் எனக்கு அணிவிக்கப்படும் நாடகப் பூச்சும் என்னை நானல்லாத ஒன்றாகக் காட்டிய செயற்கைத்தன்மையும் அவளிடம் அறவேயில்லை என்பது பிரத்யேகமான கவனத்திற்குரியது. இயல்பிலேயே அவள் ஒரு அற்புதமான நாடகக்காரி.
நேற்று திவ்யா முகநூலில் ஒரு நிழற்படத்தைப் பகிர்ந்திருந்தாள். அந்தப் படத்தில் விசேஷமாய் ஒரு மயிருமில்லை. அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கிராபிக்ஸ் இதயத்தில் கத்தி சொருகப்பட்டிருக்க, அதற்கு குறுக்கு வாக்கில் நீ என்னைக் காதலிக்காமல் இருக்கலாம்; ஆனால் நான் உன்னை காதலிக்கக்கூடாது என்று சொல்லும் உரிமை உனக்கு கிடையாது” என்ற வாசகம் அடர்சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. இது போன்ற காதல் உணர்ச்சி ததும்பும் அடர்சிவப்பு படங்கள் இணையத்தில் எக்கச்சக்கமாக கொட்டிக் கிடக்கின்றன. நானும்கூட அவற்றை ஏராளமாகப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதை திவ்யா பகிரவும் எனக்கு கை கால்களில் நடுக்கம் எடுத்து கோபம் தலைக்கேறியது.(அதற்கு முந்தைய தினம் மோசஸ், தான் திவ்யாவுடன் கொண்டிருந்த உறவை முற்றிலுமாக முறித்து கொண்டுவிட்டதாக என்னிடம் சொல்லியிருந்தான். இந்த கருமாந்திரம் பிடித்தவனுக்கு திவ்யா பற்றிய எந்த விஷயமாக இருந்தாலும் அதை முதலில் என்னிடம் சொல்வதே பிழைப்பாய்ப் போய்விட்டது. இவனைச் செருப்பால் அடித்தால் எல்லாம் சரியாகிவிடும்)
இருள் மூழ்கடித்த நிலத்தில் தனியனாகச் சிக்கிக்கொண்டு அர்த்தமற்ற நினைவுகளின் பேய்க் காற்றெழுப்பும் பீதியில் ஒடுங்கிப் போய் நின்று கொண்டிருந்தேன். இரவுகளுக்காய் ஏங்கித் தவித்த நாட்களும் இருளில் நான் என்னுள் கண்டடைந்த ஆதிமனிதனின் வன்மமும் இப்பொழுது கவனத்திற்கு வந்து உடலைச் சிலிர்க்கச் செய்தன.
பைக் எங்கே போனதெனத் தெரியவில்லை. நான் தரையில் மண்டியிட்டபடி கிடந்தேன். கை கால்களில் எல்லாம் சோர்வு அப்பியிருந்தது. எனக்கு நேரெதிர் திசையில் வெளிச்சக் கீற்று சின்னதாய்த் தளிர்விட்டு மெலிதாய் படர்வதை கவனித்தேன். இருட் பெருவெளியில் அந்த சின்ன ஒளியை மிகத் தெளிவாய் பார்க்க முடிந்தது. அவ்வொளிக் கீற்றுக்குப் பின்னே நிழலுருவாய் திவ்யாவை கண்டு துணுக்குற்றேன். அவள் தனது கைகளில் பற்றியிருந்த மஞ்சள் மலர் ஒளி வீசி சுடர்ந்து கொண்டிருந்தது. கொஞ்ச கொஞ்சமாய் படர்ந்த ஒளிக்கதிர்கள் அவள் என்னை நோக்கி நடந்து வந்த பாதையெங்கும் நிறைந்து இருளைத் துடைத்து நிறங்களின் பிரவாகமாய் காற்றில் வழிந்தன.சாலையின் இருபுறங்களிலுமிருந்த கட்டிடங்களின் மேல் ஒளி படியவும், அவை சத்தமேயெழுப்பாது காற்றில் மணல் துகள் கரைந்து போவதைப் போல் பொடியாகி மறைந்தன.அவ்விடங்களில் இப்பொழுது பேரிரைச்சலோடு ஆகப்பெரும் விருட்சங்களும், புல் செடி தழைகளும் பூமியைப் பிளந்துக் கொண்டு முளைக்க காற்றில் நிலம் அதிர்ந்தசைவது தெரிகிறது. நான் திக்பிரமை பிடித்தவனைப் போல் எழுந்து என் கண்ணில் விரிந்த அற்புதத்தை உள்வாங்க சிரமப்பட்ட வண்ணம் பொருளற்று விழித்துக் கொண்டிருந்தேன்.பெருங்கானகமொன்று என் முன்னே உருப்பெற்று தன் பச்சை வாசத்தைப் பரப்பிய பொழுதில் திவ்யா பற்றியிருந்த மலரிலிருந்து வெளிப்பட்ட ஒளியலைகள் கானகத்தின் மேல் வண்ணக் கீற்றுகளைத் தெறிக்கச் செய்து மாய நர்த்தனங்கள் புரிந்தன. திவ்யாவிற்கும் எனக்குமிடையே இருந்த இடைவெளி குறைந்துகொண்டே வர, தடித்துச் செழித்த பெருங்கிளைகளும் முழங்காலுயர புல்செடிகளும் வளைந்து மடிந்து அவளுக்காக வழியமைத்து விலகுகின்றன. அரியணை நோக்கி நடக்கும் இளவரசியென காட்சியளிக்கிறாள் திவ்யா.அடர்த்தியான நிழலின் குளிர்ச்சியும் ஈர மண் ஸ்பரிசமும் கிறங்க செய்கின்றன.
திவ்யாவின் கையிலிருந்த மலரைத் தவிர காட்டின் வெளியில் வேறெந்த பூவும் பூக்கவேயில்லையென்பதையும் அவ்வொற்றை மலரிலிருந்தே பிறப்பின் பரிசுத்த வாடை ஊற்றெடுத்து பரவியதுடன் வண்ணத்திரட்சியில் நிலம் மூழ்கவும் அதுவே காரணமாயிருக்கிறது என்பதையும் நான் அறிந்து ஆச்சரியமடைந்த நொடியில்.. திவ்யா என்னருகில் வந்து விட்டிருந்தாள். அவளை ரொம்பவும் அழகாய் காட்டும் பிங்க் நிறச் சுடிதார் அணிந்திருந்தாள். கள்ளம் நிறைந்த கண்களோடும் அதற்குத் துளியும் பொருந்தாத உதட்டில் புன்னகையோடும் நிற்கும் அவளைச் சுற்றி ஒரு அரூப வலை விரிக்கப்பட்டிருக்கிறது  அதில் தவறியும் விழுந்துவிடக் கூடாது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
இந்தச் சூழலை எப்படி கையாள்வதெனத் தெரியவில்லை. அமைதியாக நிற்கிறேன். என் கையைப் பிடித்து அவளுக்கு மிக அருகில் என்னை வரச் செய்கிறாள். அந்த மஞ்சள் மலருக்குள் உற்று நோக்கும்படி சைகையினால் உத்தரவிடுகிறாள். நானும் அப்படியே செய்கிறேன். பூவிதழ்கள் விலக்கி மகரந்தங்களைக் கடந்து பார்க்கையில்,காட்சிகள் நீர்பிம்பங்களெனத் தெரிகின்றன. அங்குமொரு கானகம். அதில் கையில் மலரை ஏந்தியபடி பிங்க் சுடிதாரணிந்து நிற்கும் திவ்யாவிற்கு அருகில் நான்.எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. நிஜத்தில் நடப்பது அப்படியே அப்பூவில் பிரதிபலிப்பதாய் நம்பினேன். அபூர்வ கானம் பாடியபடி எங்களைக் கடந்து போன பெயர் தெரியாத பறவைகூட அம்மலருக்குள் தெரிந்தது. இன்னும் பார் என்று சமிக்ஞை செய்தாள். ஏதேதோ பேசியபின் கண நேரம் நீண்ட அமைதியைத் தொடர்ந்து மலருக்குள் இருந்த நான் மலருக்குள் இருந்த திவ்யாவை பற்றியணைத்து அவளது இதழ்களில் முத்தம் கொடுக்கிறேன். என் அணைப்பில் அவள் தவறவிட்ட மலர் கீழே விழவும், அதில் ஒளி குன்றுகிறது. அவளது நீளமான கைகளைத் துருத்திக் கொண்டிருக்கும் சிறிய விரல்கள் என் தலையைக் கோதுகின்றன.ஆடைகளை அவிழ்த்து உயிர்களின் மூலமான கானகத்தினுள்ளே நிர்வாணிகளாகிறோம்.அவளது சிறிய முலைகளின் காம்புகள் புடைத்து நிற்கின்றன. காதல்,வலி,. கண்ணீர், நம்பிக்கை, நம்பிக்கையின்மை, புரிதல், புரிதலின்மை, அன்பு, அன்பின்மை நிஜம், பொய், ஒளி, திரவம், காற்று, கோபம், அகங்காரம், சொற்கள், நினைவுகள், ஏமாற்றங்கள், சந்தோஷங்கள், சொன்ன பிரியங்கள், சொல்லாத ப்ரியங்கள், வெளிக்காட்டிய வன்மம், உள்ளுக்குள் நாறும் வன்மம்… யாவும் மறந்து வாழ்வின் ஒரே நாட்டமாய் அவளை ஆரத் தழுவிக்கொள்ளலானேன்.
நிஜத்தில் எனக்கு பயமாய் இருந்தது.அவளது இருப்பும் நான் கண்ட காட்சியும் ஒரு சேர என்னைக் குழப்பி வாட்டின. பூவிலிருந்து கண்களை விலக்கி, அருகிலிருந்த அவளைப் பார்த்தேன். கைகளை மார்போடு சேர்த்துக் கட்டியிருந்தாள். அந்த மலர் அவளது வலக்கையிலிருந்தது. ஏளனமா பரிதாபமா என்று அடையாளங்காண முடியாத உணர்ச்சியலை அவள் கண்களில் அசைந்தாடியது. ஏதோ சொல்ல வாயெடுத்து பின்னர் வேண்டாமென நினைத்துக் கொண்டேன். அவள் பலமாய் சிரித்தாள். கானகமெங்கும் எதிரொலித்த அச்சிரிப்பு பரிகாசமாய்ப் பெருத்து மலைப்பாம்பென என்னைச் சுற்றி வளைத்தது. இரு நிமிடங்களுக்கு விடாது சிரித்துவிட்டு பின்னர் நிலமதிர கோபமாய் அடிக்குரலில் இப்படிச் சொன்னாள் “நீ இன்னும் அதே கோழைதான்”. எனக்கும் ஆத்திரம் பொங்கியது. ஆனால் அதை எப்படி வெளிக்கொணர்வதெனப் புரியவில்லை. தாளமாட்டாத ஆற்றாமையில் உடல் நடுங்க விரல் நகங்களைக் கடிக்கத் துவங்கினேன். அவள் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள். என்னையும் மீறி என்னிலிருந்து வெளிப்பட்ட ஆக்ரோஷமான குரலில் கத்தினேன் “ச்சீ..போடி தெவடியாமுண்ட..”
என்ன நடந்தது ஏது நடந்தது என்பதெல்லாம் ஞாபகத்தில் இல்லை. சாலையோரத்தில் கட்டிட வேலைகளுக்காய் குவிக்கப்பட்டிருந்த ஜல்லி கற்களுக்கும்,செங்கற்களுக்குமிடையே மயக்கமாகி விழுந்திருந்தேன். எனக்கு மிக அருகே பை ஸ்டாண்டிடப்பட்டிருந்தது. அங்கே வேலை செய்துகொண்டிருந்த வட இந்தியரொருவர் என் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார். சாலையின் பக்கங்களில் கட்டிடங்களெல்லாம் அப்படியே முன்னிருந்த மாதிரியே சோகையாய் இருந்தன. நினைவு திரும்பிய வேளையில், காலில் சுருக்கென்று என்னவோ குத்தி வலி ஏற்படுத்தியது. காய்ந்து கருத்த இதழ்களை உடைய பூவின் காம்பு முள் வலது கால் பெருவிரலில் சொருகிக் கொண்டிருப்பதைக் கண்டேன். முள்ளோடு சேர்த்து பூவையையும் எடுக்க, அதன் இதழ்கள் உதிர்ந்து தூளாகின. முள் ஆழமாக இறங்கியிருக்க வேண்டும். பயங்கரமாய் வலிக்கிறது.
நன்றி : சொல்வனம்


Monday, March 26, 2012

அரசனின் கடல்நினைவுகள்


விதூஷகன் அதிகம் அறியப்படாத ஒரு எழுத்தாளர்.அவர் அதிகம் அறியப்படாமல் போனதற்குக் காரணம் அவர் அதிகம் எழுதாததுதான் என்பது என் கருத்து. அவர் ஒரே ஒரு நாவல்தான் எழுதினார். “அரசனின் கடல்நினைவுகள்” எனும் அந்த நாவலை எழுதி முடித்த நான்காம் நாள் மாரடைப்பு ஏற்பட்டு செத்துப் போய்விட்டார்.

பின் வருவது விதூஷகன் எழுதிய “அரசனின் கடல்நினைவுகள்” நாவலின் நாற்பத்தி யெட்டாவது அத்தியாயம்:


அரசன் அந்த பிரம்மாண்டமான குழியினை ஆழமான பார்வையில் நோக்கினான். கண்களின் எல்லையைத் தாண்டி விரிந்தது அந்தக் குழி.நூறடி ஆழம் ஐம்பதடி அகலம் என்கிற அளவில் கடற்கரையில் ஒரு குழி என்றால் அது எத்தனை பெரியது என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு பெரிய மரணக்கிணறை ஒத்திருந்தது அதன் வடிவம்.அந்தக் குழியைச் சுற்றிலும் முழங்கால் உயரத்திற்கு முட்கிளைகளால் வேலி போடப்பட்டிருந்தது.நெருக்கமாக வேயப்பட்டிருந்த அந்த வேலிக்குள் சின்ன எறும்புகூட நுழைந்துவிட முடியாது.வேலியின் நடுவே வாசல் போல் ஒரே ஒரு திறப்பு.குழிக்குள் இறங்குவதற்கு ஏதுவாக ஒரு நீளமான ஏணி அந்த திறப்பின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்தது.


அரசனுக்குப் பின்னே இராணுவத்தினர் சீராக அணிவகுத்து நின்றனர்.குழிக்குள் பெட்ரோல் ஊற்றப்படும் சத்தம் மழை பெய்வதைப் போல் இரைச்சலாகக் கேட்டது. அலைகளின் ஈரத்தோடு படர்ந்த கடற்காற்றை ஸ்பரிசித்த அரசன் பதற்றமடைந்தான். அவனது உடல் ஈரக்காற்றில் நடுக்கம் கண்டது.அதை மறைக்கும்பொருட்டு தனது கைகளை இறுக்கமாக்கிக்கொண்டான். மணலில் புதைந்தெழுந்த அவனது கால்கள் காற்றின் விசையில் தடுமாறின.கடற்காற்று இன்னும் வேகமெடுத்து வீசியது.


அரசன் ஆயாசத்தோடு தீக்குச்சியைக் கொளுத்தினான்.கடற்காற்றில் இரண்டு தீக்குச்சிகள் எரிந்த மாதிரியே அணைந்துபோயின.மூன்றாவது தீக்குச்சிதான் தீப்பந்தத்திற்கு உயிர் கொடுத்தது.சற்று நேரத்திற்கெல்லாம் நிறைய தீப்பந்தங்கள் தயாராகிவிட்டிருந்தன. குழியிலிருந்து முப்பதடி தூரம் தள்ளி,மரப்பலகைகளால் மேடை போல் அமைக்கப்பட்டு அதன் மேல் அரசனுக்கு சிம்மாசனம் போடப்பட்டிருந்தது. தீப்பந்தத்தை ஏற்றிய பின்னர் அரசன் தனது சிம்மாசனத்திற்கு சென்று அமர்ந்து கொண்டான்.கடலும் கடற்கரையும் அரசனின் காலடியில் இருப்பது போன்ற தோற்றம் உருவாகியது.அரசன் இராணுவத்தினரை நோக்கி சிநேகமாக கையசைக்கவும்,கரவொலிகள் எழும்பின.


தீப்பந்தங்களை ஏந்திய இருபது இராணுவ சிப்பாய்கள் ஏணிவழியே குழிக்குள் இறங்கினார்கள். முதல் ஆளாக குழிக்குள் இறங்கிய சிப்பாய் எண்:AS124 தனது வலது கையிலிருந்த தீப்பந்தத்தை விறகு குவியலுக்குள் வீசிவிட்டு இடது கையை வான் நோக்கி உயர்த்தி “ஹிரஸ்வானா ஜிகுலாதாத்”[எங்கள்தேசம் எங்களுக்கே] என்று அடிக்குரலில் கத்தினான். அவனைத் தொடர்ந்து வந்த பத்தொன்பது பேரும் அவனைப் போலவே தீப்பந்தத்தை வீசியெறிந்துவிட்டு “ஹிரஸ்வானா ஜிகுலாதாத்” என்று தொண்டை கிழிய கத்தினார்கள்.


தீப்பிடித்த விறகுகளிலிருந்து பரவிய அனல்காற்று தோலையே உருக்கியெடுக்கும் உஷ்ணத்தோடு பலமாக வீசியது.இருபது சிப்பாய்களும் ஜுரவேகத்தில் ஏணியேறி மேலே வந்தார்கள்.அரசன் தனது கைகளை அலட்சியமாகத் தட்டி பெருமிதமாக சிரித்தான்.நெருப்பு பலமாகப் பற்றிக்கொண்டு எரிந்தது.
   
நான்கு பச்சைக் கலர் இராணுவ டிரக்குகள் கடற்கரை மணலில் அலைகளை எழுப்பியபடி சீறிக்கொண்டு வருவது நெருப்பினூடே மங்கலாகத் தெரிந்தது. அரசனுக்கு நேரெதிர் திசையில் கரும்புகை பரவ தகித்துக்கொண்டிருந்த தீக்குழிக்குப் பின்னே கொஞ்ச தூரம் தள்ளி அவை நின்றுக்கொண்டன. டிரக்கினிலிருந்து இறங்கிய இராணுவ உயர்அதிகாரி எண்:AS-A4 அரசனின் முன்வந்து தலை குனிந்து “தீரஸ்கார் பரேல்”[மன்னர் வாழ்க] என்று பவ்யமாகச் சொல்லி அரசனுக்கு மரியாதை செலுத்தினான்.அரசன் வேலைகள் சீக்கிரம் ஆரம்பிக்கட்டும் என்று சைகையினாலேயே உத்தரவிட்டான்.


அரசனிடமிருந்து உத்தரவு கிடைக்கவும் நான்கு டிரக்குகளின் பின் கதவுகளும் சடுதியில் திறக்கப்பட்டன.அரசனின் பார்வை கதவுகளின் மேலேயே குத்திட்டிருந்தது. கதவுகள் திறக்கப்படவும்,ஒரே சீராக நின்றுகொண்டிருந்த டிரக்குகளிலிருந்து நூற்றுக்கணக்கான நிர்வாண பிணங்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக சரிந்து விழுந்தன.சீட்டடுக்குகள் கலைந்து விழுவதைப் போல் ஒன்றன்பின் ஒன்றாக ஒருசேர கவிழ்ந்து விழுந்த பால்பேதமற்ற அழுகல் பிணங்களின் சதைக்குவியல்களை அரசன் பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.நொடிப்பொழுதில் கடற்கரையே மிகப்பெரும் சவக்கிடங்கினைப் போலானது.


நாஜிகளால் கொலை செய்யப்பட்ட யூதர்களின் உடல்களை கண்டிருப்பீர்கள் தானே?அவற்றைப் போலவேதான் இருந்தன இந்தப் பிணங்களும்.கண்கள் இரண்டும் உள்ளே போய்,கன்னங்கள் ஒடுங்கியிருந்த சடலங்களில் எலும்புகளைக் கண்கூடாகப் பார்க்கமுடிந்தது.ஆண்களது உடல்களில் பிறப்புறுப்புகளைக் காணவில்லை. பிறப்புறுப்புகளை அறுத்து அவர்களைக் கொலை செய்திருக்க வேண்டும்.பெண்களது உடல்களில் அங்கங்கே தீக்காயங்கள் தென்பட்டன.அவர்களது பிறப்புறுப்புகளில் காய்ந்திடாத குருதியின் தடம் இருந்தது.இராணுவ உயரதிகாரி தனது சிப்பாய்களைத் துரிதப்படுத்தினார்.சிப்பாய்கள் பிணங்களை அள்ளி குப்பை பொறுக்கும் தள்ளு வன்டிகளில் போட்டு நிரப்பினார்கள்.இந்தப் பிழைப்பிற்கு மலம் அள்ளும் வேலை எவ்வளவோ தேவலாம் என சிப்பாய் எண்:AS057 மனதிற்குள்ளாக முனங்கினான். நூறு குப்பை வண்டிகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பிணங்கள் பிதுங்கலாகத் திணிக்கப்பட்டன.


மேளங்கள் கொட்டப்பட,சங்குகள் முழங்குகின்றன.சிப்பாய்கள் பிணங்களைக் குப்பை வண்டிகளோடு சேர்த்து தூக்கி குழிக்குள் போடுகிறார்கள்.தேவ தூதர்களின் தலைவரான மிரிசியோ அரசனருகே சென்று சன்னமான குரலில் “நிரிஜ்விஹியே லிதி சேதா மியிரியோம்” [கடவுளுக்காவே நாம் இதை செய்கிறோம்] என சொல்கிறார். அரசன் அதை ஏற்றுக்கொள்ளும் பாவனையில் இமைகளை மெல்ல மூடித் திறக்கிறான்.மிரிசியோ சுருக்கங்கள் நிரம்பிய தனது நடுங்கும் கைகளை அரசனின் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்கிறார்.


கழுகுகளின் சிறகுகளைத் தாங்கிய வானம் அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. தீயில் விழுந்த பிணங்கள் கருகி சாம்பலாகின்றன.மேகம் போல் படரும் சாம்பல் நிற தீ ஜுவாலைகளைக் காணும் அரசன் குதூகலம் அடைகிறான்.


குழுமியிருந்த  இராணுவத்தினரின் யாவரும் கூட்டாக “ஹிரஸ்வானா ஜிகுலாதாத்” என்று முழக்கமிடுகிறார்கள்.கடலின் நிசப்தத்தை தகர்த்த கோஷம் சாத்தான்களின் குரலில் அவ்வளவு கொண்டாட்டமாக ஒலிக்கிறது.அரசனின் தலைமையில் பாடல்களின் பின்னணியோடு ஒரு கார்னிவல் போல் அது நடந்து முடிந்தது.
******






Saturday, March 24, 2012

காதலாகி..



காதல் எதனால் தோன்றும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?நான் காதலின் தோற்றம் மறைவு இரண்டுமே ஒருவனின் தலைவிதியை பொருத்தே அமையும் என்று சொல்கிறேன். உங்களுடைய கருத்து என்னவாக இருந்தாலும் சரி,என்னுடைய இந்த நம்பிக்கை திட்டவட்டமானது.நான் ஏதோ சும்மா அடித்துவிடுகிறேன் என்று நீங்கள் தப்பர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டாம்.என்னுடைய அநுபவங்களின் மூலம் இதை என்னால் ஆணித்தரமாய் நிறுவமுடியும். ஏன் ரொம்பதூரம் போவானேன்நம்முடைய விக்னேஷ் கதையையே எடுத்துக் கொள்ளுங்கள்.கல்லூரியில் சேர்ந்த புதிதில் அவனது முகத்தைப் பார்த்ததும் அப்பிராணியாய் இருப்பான்போல என்றுதான் நினைத்தேன்.ஆனால் பழகிய பின்தான் தெரிகிறது அவன் எவ்வளவு பெரிய திருட்டுபயல் என்பது.சராசரியாக மாதத்திற்கு ஐந்து பெண்களை காதலிப்பது அவனது வழக்கம்.மார்ச் மாதத்தின் அவனது ப்ராஜெக்டுகளை சௌமியாஸ்ருதிப்ளெஸ்ஸிதீப்தி மற்றும் கிருபா என்கிற வரிசையில் வகைப்படுத்தலாம்.(பெண்ணியவாதிகள் கோபித்துக் கொள்ளவேண்டாம்.விக்னேஷின் பேச்சுவழக்கில் ஒவ்வொரு ப்ராஜெக்டும் ஒவ்வொரு காதல் என பொருள்படும்.எனக்கு இந்த வார்த்தை பிரயோகத்தில் உடன்பாடில்லை யென்ற போதும் அவன் இக்கதையில் ஒரு கதாபாத்திரம் ஆகையால் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது)

விக்னேஷ் கல்லூரியிலிருக்கும் நேரத்தில் காதலே கண்ணாய் தீயாய் வேலை செய்வான்.காலை இடைவேளையின் போது காண்டீன் வாசலில் நின்று எக் பப்ஸை கொரித்தபடியே சௌமியாவிற்காக காத்து கிடப்பான்.பிறகு மதியம் சாப்பிடுவதற்கு முன்பாக ஏ-பிளாக்கில் இருக்கும் நோட்டீஸ் போர்டை வெறித்தபடி(அதில் புதிதாய் எதுவும் இல்லாதபோதும்) ஸ்ருதிக்காக தவம் இருப்பான்.சாப்பாட்டிற்கு பிறகு எலக்ட்ரானிக்ஸ்’ லேப் பக்கம் போனால் ப்ளெஸ்ஸியை பிடித்துவிடலாம். தீப்தியும்,கிருபாவும் எங்கள் காலேஜ் கிடையாது.என்றாலும் எங்கள் கேம்பஸில்தான் இருக்கிறாள்கள்.என்ன குழப்புகிறேனாஒன்றும் பெரிய காரியமில்லை. எங்கள் கேம்பஸிற்குள் மொத்தம் மூன்று பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன.அதில் வாசலுக்கருகில் ஒட்டிவைத்தது போலிலிருக்கும் நீலநிற கல்லூரியில்தான் தீப்தி படிக்கிறாள்.கிருபா அதற்கடுத்திருக்கும் மெரூன்நிற கல்லூரியை சேர்ந்தவள்.எங்கள் வெளிர் பச்சைநிற கல்லூரிதான் கடைசியில் மூன்றாவதாக இருக்கிறது.எனவே கல்லூரி முடிந்ததும் நேராக மெரூன் கல்லூரிக்கு சென்றுவிடுவான் விக்னேஷ். அங்கேயிருக்கும் ஏடிஎம் சென்டர் பக்கத்தில் நின்று பர்ஸை துலாவியபடியே ஒரு பத்து நிமிடம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால்கிருபா வந்துவிடுவாள்.அதற்கு பிறகு அங்கிருந்து நகர்ந்து கேம்பஸின் பிரதான சாலையில் வரிசையாய் நிறுத்தபட்டிருக்கும் மஞ்சள் பேருந்துகளில் 49ம் எண் பேருந்தை தேடவேன்டும்.அதில் நான்காவது வரிசையில் சிப்ஸ் பாக்கெட்டோடோ அல்லது காஃபி கோப்பையோடோ தீப்தி உட்கார்ந்திருப்பாள்.அவளையும் பார்த்துவிட்டு ஆத்ம சந்தோஷத்தோடு விக்னேஷ் வீட்டுக்குச் செல்வதற்குள் மணி ஏழரையாகிவிடும். மறுபடியும் அடுத்த நாள் இதே காரியங்கள் செவ்வனே தொடரும்.

மாதம் ஐந்து பெண்களை காதலிக்க வேண்டுமென்பதுதான் விக்னேஷின் அடிப்படை நோக்கம் என்று சொல்லமுடியாது.ஆரம்பத்தில் ஒரு பெண்ணைதான் அவனும் காதலித்தான்.அப்புறம் அவள் வேறொருவனை காதலிப்பது தெரியவரவும் அவன் இன்னொரு பெண்ணைத் தேட நேர்ந்தது.சரி இவளும் போய்விட்டால் என்ன செய்வது?எதற்கும் இருக்கட்டுமே என்று மற்றொரு பெண்ணையும் பார்த்து வைத்தான்.இரண்டு வாரங்கள் போகவும் வேறு டிபார்ட்மென்ட்டை சேர்ந்த வாட்டசாட்டமான இரு வாலிபர்கள் அவனிடம் வந்து தங்களது கரகரப்பான முரட்டுக் குரலை அதிக கரகரப்பாக்கி ங்கொம்மாலே இனி உன்னைய அந்த பொண்ணுங்க பின்னாடி பார்த்தேன்..அவ்வளவுதான்” என்று எச்சரிக்கை செய்துவிட்டு சென்றனர். விக்னேஷிற்கு எப்பொழுதுமே வன்முறையில் விருப்பம் இருந்ததில்லை.எனவே அவனும் அவ்விரு பெண்களையும் அந்த கணமே மறக்க துணிந்துவிட்டான். தொடர்ந்து அவன் யாரையெல்லாம் காதலித்தானோ அவர்கள் எல்லோருமே ஆளுக்கொரு காதலனோடு திரிய அதில் கடுப்பானதன் விளைவாய் தோன்றியதுதான் இந்த மாத ப்ராஜெக்டுகள் திட்டம்.

விக்னேஷ் காதலுக்காக  பெண்களை தேர்ந்தெடுக்கும் வழிகளும் அதற்காக  அவன் சொல்லும் காரணங்களும் சுவாரசியமானவை.அதேப் போல் ஒரு பெண் தன்னை காதலிக்கிறாள் என்பதை அவன் ஊர்ஜிதப்படுத்தும் முறைகூட பயங்கரமாக இருக்கும். ஒருமுறை  பாத்ரூம் வாசலில் முண்டியடித்த கூட்டத்தோடு மன்றாடிக்கொண்டிருந்த என்னை மடக்கி ஒய்யாரமாய் சுவரில் சாய்ந்துக் கொண்டு மச்சான் இன்னைக்கு கிருபா சிவப்புக் கலர் சுடிதார் போட்டிருக்காடா.. நான் அவளை லவ் பண்ணலாம்னு இருக்கேன்..என்று ராஜக்குரலில் கம்பீரமாகச் சொன்னான். நான் திகிலில் உறைந்தே போனேன்.இன்னொரு நாள் அரக்க பறக்க  ஓடிவந்து தீப்தி  கால்ல பார்த்தேன்டா..ரோஸ் கலர் நெயில் பாலிஷ்..அவ என்னை சீரியஸா  லவ் பண்றான்னு நினைக்கிறேன் மச்சான்..” என்று மூச்சிரைக்க அவன் கூறிமுடிக்கவும்,அதிர்ச்சியில் என் கையிலிருந்த கிளாஸ் தண்ணீரோடு தவறி கீழே விழுந்து உருண்டது.

விக்னேஷின் காதல்களை கணக்கில்கொள்கையில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் யாதெனில் அவனின் அனைத்துக் காதல்களுமே வெற்றிபெறாதவை அதாவது ஒரு தலையானவை.வெறும் பார்வை என்பதைத் தாண்டி அதில் வேறெந்த விசேஷமும் கிடையாது.பைக்,பீச்,சினிமா போன்ற வழமைகளுக்கு வேலையே இல்லை.சுற்றி சுற்றி வந்து பெண்களை பார்ப்பதிலேயே அவன் முழு திருப்தியடைந்து விடுவான்.அதை தாண்டிய தேவையென்று அவனுக்கு எதுவும் கிடையாது.

பார்வை என்றதும் நீங்கள் ஏதோ சாதாரணமான காரியம் என்று நினைத்து விடக் கூடாது.ஒரு பெண்ணை பார்ப்பதற்கே அசாத்தியமான திறமைகள் வேண்டும். இதில் குரு கில்லாடி.தீவிரமாக காதலிப்பது என முடிவெடுத்து விட்டால் தனது கண்களில் கொஞ்சல் தோரணை தானாக ஏறும்படி பார்த்துக் கொள்வான்.திரும்பி பார்க்க வைப்பது மட்டுமே நோக்கம் என்றால்,முறைப்பான மிரட்டல் பார்வையில் எதிர்வரும் பெண்ணை அப்படியே துளைத்துவிடுவான்.மூன்றாவதாக ஒரு வகையுண்டு,அதில் குருவிற்கு ஒப்புதல் கிடையாது.வெறும் பார்த்தல் சுவைக்காக ஏங்கும் மூன்றாவது வகையினர் ஒளிந்து கொண்டு பார்ப்பவர்கள். அத்தகையவர்களின் கண்களில் அவர்கள் அறியாமலேயே ஒரு யாசகனின் பார்வை தோன்றிவிடும்.விக்னேஷை இந்த வகையில் அடக்கலாம்.

கல்லூரி தொடங்கி மூன்று மாதங்களிலிருக்கும்.அப்பொழுதுதான் ஓரளவிற்கு புதிய சூழலுக்கு பழகி சகஜமாகி நட்புறவுகள் அரும்ப ஆரம்பித்திருந்தன.எங்கள் குரூப்பில் குருவையும் ராஜேஷையும் தவிர வேறு யாருக்கும் பெண்கள் விஷயத்தில் அவ்வளவாக ஞானம் கிடையாது.ஒரு அழகான பெண் எங்களைக் கடந்துவிட்டால் கெட்டது.பொறைக்கு வாலாட்டும் நாயைப் போல ஆவென்று” வாயில் நீர் வழியே எங்கள் குரூப்பே அவளை துரத்த தொடங்கிவிடும்.இப்படி நாய் பிழைப்பே வாழ்ந்துக் கொண்டிருந்தால் எப்படி?அதற்கும் ஒரு மாற்றுவழி பிறந்தது.கல்லூரியில் நடந்த நடனபோட்டியின்போது நாங்கள் ஞானோதயம் அடைவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதுவொரு செவ்வாய்கிழமை.வசதியாய் அரங்கத்தின் கடைசி இரண்டு வரிசைகளை நாங்கள் ஆக்கிரமித்துக் கொண்டோம்.எங்களுக்கு பின்னாடி அலங்காரம் செய்வதற்கான ஒப்பனை அறை இருந்தது.அப்பொழுதுதான் அவள் அங்கே வந்தாள். வெள்ளைச் சுடிதார் அணிந்திருந்த நீளிடை அழகி.அவள் நடனம் பார்க்கும் பொருட்டு அந்த அறை வாசலில் நின்றிருக்க வேண்டும்.இல்லையெனில் அவளது தோழிகளில் யாரேனும் போட்டியாளராக இருந்து உள்ளே ஒப்பனை செய்துகொண்டிருக்கலாம். எது எப்படியோ அவள் அங்கே நின்றுக்கொண்டிருந்தாள் என்பதை தவிர அவளைப் பற்றி வேறெதுவும் எங்களுக்கு தெரியாது.ராஜேஷ்தான் முதலில் அவளை பார்த்தான். பார்த்ததும் மெதுவாய் என்னிடம் பின்னாடி பாரு மச்சி,அந்த வொயிட்டு” என்று கம்மிய குரலில் சொன்னான்நான்தான் காய்ந்து போனவனாயிற்றே..அடித்து பிடித்து சடாரென திரும்பி பார்த்தேன்.நொடியில் கவனித்தால் என்னோடு சேர்த்து ஆறு ஜோடி கண்கள் அவளை வெறித்துக் கொண்டிருந்தன.எல்லாவனும் காய்ந்துபோய்தான் இருந்தான்கள் போல. அவ்வளவுதான் அந்த பெண் விட்டால் போதுமென்று ஓடியே போய்விட்டாள். நடனப் போட்டி முடிவடையும் வரை அவளை எங்குமே காணமுடியவில்லை. என்ன மாமா அந்த ஃபிகர காணவே காணோம்” அரவிந்த் ஏமாற்றம் தோய்ந்த வார்த்தைகளில் கேட்டான்.த்தா அப்படியே கண்லயே கற்பழிக்கிற மாரி அத்தன பேரும் அடிச்சி பார்த்தா எப்படிர்றா இருப்பா”,அவள் போன ஆத்திரத்தில் கோபமாய் கத்தினான் ராஜேஷ்.அதற்கு பிறகுதான் நாங்கள் பார்வைகள் குறித்த பாலபாடங்களை கற்றுக்கொள்ள தொடங்கினோம்.இப்பொழுது நாய் பிழைப்பு கிடையாது.கௌவரமாக பெண்களை பார்க்க பழகிக்கொண்டோம்.காய்ந்து போன பார்வையில் மட்டும் எப்பொழுதுமே பெண்களை நோக்கக்கூடாது.அப்படி செய்துவிட்டால் அவர்கள் எளிதில் கண்டுபிடித்து நம்மை எளக்காரமாக நினைத்துவிடுவார்கள்.அதற்கு பிறகு அவர்கள் அகராதியில் நாம் கேணைக்கூதான் என்பான் குரு.  

பொதுவாக ஒரு குரூப் என்று இருந்தால் அதில் எப்படியும் ஒருவனது காதல் மட்டும்தான் வெற்றிப்பெற்றதாக இருக்கும்.மற்றதெல்லாமே தோல்விதான். ஒன்று காதல் மறுக்கப்பட்டிருக்கும்.அல்லது காதலை தெரிவித்திருக்கவே மாட்டான்கள். ஆனால் ஒவ்வொருவனுக்கும் ஒரு காதலி கட்டாயமாக இருப்பாள். இது எழுதப்படாத விதி.எங்கள் குரூப்பில் குரு தனது காதலில் வெற்றிக் கண்டிருந்தான்.ராஜேஷ் என்னதான் பெண்களின் உளவியலை புட்டுபுட்டு வைத்தாலும் அவன் எங்கள் கல்லூரியில் யாரையும் காதலிக்கவில்லை.பள்ளியில் உடன்படித்த பெண்ணையே இன்னும் காதலித்து வருவதாக சொல்லிக் கொண்டு அலைந்தான்.சரி நாம் குருவின் காதல் சமாச்சாரத்திற்கு வருவோம்.சாய்திவ்யாதான் அவனுடைய காதலி.காதல் பிராயத்தில் அவள் இவனுக்கு செய்த சேவகங்கள் இருக்கின்றனவே.அப்பப்பா!! அசைன்ட்மென்ட் எழுதி தருவது,ரெக்கார்ட் முடித்து கொடுப்பது,அவளுடைய வீட்டிலிருந்து இவனுக்கு மதியம் சாப்பாடு கொண்டு வருவது என இன்னும் நிறைய இத்யாதிகளை செய்து எங்களுக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்கினாள் மகராசி.அது மட்டுமில்லாது,வகுப்பு சமயங்களில் சைகை பாஷையிலேயே சம்பாஷணை வேறு.கம்யூனிகேஷன் தியரி வகுப்பில் காதர் சார் பாடமெடுக்கிறேன் என்கிற பெயரில் ஒருபக்கம் தாலியை அறுத்துக் கொண்டிருக்க,மறுபக்கம் இவர்கள் காதலிக்கிறேன் பேர்வழி என்று உயிரை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.இப்படியெல்லாம் நீண்டுக்கொண்டிருந்த இந்த அமரக்காதல் ஒரு சுபதினத்தில் முடிவிற்கு வந்தது. என்ன காரணம் என்ன எழவென்றே இறுதிவரை தெரியவில்லை.அரவிந்த் அவர்களது பிரிவுக்கு வாரமொரு காரணம் சொல்லிக்கொண்டிருந்தான்.

அரவிந்தும் எங்கள் குரூப்பில் ஒருவன்தான் என்றாலும் அவன் கொஞ்சம் விசேஷம்.எனவே அவனை பற்றிய ஒரு சிறுகுறிப்பு  இங்கே அரவிந்த்தான் எங்கள் குரூப்பின் தொடுக்கு’. தொடுக்குகள் இல்லாவிட்டால் நாட்டில் ஒரு பயலும் காதல் செய்யமுடியாது.ஒருவன் ஒரு பெண்ணை காதலித்தால்,அவளை அவன் எப்படி உஷார் செய்வான்?.அவள் போகுமிடமெல்லாம் பின்னால் போய்தானே. அப்படி அவளை தொடரும்போது தனியனாக போனால் கெத்தாகவா இருக்கும்?அதற்குதான் இந்த தொடுக்குகள்.இவர்கள் எப்பொழுதும் கூடவே இருப்பார்கள்.என்ன அவர்களுக்காக கொஞ்சம் செலவழிக்க வேண்டியிருக்கும்.அந்த தொடுக்கு’ அரவிந்த் எனும்பட்சத்தில் செலவு இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும்.எப்படியென்றா கேட்கிறீர்கள்?போனவாரம் நடந்த ஒரு விஷயத்தை சொன்னால்,உங்களுக்கே காரணம் பிடிபட்டுவிடும்.

எல்லோரும் சாயங்காலம் கல்லூரியை விட்டுக் கிளம்பிக்கொண்டிருக்கும் நேரம்.ஜகதீஷ் அன்றைய மாலைக்கான திட்டத்தை விவரிக்கத் தொடங்கினான்"மச்சி..நாலு மணிக்கெல்லாம் ஆவடி பஸ் ஸ்டாண்டுல நின்னோம்னு வையேன். அந்த 47சி ஃபிகர பார்த்துடலாம்.அப்புறம் அப்படியே ரயில்வே ஸ்டேஷன் போனா அங்க அருள் இருப்பான்."

ஜகதீஷ் நிறுத்தியதும்,அருள் திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை முன்வைத்தான் "ரயில்வே ஸ்டேஷன்ல அந்த எத்திராஜ் பொண்ணப் பார்த்துட்டோம்னா..எந்த எத்திராஜா? அதான்டா என் ஆளு..அந்த பிங்க் லாங்க்செயின் பேக்..ஆங்க்..அவதான். . அப்புறம் அங்கயிருந்து மறுபடியும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டோம்னா மணி அஞ்சரை ஆயிடும்.."

"அஞ்சரைக்கு பூந்தமல்லி பஸ் வந்துரும்.அந்த பாலிடெக்னிக் பொண்ணை.. ம்ம்..சுப்ரியாதான் மாமா..அவள பார்த்துட்டுக் கிளம்புனோம்னா படத்துக்கு சரியா டைமுக்குப் போயிரலாம்டா" –இது ராகவேந்திரா.

இவ்வளவையும் பொறுமையாய்க் கேட்டுக்கொண்டிருந்த அரவிந்த் எல்லோரும் பேசி முடித்ததும் கடைசியாக "கரெக்டு மச்சான்.முதல்ல பஸ் ஸ்டாண்டு போறோம் அங்க சென்னா சமோசா சாப்பிடுறோம்.அப்படியே ஷிப்டாகி ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் சாம்பார் வடை.அஞ்சரை ஆனதும் கிளம்பி மறுபடியும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பேக்கரியில சிக்கன் ரோல் சாப்பிடுறோம்..கே?" என்று திட்டத்தை தான் புரிந்துகொண்ட வகையில் எடுத்துரைத்தான்.

எல்லோரும் கலவரமாகி ஒரே சமயத்தில் பேந்தப் பேந்த முழித்து அவனைப் பரிதாபமாகப் பார்த்தான்கள்.ஆனால் வேறு வழியில்லை. அவன் சொல்வதைக் கேட்டுதான் ஆகவேண்டும்.ஏனெனில் தொடுக்குகள் என்பவர்கள் வெறுமனே ஒட்டிக்கொண்டு இருப்பவர்கள் மட்டுமல்ல.கொஞ்சம் விவகாரமானவர்களும்கூட.

இப்பொழுது நீங்கள் சாலையில் ஒரு நண்பரோடு நடந்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.யாரோ முன்பின் தெரியாத ஒரு அழகிய பெண் உங்களை கடந்துச் செல்கிறாள்.அறிமுகமேயில்லாத அவளைக் கைதட்டியோ அல்லது விசிலடித்தோ நீங்கள் அழைத்துவிடுகிறீர்கள்.அவள் திரும்பவும் இவர் உங்களை காதலிக்கிறாராம்’ என்று உங்கள் நண்பரை கைகாட்டிவிட்டு,பின்னர் யாருக்கு வந்த விதியோ என்று எதுவுமே நடக்காதது போல் உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு செல்கிறீர்கள்.இது உங்களுக்கு நிஜத்தில் சாத்தியமா?ஆனால் இந்த தொடுக்குகள் இதை சர்வசாதாரணமாக செய்வார்கள்.இந்த பண்பின் அடிப்படையிலேயே காதலுக்கான தூதுவர்களாக இவர்களே பெரிதும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

சரி இவ்வளவு தூரம் கதை பேசிக்கொண்டே வந்துவிட்டோம்.நெருக்கமான நண்பராகிவிட்ட உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறதுநானும் துரதிருஷ்டவசமாக ஒரு பெண்ணைக் காதலித்து தொலைத்தேன். நான்காவது ரௌண்டுக்குப் பிறகு காதல் கதை சொல்வது நாகரீகம் இல்லையென்றாலும் கேட்பது நீங்கள் என்பதால் தொடர்கிறேன்.அவளும் எங்கள் கல்லூரிதான்.பெயர் எல்லாம் தேவையில்லை. கை லேசாய் நடுங்குவது மாதிரி தெரிகிறது.மனதிலிருப்பதை அப்படியே கொட்டலாமென தான் முந்தைய வரிவரை நினைத்திருந்தேன்.இனி முடியாதுபோல் இருக்கிறது.சுருக்கமாக சொல்கிறேன்.நான் போய் அவளிடம் காதலை தெரிவித்தேன்.அன்று வெயில் பலமாக அடித்ததாக நினைவு.அவள் சம்மத்தித்திருக்கலாம் அல்லது பிடிக்கவில்லையென்றால் நாகரீகமாக மறுக்கக்கூட செய்திருக்கலாம்.பிரச்சனை அதோடு போய்விட்டிருக்கும்.அந்த பாழாய்ப் போனவளுக்கு என்ன நேர்ந்ததோ கடகடவென அழ ஆரம்பித்துவிட்டாள்.அவள் காறித் துப்பியிருந்தாள்கூட நான் கவலைப் பட்டிருக்கமாட்டேன். அவள் அழுததை பார்க்கவும் எனக்கு என்னவோ போலாகிவிட்டது.அதற்கு பிறகு நான் அவளை பார்ப்பதையே முற்றிலுமாக தவிர்த்துவிட்டேன். 

வெளியே என்னவோ சத்தம் கேட்கவும் நானும் ஜகதீஷும் வாசலுக்கு வந்தோம். சாலையோரத்திலிருந்த த்ரிஷாபடம் போட்ட டாட்டா இண்டிகாம் பேனர் முன் நின்றுகொண்டு நான்கு இளைஞர்கள்-என் வயதுதான் இருக்கும் அவர்களுக்கும்- சலம்பல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.நிறைபோதை என்பது பார்த்தவுடனே தெரிந்துவிட்டது. சிறிது நேரத்திற்குள் அவர்களில் கருப்பு சட்டை அணிந்திருந்த ஒருவன் சத்தம்போட்டு அழத் தொடங்கினான்.அழுகையினூடே த்ரிஷா படத்தை கைகாட்டி என் அஞ்சல மச்சான் அவ..” என்ற புலம்பல் வேறு.த்ரிஷா அவனுக்கு எந்த தீபிகாவாக எந்த வினோதினியாக காட்சி தருகிறாரோ.. தெரியவில்லை. ஆமாம் கேட்க மறந்துவிட்டேன்.நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களாசும்மா சொல்லுங்கள்.நான் அதை கதையாக எல்லாம் எழுதிவிடமாட்டேன்.
*****
துரோணா.