Saturday, December 25, 2010

இனியுமொரு பாதை


பாறைகளின் மேல்
எழுதப்பட்ட வார்த்தைகளுக்கு
பாறைகளின் கனம் கூடிவிடுகிறது
உறைந்த அச்சொற்களுக்குள்
பயணிக்க முடியாத நான்
தொலை தூரத்தில்
தனித்து செல்லும் மழையின் மேல்
என் கவிதைகளை எழுதுகிறேன்
சாபம் படிந்த துர்கனவு
பெருமழைக் கொண்ட இரவிலிருந்து
எனது கவிதைகளை
குருதி வழிய பிய்த்தகற்றி
தீயிட்டு கொளுத்துகிறது
எரியும் மழையில் எனது சொற்கள்
கருப்பாய் பொசுங்குகின்றன
மெல்ல வடிந்து போகிறது நெருப்பு
மெல்ல வடிந்து போகிறது மழை
ஆங்காரமாய் திமிறிய சொற்கள்
ஒன்றுக்கூட மீதமில்லையென்றானபின்
வெற்று வெளிநோக்கி கைகள் நீள
நான் பிரக்ஞையற்றவனாய்
மீட்சிக்காய் கண்ணீர் வழிய முழந்தாளிடுகிறேன்
ஈரச் சகதியில்
புதைந்து கிடக்கிறது ஒற்றை நட்சத்திரம்

Thursday, December 16, 2010

சிருஷ்டியின் கரங்கள்

தார் சாலைகள் கசிந்து உருகிய
நிழல்களில்லா ஒரு அகாலத்தில்
சிருஷ்டியின் கரங்களை நான் கண்டெடுத்தேன்
எங்கிருந்து வந்தன எனத் தெரியவில்லை,
எப்பொழுது பறிபோகும் என்பதிலும் நிச்சயமில்லை.

நிலையில்லாத தொடர் பிம்பங்கள்
இமைகளின்மீது படிந்தும் அகன்றும்
எதுவுமில்லாததிலிருந்து
எதை உருவாக்குவது?

கானகத்தை போலொரு கடல்
மலையை போலொரு நிலவு
நிர்வாண உடலை போலொரு வானம்
சாத்தானை போலொரு கடவுள்
சிருஷ்டியின் கரங்களை இறுக பற்றிக்கொண்டு,
உலகை முற்றிலுமாக மாற்றியமைக்கிறேன்.

பின்னர்,
என்னுடைய பழைய காலண்டரின் தேதிகளை,
சாக்கினுள் மறைத்து வைத்த கண்ணீர் துளிகளை,
சொல்ல நினைத்த பொய்களை,
கிழித்தெறிந்த கவிதைகளை,
மீண்டும் உருப்பெறச் செய்கிறேன்.
உண்மையென உலவுகின்றன, உருப்பெற்றவை.

பிரிவின் கடிதங்களையும்
அழிவின் செய்திகளையும்
மீள்தொடர்பின் முறிவுகளையும்
தீரா உவகையுடன்,நான் சிருஷ்டிக்கிறேன்

என் கனவிளவரசிக்காக,
முடிவில்லாத நதிகளை
இரவின் இசைக்குறிப்புகளை
எண்ணற்ற சேவகர்களை
நான் சிருஷ்டிக்கிறேன்

கனவிளவரசியை சிருஷ்டிக்க
முனையும் பொழுது மட்டும்
சிருஷ்டியின் கரங்கள் நடுங்குகின்றன.

இறுதியில்,
என்னை நானே சிருஷ்டிக்கிறேன்,
கொஞ்சம் கண்களை மாற்றி.
என்னை நானே சிருஷ்டிக்கிறேன்,
கொஞ்சம் தேகத்தை மாற்றி.
என்னை நானே சிருஷ்டிக்கிறேன்,
கொஞ்சம் என்னை மாற்றி.
இருந்தும், நான் நானாகவே இருக்கிறேன்.
நான் நானாகவே.

பெருங்குரலெடுத்து அழுகிறேன்.
சிருஷ்டியின் கரங்களை தூக்கியெறிகிறேன்
அவை குரூரமானவை
அவை இரக்கமற்றவை.

எரிதழலின் ஜீவாலைகளை கக்கியபடியே
துரத்துகின்றன, என் சிருஷ்டிகள்.
அழிவின் கரங்களை தேடி அலைகிறேன், நான்
                                                                                                                         -துரோணா

Saturday, December 11, 2010

கானல் திரை



அந்த நிலவின்
அதே படிமம்
நான் பார்த்த
அதே மலைதான்
இன்னுமொரு முறை
உயிர்த்தெழுகிறது,
முந்தைய இரவின்
சத்தியத்தை காப்பாற்ற.
 தன் சாம்பல் கரையில்
புரளும் குருதியை
கழுவிக்கொண்டிருக்கின்றன
நுரை அலைகள்.
வார்த்தைகளின் ஞாபகங்களை,
கையிலேந்தியபடியே திரிகின்றான்
ஒரு அம்மண துறவி.
அவனை தொடர்ந்து
அவ்வழிகளில் படர்கின்றன,
வெறுப்பின் எச்சங்கள்,
அன்பை நோக்கிய கனவுகளை தாங்கி.
வானாக
பூமியாக
சூரியனாக
நதி ஓடைகளாக
எங்கும் மீதமிருக்கிறது ஒரு குரல்.
மிகவும் எளிதாக
ஒரு காதலை
ஏற்கவும் மறுக்கவும்
நாம் பழகிக்கொண்டோம்.
அந்த நிலவின் அதே படிமம்
நான் பார்த்த அதே மலைதான்
இன்னுமொருமுறை மடிந்து விழுகிறது.
                 
                                                                                                                                         -துரோணா

Friday, December 3, 2010

நினைவின் இசை


தேநீர் ஆறிக்கொண்டிருக்கிறது
மழை இன்னமும் நின்ற பாடில்லை
உனது கோபங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்
அந்த உரையாடல்கள் பொய்யாகவே இருக்கட்டும்
உன் ஸ்பரிசம்
உன் தீண்டல்
உன் காதல்
இனி யாவும் ,இந்த நொடியில் மாய்ந்துவிடட்டும்
கருப்பு வெள்ளையாக
சாலையில் வானவில் ஊர்ந்துக்கொண்டிருக்கிறது.


                                                                                                          -துரோணா

இளவேனில்

இதுவரை யாரும் வந்திராத பிரதேசத்தின்
இருளில் கனன்றுக்கொண்டிருக்கிறது
ஒரு குரல்
கண்ணாடி பிம்பங்கள்
சிதறியிருந்த அந்த நிலத்தினில்
தன் நிழலினை தேடிக்கொண்டிருக்கிறது
ஒரு தேகம்
ஆளற்ற நாற்காலிகள்
கோப்பைகளை நிரப்பிக்கொண்டும்
காலங்களை பருகிக்கொண்டும் காத்திருக்கின்றன
இளவேனில் வந்துவிட்டது.

Sunday, November 28, 2010

சாம்பல் நிலவு


அன்றைய இரவு
ஒரு நிகழ்வினை
சாட்சியாக்கிக் கொண்டிருந்தது
கோப்பைகளில் நிரம்பி
வழிந்தோடிய மதுவில்
நம்முடைய முகங்கள்
சிதறி உடைந்தன

திரவமாய் ஊர்ந்து வந்த
பழைய நினைவுகளின்
அத்தனை குற்றச்சாட்டுகளும்
போதையாய் நூல்போல் திரிய
நாம் யாவற்றையும்
மன்னிக்க தயாரானோம்

அப்பொழுது ஒரு வயலின் இசைக்கப்பட்டது
உடன் ஒரு அழுகை குரலும்
அது நீயாகவோ அல்லது
நானாகவோ இருக்கக்கூடும்

மீண்டும் கோப்பைகள் நிரப்பப்பட்டன
ஒரு துறவியின் குரூரத்தோடும்
ஒரு கோமாளியின் வன்மத்தோடும்
நான் உன் கண்களை சந்திக்கிறேன்

நீயும் அப்படியே என்னை பார்க்கிறாய்

மூச்சழுத்த உயிரின் பாதையில்
நாம் ஒன்றாய் பயணிக்கிறோம்
ஈரம் வற்றிபோன உன் இதழ்களிலிருந்து
காமத்தின் கொடுநஞ்சை நான் உறிஞ்செடுக்கிறேன்

உன் செழித்த முலைகளில்
நான் முகம் புதைக்க
என் கண்ணீரின் வெம்மை
உன் வயிற்றில் படர்கிறது

இருட்டிற்குள் தொலைந்து
வெகுதூரம் சென்று
மீண்டும் பேய்க்கூச்சல் ஒலிக்கும்
இருளையே கண்டடைகிறோம்
 
புணர்ச்சிக்கு பின் முத்தம் கொடுக்க
நீ நெருங்குகையில்
என் பலம் மட்டும் கொண்டு
உன் கண்ணத்தில் ஓங்கி அறைகிறேன்
வெறிகொண்டெழும் நீ
என் முகத்தில் எட்டி உதைக்கிறாய்

இரண்டு ராட்சஸ விலங்குகள்
வனமதிர மூர்க்கமாய் மோதிக் கொள்ள
அவற்றிற்கு சாராயத்தை
ஊற்றிக்கொடுத்து
பின் வேட்டையாடி சதையறுக்கிறான் கடவுள்

Saturday, November 27, 2010

கொஞ்சம் கிறுக்கல்

ஒரு நிராதரவு
ஒரு நிசப்தம்
ஒரு புறக்கணிப்பு
ஒரு கேள்வி
எல்லோரும் கடந்துப் போய்விட்டார்கள்.
*****
அங்கு தனியே பேசிக்கொண்டிருக்கிறது
ஒரு இரவு
அங்கு தனியே வரைந்துக்கொண்டிருக்கிறது
ஒரு சுவர்
அங்கு தனியே அழுதுக்கொண்டிருக்கிறது
ஒரு பிரேதம்
*****
கனவின் பகலில்
இரவு விழித்துக்கொண்டிருக்கிறது
துர்கனவாக...
*****
இதுவரை ஒருபோதும்
நான் அப்படி அழுததில்லை
இனியும் அழபோவதில்லை
இன்றுமட்டும் அழுதுவிட்டுப் போகிறேன்
உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள்
*****
சின்னதாய் ஒரு சிறகு
சின்னதாய் ஒரு வானம்
நடந்து செல்ல மிகப்பெரிய பூமி
*****
நினைக்கச் சொல்லும் உறவுகளை
மறந்துவிடவே நான் விரும்புகிறேன்.
குறைந்தபட்சம்,
மறந்துவிட்டதாக நம்புவதை...
*****
எனக்கென ஒரு போர்
எனக்கென ஒரு நிழல்
எனக்கென ஒரு காதல்
எனக்கென ஒரு காகிதம்
எனக்கென ஒரு பைத்தியக்கார விடுதி
*****
நானும் அதை நம்பினேன்
நீயும் அதையே வலியுறுத்தினாய்
ஆனால் யாரோ பொய்யாக்கிவிட்டார்கள்
அலைகள் கடலை வெறுக்கின்றன
*****
ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவேன்டும்
சேமித்து வைக்க பின்னர்
கிழித்து எறிய...
*****
நீ என்னைப் பற்றி
அவ்வளவு பொய்கள்
 சொல்லியிருக்க வேண்டியதில்லை
எனது உண்மைகள்
அதைவிடவும் கசப்பானவை
*****
                                                                                                              -துரோணா

Tuesday, November 16, 2010

இரை


வலி வேண்டும் கோரப் பசியினை
தன் நாவினில் படரவிட்ட, ஓநாய்கள்
இரத்தவாடை கண்டு
உங்களை துரத்துகின்றன

நீங்கள் சிங்கமோ சிறுத்தையோ கிடையாது
எனவே ஓடுவதை தவிர உங்களுக்கு
வேறெந்த வழியும் தோன்றுவதில்லை

அந்த ஓநாய்களுக்கு
எப்படி புரியவைப்பீர்கள்?
உங்களுக்கு கவிதையெழுத தெரியும் என்பதை
ஓநாய்களுக்கு காகிதம் தேவையில்லை
ஏனெனில் அவற்றில் இரத்தம் இருப்பதில்லை

அந்த ஓநாய்களுக்கு
எப்படி புரியவைப்பீர்கள்?
ஆதாரம் வேறு நிகழ்வு வேறு என்பதை
ஓநாய்களுக்கு சாட்சியங்கள் தேவையில்லை
ஏனெனில் அவை ஆய்வாளர்களாக இருப்பதில்லை

ஓநாய்கள் ஒன்றும் தீர்ப்பு எழுதும் நீதிபதிகள் அல்ல
அவை தூக்குக் கயிறுகள்...
ஓநாய்கள் ஒன்றும் இயேசுவின் சீடர்கள் அல்ல
அவை சிலுவைகள்.....

தனது கூரிய நகங்களால்
உங்களது சதை நரம்புகளை
அறுத்தெறிய அவை அலைகின்றன

திடமான வாக்குறுதியின் அவநம்பிக்கையுடன்
புகைக்கும் அப்பாவின் கோபத்துடன்
ப்ரூட்டஸ் வாளின் சாபத்துடன்
பிறழ்வின் ஒழுங்கற்ற வார்த்தைகளுடன்
உங்கள் சாலையின் பாதையெங்கும்
பதிந்திருக்கின்றன அந்த ஓநாய்களின் கண்கள்.....

அதுவொரு கேள்வியென்றோ
அதுவொரு எதிர்பார்ப்பென்றோ
அதுவொரு உரிமையென்றோ
நீங்கள் நம்பிவிடாதீர்கள்....

அப்பொழுதென்று, மறந்துவிட்ட
பைபிளின் வசனங்களையோ
கீதையின் தத்துவங்களையோ
நினைவுபடுத்திக் கொண்டிருக்காதீர்கள்....

அந்த ஓநாய்களை பொருத்த மட்டில்
நீங்கள் பிரசங்கியோ\காரணியோ கிடையாது
வெறுமனே இரத்தம் கொண்டிருக்கும் இரை...
எனவே எழுந்து ஓடுங்கள்
அது கனவாய் இருப்பினும் பரவாயில்லை
ஓநாய்கள் உங்களை துரத்துகின்றன......

இரவின் காலம்

நம் நினைவுகள்
பயணித்த காடுகள் யாவற்றிலும்
ஒரு தீராத வெளிச்சம் இருந்தது
ஒரு எரிமலை திரவம் போல்
அது ,மெல்ல அசைந்து
பின் கரைந்து , காற்றினில்
நகரும் மழையின் சாரலில்
தன் வெப்பத்தினை பரப்பிய வேளையில்
நான் உன்னிடம் ஒரு உண்மையை 
சொல்லியிருக்க வேண்டும்
........அது 
முடிவற்ற இரவின் காலம்
                                                                                          -துரோணா

Thursday, November 4, 2010

சாத்தான் குகை

அந்த குகையின்
பாறைகளெங்கும் படர்ந்திருந்த
செடிகளின் வழியே பரவுகிறது
ஒரு பச்சை வாசம்

சின்னஞ்சிறு கற்களுக்கடியே
பதிந்திருந்த மணல் துகள்கள்
யாவற்றிலும் படிந்திருக்கிறது
ஒரு ஈர சாயம்

குகை வாயிலில்
மானின் கூரிய கொம்புகள்
மாட்டின் விலா எலும்பொன்றை
நீ குகையினுள்ளே கண்டெடுத்தாய்
மற்றொரு இடத்தில்
நரியின் அறுபட்ட வாலும்
காக்கையின் அலகும் ஒட்டிக்கிடந்தன
தரையினில் சிதறியிருக்கும்
புலியின் நகங்கள் வேறு
அவ்வப்போது நமது கால்களை  கிழிக்கின்றன

இத்தனை உயிரினங்களும்
சேர்ந்து வாழந்த அல்லது
மடிந்த அதிசயத்தை
நாம் பாதையெங்கும்
சிலாகித்து பேசிக்கொண்டே போகிறோம்

நமது கண்களில் சிக்காது
அந்த குகையின் சுவர்களில்
ஒளிந்துக்கொண்டிருக்கிறது
ஒரு இறந்த மனிதனின் கைரேகை
                                                                                                                         -துரோணா

Saturday, October 2, 2010

கனவுகளின் நிழல்

வேலையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட
மாலை வேளை
தண்ணீர் குடித்துவிட்டு படுக்கைக்குச் செல்கிறேன்
கண்களை மூடியபோது
இமைகளின் மீது படர்ந்திருந்த வண்ணக்குமிழ்கள்
எண்ணங்களின் நகல்களை
மூளையின் உள்ளே பயணிக்கச் செய்கின்றன

முகங்கள் மாற காலங்கள் சுழல என
தேடியதையெல்லாம்
தொலைத்துவிட்டதன் வெறுமை
கருப்பு நதியாக
என் மதுக் கோப்பையில் தளும்புகிறது

வன்மமும் குரூரமும்
விகார வனவிலங்குகளென
உருப்பெற்று விழி நரம்புகளில்
ஊடுருவி இதயக்குழாய்களை
அறுத்தெறிகின்றன

கேலி பேசிய குரல்களின் அபசுவரத்தில் இருந்தும்
கிழித்தகற்றப்பட்ட உறவுகளின் எச்சத்தில் இருந்தும் விடுபட
நினைவுகளின் பாதையோடு வெகுநேரம் போராடவேண்டியிருக்கிறது

கருணை அன்பு நட்பு நேசம் என
வேடம் தரித்த முகங்கள்
ரட்சகன் தோட்டத்து சாத்தானென
என் நிர்வாணத்தை ஆபாசமாக்குகின்றன

மரணத்திற்கும் அதன் முந்தைய நொடிக்குமிடையேயான 
பயமும் பரிதவிப்பும் பார்வையை மெல்ல மழுங்க செய்ய
இரையை தேடி என் செவிகளில் நுழைந்த சர்ப்பம்
வேட்டைக்கான வேகத்தில் தனது நீளத்தினை
சரசரவென அதிகரித்து என் நாசியின் வழியே
தனது இரு தலைகளையும் வெளிக்கொணர்கிறது

கண்கள் படபடவென அடித்துக்கொள்கின்றன
உடல் முழுவதுமாக வியர்வையில் நனைந்திருந்தது
மின்விசிறியின் வேகத்தினை கூட்டுகிறேன் 
மின் காம்புகள் சுழல மறுக்கின்றன.

கண்ணாடிச் சுவர்களின்
அத்தனை பிம்பங்களிலும் "நான்"
நான் தற்கொலையில் தோற்று கொலைகள் செய்பவனாக
நான் இரக்கமுள்ளவனாக
நான்  எழுத்தாளனாக
நான் வேசியின் மடியில் நாயகனாக
நான் மதுபான விடுதியில் பைத்தியக்காரனாக
நான் பிணங்களை தேடும் காட்டு கழுகாக
நான் சுடுகாட்டினில் சில்லறை பொறுக்குபவனாக

ஒவ்வொரு பிம்பங்களும்
ஒன்று
மற்றொன்று
இன்னொன்று என
அம்பாரங்களை உண்டுப் பண்ண
பிரதியானவை யாவும்
கதறலாய் அழுகின்றன

சிந்தனை செயலிழக்க துவங்குகிறது
மீண்டும் தண்ணீர் குடிக்கச் செல்கிறேன்
நீரினில் உதிரத்தின் சுவடுகள்
உறியப்பட்டவை
உறியப்பட இருப்பவை

தொண்டை குழியினை பிளந்துக்கொண்டு
குருதி வெள்ளம் தரையை நனைக்கிறது
அறையெங்கும் பொசுங்கிய சாம்பலின் வாசம்

நாறும் ஞாபகங்களிலிருந்து விடுவித்து
சுயநினைவுக்கு மீட்டுவந்த அலைபேசியில்
இனியக்குரல் யுவதியொருத்தி
கொஞ்சலாய் பேசுகிறாள்
"உங்களுடைய இரண்டு நிமிடங்களை
கடனாக அளித்தால்
நீங்கள் வீடுகட்ட
நாங்கள் கடன் தருகிறோம்"
இப்பொழுதிற்கு
ஒரு கருநீல புடவையும்
இரண்டடி ஸ்டூலும்கூட  போதும் சகோதரியே
நரகத்தின் வாசல் திறந்தே இருக்கிறது....
                                                                                                                 துரோணா.