Monday, December 10, 2012

பிறழ்வு

அருண் மதியம் பார்த்த ரயில் நிலையம் இதுவல்ல.எரிந்துக் கொண்டிருந்த தண்டவாளங்களும் இறுகிப் போய் மூச்சழுத்தி திமிறிய ரயிலும் வண்ணங்களழிந்த முகங்களுமாய் அடிமனதை புரட்டிய ரயில் நிலையம் கூடடையும் பறவைகளின் வானத்தில் கரும்புள்ளியாய் தொலைந்து போய்விட்டிருக்க வேண்டும்.  பகல் பொழுதின் அனல் கோடுகள் உண்டாக்கிய இறுக்கம் முற்றிலுமாக தளர்ந்து போக இதமாக வீசி  வருடியது நள்ளிரவின் மென்காற்று.சப்தங்கள் வடிந்து போன இந்த இடம் அவன் கற்பனையே செய்திராத அளவிற்கு ரம்மியமாக இருந்தது.கழுத்தை திருப்பி கண்களை அங்குமிங்கும் மேயவிட்டவன் தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் மங்கலாய் நீண்ட இருளை ஊடுருவி பார்க்க முயற்சித்தான்.ரயில் நிலையத்தினிலிருந்து இறங்கி சாலைக்கு போகும் வழியில் மின்கம்பம் பக்கமாய் ஒரு  வண்டிக் குதிரை  வெம்மையாய் மூச்சுவிட்டு நின்றுக் கொண்டிருந்தது. வெள்ளை ரோமங்களின் மேல் பூசியது போலிருந்த பழுப்பு கோடுகள் அதன் உடல்வாகிற்கு கொஞ்சமும் பொருந்தமில்லாமல் அந்நியமாய் துருத்திக் கொண்டிருந்தன.குதிரைக்கு பின்னிருந்த பழைய வண்டியில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான் அதன் வண்டிக்காரன். குதிரைக்கருகே சாலை விரிவாக்கத்தில் இடிந்துப்போன ஒரு பழைய கட்டிடம் ஒடிந்து பெயர்ந்த செங்கற்களுக்கும் வளைந்த கம்பிகளுமாய் பார்க்க பரிதாபமாய் காட்சி தந்துகொண்டிருந்தது.சாய்ந்து கிடந்த சுவரில் கை ஊன்றி சமதளத்தில் நீளமாய் படிப்போலிருந்ததின் மேல் அருண் உட்கார்ந்துக்கொண்டான்.

அறைக்கு செல்லக்கூடாது என முடிவெடுத்ததும் அருண் முதலில் கடற்கரைக்குதான் செல்ல நினைத்தான்.அவன் ரயில் நிலையத்திற்கு வந்தபோது மணி மதியம் மூன்று.அப்பொழுது கிளம்பியிருந்தாலும் ஆறு ஆறரைக்கெல்லாம் கடற்கரைக்கு போய் சேர்ந்திருக்கலாம். இன்றைக்கு பௌர்ணமி வேறு.கடல் தேவ உருவாய் அலைகளை எழுப்பிக் கொண்டிருக்கும்.நிலவுக்கு கீழே நீல சமவெளியென நர்த்தனம் புரியும் கடல்தான் எவ்வளவு அழகு.ஆனால் அவனுடைய அனுபவம் வேறு மாதிரியானதாக இருந்தது.முன்னரொரு ஞாயிற்றுக்கிழமை பெசன்ட் நகர் கடற்கரையில் நின்று அவன் முழுநிலவை பார்க்க ஒரு நூற்றாண்டின் துயரம் மொத்தமாய் அவனை சூழ்ந்துக்கொண்டு நெருப்பில் நெளியும் புழுவாய் துடிக்க வைத்தது.ஒரு நூற்றாண்டு துயரத்தை ஒரே தினத்தில் ஒற்றை ஆளாய் சுமக்க நேர்வதன் அவலத்தை அதன் வலியை  அநுபவித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.அந்த கடற்காற்றிலும்கூட அவனுக்கு அப்படி வியர்த்துவிட்டது. தோலில் கைப்பையை  மாட்டிக்கொண்டு கால் அழுத்த நடக்கும் குடும்ப தலைவிகள், செல்போனில் கடற்கரையை படமெடுத்துக் கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள், வேகமாய் ஓடி தடுக்கி விழும் சிறுபிள்ளைகள், அதிர்ந்து சிரிக்கும் யுவன்கள்,பிதுங்கி வழியும் உடல் கொண்ட சுடிதாரில் பாந்தமாய் பொருந்தும் உடல் கொண்ட குச்சி போன்ற ஒல்லியான உடல் கொண்ட உடல் கொண்ட உடல் கொண்ட யுவதிகள் யுவதிகள் என தான் கண்ட அனைவருமே சந்தோஷமாயிருந்தது அவனை இன்னும் அதிகமாய் எரிச்சல் கொள்ள செய்தது. தனக்கு மறுக்கப்பட்ட ஏதோ ஒன்றால் எல்லோரும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தால் மனதளவில் புழுங்கி தவித்தான்.அதிலும் குறிப்பாக இளம்பெண்களின் ஆனந்தம்தான் அவனை தன்னை மிஞ்சிய சித்திரவதைக்கு ஆளாக்கியது.அந்த சிவப்பு நிற சல்வாருக்கு என்ன அப்படியொரு இளிப்பு?இங்கிருக்கும் அத்தனை பெண்களையும் கடற்கரையிலேயே வைத்து வன்புணர்ச்சி செய்ய வேண்டும்  என்று நினைக்கிற அளவிற்கு அவனது மனம் சடுதியில் வன்மம் கொண்டது. இந்த பெண்கள் எல்லோரும் வலியில் அலற அதன் எதிரொலி கடலிலிருந்து வெளிப்பட்டால் எப்படியிருக்குமென யோசித்து பார்த்தான்.சட்டென்று தான் ஏன் இப்படி வக்கிரம் பிடித்தவனாக மாறினோம் என்ற கேள்வி மனதுள் எழுந்து அவனை கழிவிரக்கம் கொள்ளச் செய்தது. எல்லாவற்றிற்கும் காரணம் இந்த கடல் தான்.கடலும் அதன் ஈரநிலமும் அவனது மனதை சாக்கடையாக்கி நாற்றமெடுக்கச் செய்தன. நடுக்கடலில் நின்று மூத்திரம் பெய்தாலொழிய இப்பொழுதிற்கு தன் ஆத்திரம் தீராது என்று தோன்றியது அவனுக்கு.

மதியம் தொடங்கி இரவின் இந்த கணம் வரை அங்கேயும் இங்கேயுமென வெறுமனே அலைந்து கொண்டிருந்ததிலேயே நேரம் தீர்ந்துவிட்டது. காலையில் கல்லூரிக்கு சென்றபோது சாதாரணமாக என்றைக்கும் செல்வதைப் போல்தான் கிளம்பினான்.கொஞ்சம் நஞ்சமென்றில்லாமல் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது உச்சிவெயில்.மதியம் சாப்பாட்டு இடைவெளியின் போது எல்லோரும் கேன்டீனுக்கு போய்விட இவன் மட்டும் தனியாய் வகுப்பிலேயே உட்கார்ந்து கொண்டான். என்னென்னவோ சிந்தனைகளில் உழன்று மனம் பித்து பிடித்தது மாதிரி அரற்றிக் கொண்டிருந்தது. கரும்பலகையில் சுருக்கங்களை உடைய அப்பாவின்  முகமும் எப்பொழுதும் கோபித்துக் கொண்டேயிருக்கும் அம்மாவின் முகமும் பூதாகரமாய் விரிந்து பயமுறுத்தின.கால்களை எழுத்து மேஜையின் இரும்பு கம்பியில் பிணைத்துக் கொண்டு இரு கைகளாலும் இருக்கையை மூர்க்கமாய் குத்தத் தொடங்கியவனின் வலது காது மடல் சிவந்துப் போய் நடுங்கி கொண்டிருந்தது. அப்பொழுதுதான் கிரி வகுப்பிற்குள் நுழைந்தான். தனக்கு அருகில் வந்து தனது தோல்களை அதிர்ச்சியோடு பற்றிய கிரியை தள்ளிவிட்டு அவன் சுதாரிப்பதற்குள் முகத்தில் ஒரு அறை விட்டான் அருண். இப்பொழுதுவரை கிரியை ஏன் அடித்தோம் என்பது அருணுக்கு தெரியாது.இன்னமும் கூட அந்த நிகழ்வு யாரோ மூன்றாவது மனிதருக்கு நடந்தது மாதிரியும் அதை எவனோ தன்னிடம் சொல்ல கேட்டது மாதியும்தான் இருக்கிறது.

குதிரை லேசாய் கனைத்தது.யாரோ நகரும் ஓசை கேட்டது.குதிரை வண்டிக்காரன் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். கசங்கிய லுங்கியும் அதற்கு சம்பந்தமேயில்லாத அடர் நீல சட்டையுமாய் காண்பதற்கே விசித்திரமாக இருந்தவன் நிச்சயமாக இந்நேரத்தில் அருணை இந்த இடத்தில் எதிர்பார்த்திருக்க மாட்டான். சொல்லபோனால்,அவன் எந்த வகையிலுமே இன்னொரு மனிதனின் இருப்பை அங்கே எதிர்பார்த்திருக்க மாட்டான்.அது சரி,அருண் மட்டும் இங்கொரு குதிரையையும் பைத்தியக்காரத்தனமாய் ஆடை உடுத்தியிருக்கும் அதன் வண்டிக்காரனையும் எதிர்பார்த்தானா என்ன?எல்லாம் விதி.வண்டிக்காரன் அருண் அருகே வந்தமர்ந்தான்.

- இந்நேரத்துல இங்க என்ன நைனா பண்ணுற?

- …..

-பதில் சொல்லாக்காட்டி எப்புடி? வூட்ல எதுனா ப்ராப்ளமா?ஓடியாந்துட்டியா?

சாராய வீச்சம் அருணை வெறுப்புற செய்தது.எதையும் கண்டுகொள்ளாத மாதிரி அமைதியாய் தன் பாட்டிற்கு கண்களை மூடிக்கொண்டான்.

சட்டென்று ராஜலட்சுமியின் ஞாபகம் வந்தது அவனுக்கு. அவன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தபோது உடன் பயின்றவள் ராஜலட்சுமி.அவள் மீது அவனுக்கு பிரத்யேக கவனம் என்று எதுவும் கிடையாது. சிறுநகரத்தின் வழமையான முகமும் வாளிப்பற்ற உடலும் கொண்டவளின் கண்கள் சின்னதாய் இருக்கும்.அந்த வருடம்தான் அவன் படித்துக்கொண்டிருந்த பள்ளியில் வந்து புதிதாய் சேர்ந்திருந்தாள் .எப்பொழுதும் சாதாரணமாய் இருப்பவள் திடீரென ஒரு நாள் காலை இடைவெளியின் போது ரிக்கியைப் போட்டு செமத்தியாக அடிக்க துவங்கிவிட்டாள்.சைக்கிள் கேரியரில் புத்தக பையை இறுக்கிக்கட்ட பயன்படும் எலாஸ்டிக் கயிறால் ரிக்கியின் கழுத்தை சுற்றிவிட்டு ரௌத்திரம் தெறிக்க தனது கையிலிருந்த இயற்பியல் புத்தகத்தினாலேயே அவனை அவள் சாத்தி எடுத்ததை பார்த்த சக மாணவர்கள் எல்லோரும் அரண்டே போனார்கள். யாருக்குமே எதுவுமே புரியவில்லை.சர்க்கஸில் பழக்கப்பட்ட யானை எதிர்பாராவிதமாக மதம் கொண்டு பார்வையாளர்களை தாக்க முற்பட்டால் எப்படியிருக்கும்? சில நொடிகளில் சாமியாடி ஓய்ந்த பெண்ணைப்போல் சரிந்து விழுந்தவள் கண்களில் நீர்த்துளிகள் மின்ன புத்தகத்தை வாசற்பக்கம் வீசியெறிந்தாள்.

கிரி கன்னத்தை தடவியபடியே எழுந்திருத்தபோது பாலாஜியும் இன்னும் மூன்று பேரும் வகுப்பிற்குள் வந்துவிட்டிருந்தார்கள்.அருணுக்குள் கோபம் சிகரெட்டில் எரியும் புகைப்போல் கசப்பாய் தகித்துக்கொண்டிருந்தது. நிலைமையை ஊகித்துக்கொண்ட  பாலாஜி உடனடியாக அருணை வயிற்றோடு சேர்த்து பிடித்துக்கொண்டான்.அவன் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்குள் அருண் அவனை எக்கித்தள்ளி வாசற்பக்கத்தில் இருந்த நீளமான கட்டையை கைகளில் பற்றிக்கொண்டு விலங்கிடப்பட்ட மிருகம்போல் உறுமினான்.முகமெங்கும் கருப்பாய் சிரிப்பு படர கட்டையை அவர்கள் பக்கம் வெறித்தனமாக அவன் வீசத் தொடங்கியதில்,நரேனுக்கு தாடையில் விழுந்தது அடி.பொறுத்து பொறுத்து பார்த்தவர்கள் இனியும் மாளாதென்பதை கிரகித்துக்கொண்டதும் காட்டுத்தனமாய் நடந்துக் கொண்டிருந்த அருணை சேர்ந்தாற்போல் ஒன்றாய்  அழுத்தி கட்டையை பலவந்தமாய் பிடுங்கி தூர அடித்தார்கள். திமிறிக்கொண்டிருந்த அருணின் முகத்தில் பளீரென அறைந்தான் முகுந்த். சாம் நெற்றியில் அடித்ததில் மோதிரம் கீறி ரத்தம் சொட்டியது.சூடுபட்ட பூனைப் போல் மெல்ல பதுங்கி ஒடுங்கலானான் அருண்.வெறியெல்லாம் வடிந்து போய் அப்போதைக்கு பயம் மட்டும் மீதமிருக்க அவனது உடல் சுருங்கி குறுகியது.

கொஞ்ச நேரம் சம்பந்தமேயில்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்த வண்டிக்காரன் சட்டென்று வானத்தை வெறித்துப் பார்த்து மௌனமானான். முழுநிலவைச் சுற்றி மேகங்கள் சதுர துளைகளாய் பரவிக்கிடந்தன. சற்றைக்குள் விருட்டென்று எழுந்தவன் வண்டிக்குள் விரிக்கப்பட்டிருந்த போர்வைக்கடியே கையை விட்டு எதையோ எடுத்து அதை தனது சட்டைக்குள்ளாக மறைத்து வைத்துக்கொண்டான்.அவன் முகத்தில் பரவசமோ பயமோவென கண்டறிய முடியாதபடிக்கு சமனற்ற கலவையாக உணர்ச்சியலைகள் எழுந்தோடிக் கொண்டிருந்தன.போன வேகத்திலேயே திரும்பி வந்தவன் மறுபடியும் அருணுக்கருகிலேயே அமர்ந்து கொண்டான்.மிதமிஞ்சிய ஜாக்கிரையுணர்வோடு கயிறு மேல் நடப்பவனினுடையதைப் போலிருந்தது அவனுடைய இயக்கம்.சட்டைக்குள் பத்திரமாய் ஒளித்து வைத்திருந்த ‘அதை’ மிகவும் லகுவாய் வெளியே எடுத்தான்.

இதையெல்லாம் கண் கொட்டாமல் கவனித்துக்கொண்டிருந்த அருணுக்கு ஆர்வம் தாங்கவில்லை.மெல்ல எழும்பி அவன் கைகளில் என்ன வைத்திருக்கிறான் என எட்டிப் பார்த்தான்.கண நேரத்தில் அவனுடைய எதிர்பார்ப்பு சப்பென்று ஆகிப்போனது. குறி சொல்பவர்கள் கையில் பிடித்திருப்பார்களே அந்த மாதிரியானதொரு சின்ன கருப்புத் தடி அது.இந்த குறி சொல்பவர்கள்,கிளி ஜோசியம் பார்ப்பவர்கள்,ரேகை கணிப்பவர்கள் மற்றும் இதுபோல் நிறைய இத்யாதி செய்வர்களின் மேல் அருணுக்கு எக்கச்சக்கமான அவநம்பிக்கை உண்டு.ஒரு கட்டத்திற்கு மேல் அளவற்ற நம்பிக்கையின்மையே வெறுப்பாக பரிமணித்துவிட்டது.ஆங்காரமான அசட்டைப் பார்வையில் வண்டிக்காரனை ஒரு முறை முறைத்துவிட்டு வேறுபக்கமாய் திரும்பிக்கொண்டான் அருண்.இருந்தும் அவனுக்குள்ளிருந்த குரங்கு மனம் அவனை சும்மாயிருக்கவிடவில்லை.கண்கள் நிலைக் கொள்ளாது வண்டிக்காரன் பக்கமாய் அடிக்கடி போய் வந்துக் கொண்டிருந்தன.கொஞ்ச நேரத்திற்கு பிறகு அநிச்சையாய் அவன் மேலேயே பதிந்துவிட்ட கண்களை அருணால் விலக்க முடியவில்லை.

அக்கரிய உருளைத்தடியை மெல்ல நீவிக்கொடுத்தபடியே மந்திரம் போல் எதையோ உதட்டிற்குள்ளாக வண்டிக்காரன் முனகிக்கொண்டிருந்தான். அவனது மொத்த உடலும் விறைத்து போயிருந்தது.இறுக்கமாய் மூடியிருந்த மணிக்கட்டில் பச்சை நரம்புகள் பாம்பு போல் வளைந்து புரண்டன.அருணுக்கு ஒரு பக்கம் இவனை நினைக்க லேசாக பயமாகவும் மறுபக்கம் பயங்கர வேடிக்கையாகவும் இருந்தது.சரியான கிறுக்கிடம் வந்து மாட்டிக் கொண்டோம் என்று தனக்குள்ளாக சொல்லிக்கொண்டான்.

ரயில் நிலையத்தை கடந்த ரயில் தண்டவாள சரளைக்கற்களுக்கு மேலிருந்த பாலீதின் கவர்களையும் நடிகைகளின் உடல்களை தாங்கிய செய்தித் தாள்களையும் கிழித்தெறிந்துவிட்டு தணலாய் தகித்து மறைந்தது.வெயிலை நினைத்தாலே அருணுக்கு அடிவயிற்றில் மண்வெட்டியால் கொத்தியது போலிருக்கிறது.மொத்த நகரத்தையும் வெயில் தன் பாலைக் கரங்களால் வதைக்க நிலத்தடியிலிருந்து அனல் கக்கும் தீ நாக்குகள் மேலெழும்பி காற்று மரம் வெளியென புலனில் தட்டுப்படும் யாவற்றையும் பொசுக்கி கருக்கி விட்டன.எங்கும் எதிலும் வியாபித்து வெயில் இப்பெரு நகரத்தை தனது வெப்ப மதில்ளின் ஆக்கிரமிப்பிற்கு கொண்டு வந்துவிட்டது.மனிதர்கள் எல்லோரும் புழுங்கி தீய்கிறார்கள்.நிழலையையும் நீர்மையையும் தேடியலைந்தவர்களுக்கு  கிடைப்பதெல்லாம் கெட்ட வாடையடிக்கும் பிசுபிசுப்பும் கசந்து வடியும் விஷமும் மட்டுமே.

அருகிலா தொலைவிலா என்று கணிக்க இயலாத ஒரு அலைவரிசையில் ரோந்து போகும் போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் அருணின் காதுகளை வந்தெட்டியது. சட்டென்று உடலெங்கும் பீதி பரவ ஒரு கணம் பயத்தில் அவன் உறைந்தே போய்விட்டான்.இவ்வளவு நேரம் எப்படி போலிஸ் பற்றிய நினைப்பே இல்லாமல் இங்கே உட்கார்ந்திருந்தோம் என்பதை யோசித்து பார்த்ததில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி மட்டுமே இறுதியில் மிஞ்சியது. பக்கத்தில் வண்டிக்காரன் இன்னமும் மூடிய கண்கள் மூடியபடியேதான் கிடந்தான்.இவனுக்கோ உள்ளே அல்லில்லை.போலீஸ் சும்மா சந்தேகத்தின் பெயரில் பிடித்து போனால்கூட அவ்வளவுதான் கதை முடிந்தது. உடனிருப்பவன் வேறு பார்ப்பதற்கு கஞ்சா விற்கும் பேர்வழி மாதிரி இருக்கிறான். போலீஸ் முடிவே கட்டிவிடும் இவன் நிச்சயமாக பச்சை பொறுக்கிதான் என்று. அப்புறம் இரவெல்லாம் அடித்து துவைத்து விடுவார்கள்.சமயங்களில் காவல் நிலையங்களில் ஒரு பால் வன்கலவியெல்லாம்கூட நடக்குமென அவன் கேள்வி பட்டிருக்கிறான். அடங்கவே அடங்காத வெறி கொண்டவர்கள் போலீஸ்காரர்கள். அவர்கள் எப்படி ஒருவனை வதைப்பார்களென நாம் யோசிக்கவே முடியாது.இப்படியாக அவனது மனம் என்னவென்னவோ அபத்தங்களை பற்றியெல்லாம் சிந்தித்து கவலையில் பதறியது. நடுங்கும் கை விரல்களின் நகத்தை கொஞ்சம் தோலோடு சேர்த்தே கடித்து துப்பினான்.

காலங்களிலேயே படுமோசமானது வெயிற்காலம் என்பதில் அவனுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது.வெண்பனி உலர் நினைவுகளையும் பெருமழை ததும்பும் காதலையும் கொண்டு வருகிறதெனில் வெயிலோ வாதைகளையும் ரணங்களையும் கொண்டுவருகிறது.தாரொழுகும் தீப்பிழம்பாய் சாலையில் ஊரும் வெயிலில் வயோதிகர்கள் மரணத்தை அதன் வலி மிகுந்த நிர்வாணத்தோடு அவ்வளவு பக்கத்தில் பார்த்தார்கள்.அவனிருந்த லட்சுமிபுரத்து தெருக்களில் தொடர்ந்து சங்கொலிகளும் தப்பட்டை சத்தங்களும் கேட்ட வண்ணமிருந்தன. போன வாரம் பண்டரிநாதன்.அதற்கு முந்தைய வாரம் ரமேஷண்ணின் பாட்டி. நேற்று செல்வியக்காவின் சின்ன தாத்தாவென ஊரே சவப்பெட்டிகளை சுமந்துச் சென்று புதைத்துக் கொண்டிருக்கிறது. சுடுகாட்டைவிடவும் சூன்யம் பிடித்தவை எழவு வீடுகள். வயசாளிகள் செத்த வீடுகளில் ஓலமுமில்லை கண்ணீருமில்லை. விழிகளும் தொண்டையும் இறுகி நீர்க்கட்டிப்போல் ஆகிவிட எல்லோரும் வெற்று சுவரையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மரணத்தின் ரகசிய குறியீடுகளை சாத்தான் அச்சுவரில் வரைந்து வைத்திருக்கிறான். எல்லோருக்குள்ளும் பயம் காட்டு முள் செடியைப் போல் வேரிட்டுப் படர்கிறது.

வெயிலை அவன் எவ்வளவு வெறுத்தான் என்பதை வார்த்தைகளில் சொல்லவே முடியாது.செத்துப் போன கிழவன் கிழவிகளை வெயிலே குருதி சொட்ட கொலை செய்தது என அவன் நம்பினான்.மரணத்திற்கும் பிறழ்வுக்குமிடையே பெரிய தூரமெல்லாம் கிடையாது.இரண்டிற்கும் நடுவே இருப்பது ஒரு மெல்லிய ஜிகினாத் தாள்தான்.கிரியை அருன் அறைய வெயிலும்கூட ஒரு காரணமாக இருக்கலாம். ராஜலட்சுமி ரிக்கியை அடித்ததும் ஒரு நெடுங்கோடையில் தான்.அப்படியென்றால் அனைத்து பிறழ்வுகளையும் வெயிலே உற்பத்தி செய்கிறது. கருனையை அதன் கடைசி துளிவரை உறிஞ்சி குடித்துவிட்டு எவ்வளவு இரக்கமற்றதாக உலவிக்கொண்டிருக்கிறது வெயில்?

திடீரென்று பக்கத்து சந்திலிருந்து வொள்ளென்று குரைத்தபடியே ஒரு வெள்ளை நாய் ஓடி வந்து இவர்களுக்கு முன்நின்றது.ஒலியற்று கிடந்த இருளின் திரையை கிழித்துக்கொண்டு அது தாவி வரவும் இவனுக்கு போலீசார் கழுத்தை திருப்பி முதுகில் மிதித்தது மாதிரியாகிவிட்டது.சைரன் சத்தத்திற்கு பயந்துதான் நாயும் ஓடி வந்திருக்க வேண்டும் என்று புரிந்துக்கொண்டு ஆசுவாசமடைந்தான்.அதுவரை சலனமே காட்டாமல் எவன் விட்ட வழியோ என்று மௌனச் சாமியார்போல் அமர்ந்திருந்த வண்டிக்காரன் நாய் வந்து குரைக்கவும் கிழே இருந்த கற்களில் பெரிதாய் ஒன்றை பொறுக்கி அதன் தலையை குறிவைத்து ஓங்கி எறிந்தான். குறி சிறிதும் பிசகவில்லை. நாயின் மண்டையை பதம் பார்த்துவிட்டது அந்த கல்.வீறலிட்டலறியபடி ஓடி மறைந்த நாய் அதற்கு பிறகு சத்தமே கொடுக்கவில்லை.

எல்லோரையும் போல் மிகவும் இயல்பாகத்தான் இருக்கிறோமென்றாலும் அடிக்கடி ஏன் இப்படி கட்டிலடங்காத ஆத்திரத்திற்குள்ளாக அமிழ்ந்துப்போய் பழி தீர்க்கும் சர்ப்பம் போல் ஆகிவிடுகிறோம் என்று யோசித்தாள் ராஜலட்சுமி.ரிக்கி எப்பொழுதுமே அமைதியாக இருக்கக்கூடியவன்.யாரைக் கேட்டாலும் வகுப்பிலேயே அவன்தான் நல்ல பையன் என்று சொல்வார்கள். ஒருவேளை அவன் அவ்வளவு நல்லவனாக இருந்ததுதான் தன் கோபத்திற்கு காரணமோ? தெரியவில்லை.

அன்றைக்கு சாயுங்காலம் தனக்கு விருப்பமான இரண்டு தோழிளோடு குறுஞ்செய்திகளின் வழியே அவள் உரையாடிக்கொண்டிருந்தாள்.ஒருத்தி ஹேமா மற்றொருத்தி ருக்கு.ஹேமாவிடம் தன் துயரங்களை அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டால் கொஞ்சம் ஆறுதலாயிருக்கும் என்று அவளுக்கு தோன்றியது. ஹேமாவால்தான் தன் கண்ணீரை புரிந்துகொள்ள முடியும் என்பதில் அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.அதே நேரம் ருக்குவிடம் தான் இயல்பாகவே இருக்கிறோம் என்பதை ஆழமாக நிறுவ வேன்டும்.எனவே அதிக பிரய்த்தனம் எடுத்து அவளிடம் ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருப்பது மாதிரி காட்டிக்கொண்டாள். இயல்பிற்கும் முகச்சாயத்திற்குமிடையே சிக்கிக்கொண்டு தத்தளிக்கும் கோமாளியினுடையதைப் போலிருந்தது அவளது செயல்பாடு.

ஒரு குறுஞ்செய்தியில் தனது வலிமிகு துயரக்கதையை அழுகை பொங்க ஹேமாவிற்கு தட்டச்சு செய்து விட்டு நிமிர்ந்தால் அதற்குள்ளாக ருக்குவின் காதல் சாகசத்தை ஏந்திய குறுஞ்செய்தி இவள் படிப்பதற்காய் சத்தமெழுப்பி அலைபேசியில் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.கன்னத்தை துடைத்துவிட்டு அவளுக்கு வாழ்த்துக்கள் எழுத ஆரம்பிப்பாள். துக்கத்திற்கும் சந்தோஷத்திற்கும் நடுவே ஊடாடும்போது தனது முகம் எப்படியிருக்கும்? நிலைக் கண்ணாடியில் கொடுவிஷம் பாரித்த நீலநிற நாகக்கன்னியை பார்த்தவள் சத்தம்போட்டு சிரித்தாள்.

-என்ன கண்ணு…இன்னமும் இங்கதான் இருக்கியா..?

இந்தமுறை அவனது குரலில் முன்பில்லாத தெளிவும் தீவிரமும் சேர்ந்து ஒலிப்பதாக தோன்றியது அருணுக்கு.

-இல்லங்க….ரூமுக்கு போகனும். கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன்.

-யப்பா பாருய்யா…அப்போ பேசாம கம்முனு இருந்த..இப்போ என்னடான்னா பேசுற. சரி முகமெல்லாந் வாடிபோய் கெடக்குதே எதுனா ப்ராப்ளமான்னு கேட்டா ஒன்னியும் சொல்ல மாட்டேங்குற…

-அதெல்லாம் ஒன்னுமில்லங்க.சும்மாதான் இங்க வந்தேன்.

-தோடா…அர்த்த ராத்திரில ரயில்வே டேஷனாண்ட வந்து உட்காந்துக்கினு சும்மா வந்தேன்னு கதை சொல்றியே செல்லம்.

லுங்கி மடிப்பிற்குள்ளிருந்து பாதி பிரிந்த நிலையிலிருந்த மாணிக்சந்தை எடுத்து வாயில் கொட்டிக்கொண்டு தொடர்ந்தான்.

-நீ என்னமோ கன்பீஸன்ல இருக்கேன்னு மட்டும் புரியுது. ங்கொம்மா….சும்மா நடந்துக்கினும் ஓடிக்கினும் இருந்தாலே இப்படிதான்…ஜனங்களோடு
சேர்ந்து கயிதையாய் ஆயிடுவோம்.அப்படியே வானத்துல பறந்தோம்னு வச்சிக்கியேன்..ஒரு தொல்லையும் கிடையாது…நம்ம குமாரை(குதிரையை தட்டிக்கொடுத்து) தரேன். ஒரு ரௌண்டு பறக்கிறியா?

பாவமாய் நின்ற குதிரையை ஓரக் கண்ணில் பார்த்து தனக்குள் தானே நொந்துகொண்டான் அருண். ஒரு பஞ்சு மூட்டையை தூக்கிக்கொண்டு இரண்டடி எடுத்து வைத்தால்கூட சொத்தென்று விழுந்து தெத்துவிடும்போல் இருந்தது அந்த குதிரை.இந்த லட்சணத்தில் அது வானத்தில் பறக்குமாம்.போதையில் மூளையேயில்லாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொண்டிருக்கிறான் லூசுக்கூ…

-என்னப்பா லூசுக்கூதியாட்டம் உளறான்னு நெனைக்கிறியா…சத்தியமா சொல்றேன்.. இந்த குதிரை சும்மா ஏராப்ளேனாட்டம் பறக்கும்.அதோ அந்த முக்குல ஒரு பயுப்பு இருக்குல்ல அதுக்கு பின்னாடி இருக்க வூட்ல ஒரு தெவடியா முண்டை இருக்கா.அவளை பின்னக்க வச்சிக்கினு குமார் மேல ஏறி ராட்டின சுத்தறாப்புல ஒலகத்தையே ரவுண்டடிச்சிருக்கேன்.

இதை சொல்லும்போது தீவீரம் மிகுந்த ஒரு மத நம்பிக்கையாளனின் குரலை ஒத்திருந்தது அவனது குரல்.உடன் பரவசத்தின் உச்சியில் மனம் உடைந்தழ காத்திருப்பவனை போல் இரத்த சிவப்பேறிய கண்களுடனிருந்தான். அருணுக்குள் சின்னதாயொரு சந்தேகம் தோன்றியது.ஒரு வேளை இந்த குதிரை உண்மையிலேயே பறக்குமா? அப்படி பறக்குமென்றால் நமக்கே சிறகு கிடைத்த மாதிரிதானே. சனியன் போல் பிடித்துக்கொண்டு உயிரை எடுக்கும் பயங்கள் யாவற்றிலிருந்தும் விடுதலை பெற்று எங்கேயாவது மனிதர்களே இல்லாத இடத்திற்கு பறந்துபோய் விடலாம்.அதற்கு பிறகு நமக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.உயர உயர பறந்து நட்சத்திரக் கூட்டங்களுக் கிடையே ஒரு துகள் மண்ணாய் உறைந்துவிட்டால்கூட நன்றாகத்தான் இருக்கும்.

அருண் வண்டிக்காரனை ஒருமுறை கரிசனத்தோடு திரும்பி பார்த்தான்.அவனுக்கு சட்டென்று நிதர்சனம் பொளீரென்று உரைத்தது.இவன் ஒரு குடிகாரன்.அதுவும் குடித்துவிட்டு நாதியில்லாமல் நடுத்தெருவில் கிடக்கிறான். முழுசாய் மப்பேறிப் போய் எதையாவது இவன் உளறி கொட்டினால் அதை அப்படியே நம்பிவிடுவதா?குதிரை பறக்கும் என்று வேறு யாரிடமாவது இவன் சொல்லியிருந்தால் கதையே வேறுமாதிரி இருந்திருக்கும்.ஒன்று இவன் முகத்திற்கு நேராகவே காறித் துப்பியிருப்பார்கள். இல்லையென்றால் வயிறு வலிக்கும்வரை சிரித்துவிட்டு பிறகு தங்கள் வேலையை பார்க்க கிளம்பியிருப்பார்கள்.ஆனால் நாமோ  இவ்வளவுதூரம் முட்டாள்தனமாய் சிந்தித்து வேண்டாத கனவுகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்து அருண் வருத்தம் கொண்டான்.

இப்பொழுது மிகவும் தெளிவாக பக்கத்திலேயே கேட்டது சைரன் சத்தம். தலையை திருப்பி பார்த்தால் தெருமுனையில் சிவப்பாய் ஒளிக்கீற்றுகள் படர அவனிருந்த திசை நோக்கி மெதுவாய் நகர்ந்து வந்துக் கொண்டிருது போலீஸ் ரோந்து வண்டி. ஒரு கணத்திற்கும் குறைவான நேரத்தில் மனம் இதுவரை சுழன்று கொண்டிருந்த எண்ணங்களிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டு நிகழ்காலத்திற்கு திரும்பியது. வண்டிக்காரனுக்கு அண்டையாய் பார்வையை உருட்டினான்.அவனோ கால்களுக்கடியே முகத்தை பொருத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தான்.இவனுக்கு சட்டென்று ஒன்றுமே புரியவில்லை. காரணமேயில்லாமல் மனதில் இரக்கம் சுரந்து அவனது உடலை எடையிழக்க வைத்தது. சைரனின் அலறல் நெருங்கி வருவதை உணந்துக்கொண்ட மறுநொடியிலிருந்து அதிவேகமாய் செயல்பட துவங்கினான் அருண். வண்டிக்காரனுக்கருகே கீழே கிடந்த அந்த கருப்பு தடியை இடக்கையிலெடுத்து கால்சராயின் பைக்குள் சொருகிக் கொண்டான்.எந்த நினைப்புமில்லாது வெறுமையாயிருந்த அவன் உள்மன அடுக்குகளில் ராஜலட்சுமியின் பிம்பம் பெருகி நிரம்பியது.எந்த நம்பிக்கையால் உந்தப்பட்டு இயங்குகிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் சேணத்தில் கால் வைத்து குதிரையின் மேல் தாவியேறி அமர்ந்துக் கொண்டான்.எப்பொழுது அதன் மேல் ஏறினோம்?எப்படி ஏறினோம் என்பதெல்லாம் அவனுக்கு சுத்தமாய் கவனத்திலில்லை.கண்களை இறுக மூடிக்கொண்டு கடிவாளத்தை முடுக்கி விட்டான்.வியர்வை நீரில் தளும்பியது அவனது முகம்.குதிரை ஒரு கணம் நகர்வது போலவும் மறுகணம் நகராதது போலவும் பிரம்மை தட்டியதில் சுத்தமாய் குழம்பிப் போனான். போலீஸ் வண்டியின் டையர் தரையில் தேய்ந்து கிறீச்சிட சைரன் சத்தம் அதிர்ந்தடங்கியது.

நன்றி : மலைகள்

No comments:

Post a Comment