Saturday, January 15, 2011

சாதாரணமானவன்


நான் சாதாரணமானவன்,
உங்களைப் போலவே.

இரும்பு கேட்டின் கம்பிகளை
இறுகப் பிடித்துக்கொண்டு,
என்றேனும் ஒருநாள்
இந்த பாதைகளனைத்தும்
மறைந்துவிடக்கூடுமென 
நம்பிக் கொண்டிருப்பவன்

உபயோகத்தில் இல்லாத
பழைய எண்கள் அனைத்தும்,
திரும்பவும் தொடர்புக்கொள்ளும் நிலைக்கு
திரும்பிவிட வேண்டுமென
ப்ரார்த்தித்துக் கொண்டிருப்பவன்.

என் அறையில் எந்த வாசமும் இல்லை.
என் டைரியில் எந்த கிறுக்கலும் இல்லை.
எந்த பாடலும், எனக்கு
எதையும் நினைவூட்டுவதில்லை.

நான் சாதாரணமானவன்
உங்களைப் போலவே.

கண்முன் விழுகின்ற சடலங்களில்
என் கைரேகைகள் இல்லை என்ற வகையில்
நான் நிபந்தனைகளற்ற நிரபராதி.

எல்லாம் சரியாகவே இருக்கிறது.
கடவுள்களின் மீது எனக்கு,
எந்த குற்றச்சாட்டும் இல்லை.
விதிமுறைகளை ஏற்பதில் எனக்கு,
எந்த ஆட்சபேனையும் இல்லை.

கொடுப்பதற்கும் எடுப்பதற்கும்
ஏதுமில்லாத தேசத்தில் நான் வாழ்வதற்கில்லை.
தாழிடும் ஓசை கேட்கும்பொழுதெல்லாம்
நான் கதவு தட்டுவதை நிறுத்திவிடுகிறேன்.
கையெழுத்திட நேரும்பொழுதெல்லாம
நான் அன்றைய தேதியை மறந்துவிடுகிறேன்.
அழுகை வரும்பொழுதெல்லாம்
நான் ஒரு கவிதையெழுத துவங்கிவிடுகிறேன்.

ஆம்.
நான் சாதாரணமானவன்,
மிகவும் சாதாரணமானவன்.
உங்களைப் போலவே.
                                                                                                                -துரோணா

Friday, January 7, 2011

சிதிலங்கள்

உரையாடல்களின் சொற்களுக்குள்ளாக,
நான் ஒளித்து வைக்கின்றேன்.
உன் மீதான குற்றச்சாட்டுகளை,
மீண்டும் நீ கண்டெடுக்கின்றாய்,
மன்னிப்பிற்கான மற்றுமொரு சாத்தியத்தை.


சதுரங்கத்தின் கட்டங்களுக்குள்ளாக,
நான் மாற்றியமைக்கின்றேன்.
அதன் கருப்பு வெள்ளை விதிமுறைகளை,
மீண்டும் நீ கடந்துவிடுகின்றாய்,
எளிதாக மிகவும் எளிதாக.

இன்னமும் இருக்கின்றது,
கொஞ்சம் ஏமாற்றம்.
நீ சொல்லும் உலர்ந்த பொய்களை,
நம்புகின்ற அந்தக் கணத்திற்குள்ளாக.

இன்னமும் இருக்கின்றது,
கொஞ்சம் துக்கம்.
நீ சொல்லும் நட்பின் உண்மைகளை,
சந்தேகிக்கின்ற காதலின் கண்களுக்குள்ளாக.

பிரிவின் இறுதி முத்தத்தில்,
சிதறிய உமிழ் நீரினை,நான்
எங்கும் தேடிக்கொண்டிருக்கின்றேன்,
தீராக் கண்ணீரின் பெருங்கடலில்.

நான் கட்டமைக்கின்றேன்,
என் நம்பிக்கைகளின் தீர்மாணங்களை.
எதிர்பார்ப்புகளின் நிச்சயமின்மைகளென
தொடர்கின்றன,நாட்களின் நினைவுகள்.

பிறழ்வுகளெனவும் கனவுகளெனவும்,
என்னை சூழ்ந்து பரவுகின்றன,
நம் காதலின் சிதைந்த இரவுகள்.

உன் கரம் பற்றுதலின் வெப்பம்,
அங்கு எரித்துக் கொண்டிருக்கிறது,
காற்றின் பெரு வெளியை.

முடிவுபெறாத ஒரு நூற்றாண்டு கவிதையென,
ஏங்குகின்றன ,உருக்குலைந்த என் இறுதி உணர்வுகள்,
தீனமாய் அழும் ஒரு முரட்டு கிழவனைப் போல்
                                                                                                                      -துரோணா