Saturday, March 5, 2011

கொஞ்சம் கிறுக்கல் -2

எதைஎதையோ ஆராய்கிறீர்கள்,
ஏதேதோ தீர்ப்பளிக்கிறீர்கள்.

காற்றெனவும் நிலவெனவும் கலங்குகிறது காலம்.
தீர்மாணங்களற்றும்,சுவடுகளற்றும


******

இனியும் உன்னிடம் மறைப்பதற்கில்லை
சொல்லிவிடுகிறேன்.
இதற்கு முன்னும் சொல்லியிருக்கிறேன்.
சொல்லாதுமிருந்திருக்கலாம்.
சொல்லாவிட்டால்தான் என்ன?
நீ அறிவாய் அல்லவா,நான் சொல்ல நினைப்பதை..?

******

உனக்காகவே நான் அதை உருவாக்குகிறேன்
உனக்காகவே நான் அதை உருக்குலைக்கிறேன்
என்னவென்று தெரியவில்லை..?
இன்னமும் கண்களை கசங்கச் செய்கிறது......

******

பிழைகள், திருத்தங்கள்
பின்னிரவின் கிறுக்கல்கள்
ஒழுங்கற்ற கனவுகள் என
இன்மையின் நிழலாக எனது டைரி,
எரித்து விடுகிறேன்
எரிக்க முடிகிறது, எனது டைரியை மட்டும்

******

காய்ந்த முற்செடிகளிலான வெயிற் நிலத்தில்
கருகி திரிகிறது பெயரற்ற ஒரு வெற்றுயிர்
மீண்டும் ஜனனிக்கும் தினத்தில்
தான் கொள்ள வேண்டிய பெயரை தேடிக்கொண்டு....

******


                                                                                 -துரோணா

Saturday, February 19, 2011

சருகுகள்


செம்மண் தரைகள்
தார் சாலைகள்
நீர் தேங்கிய சகதிகள்
புழுதியில் மறையும் பாதைகளென
நான் பயணிக்கும் திசைகளெங்கும்
சருகுகள்.
ஆம்,வெறும் சருகுகள்.

சாயம்போன அந்த உதிரிலைகள்
தொடரும் நீள்க் கோடையின்
சுடும் நினைவாக
என் வழிகளில் படர்கின்றன
சில சமயம் சலசலத்தும்
சில சமயம் சலனமற்றும்

"கிழித்தெறியப் படும்
காதல் கடிதங்கள் யாவும்
சருகுகளாகத் தான் மாறுகின்றன"
தனது நாட்குறிப்பில்
எழுதி வைக்கிறான்
கவிஞன் ஒருவன்.

எரிமலையினிலிருந்து வெடித்து
சிதறும் அக்னி ஜீவாலைகள்
சருகுகளாய் கீழே விழுகின்ற
ஓவியத்தை வரைகிறான்
ஓவியன் ஒருவன்.

கண்ணீர்க் கோர்த்த சருகுகள்
என் வாயிலை நிரப்புகின்றன
என் காலணியில் சேர்கின்றன
என் இரவின் வானத்தில்
வெறிபிடித்தாற் போல் நடனமாடுகின்றன.

இனியும் மாளாது.
சருகுகளை அகற்றியே ஆக வேண்டும்.
அதுவொன்றும் அவ்வளவு சிரமம் கிடையாது.

உடலின் ரகசியங்களை திறக்கின்ற
உலர்க் காமத்தின் பெருமூச்சைக் கொண்டும்
நம்பிகையின் பேரில் சிந்தப்படுகின்ற
உதிரத்திலெழும் பேரலைகளைக் கொண்டும்
வண்ணங்களிழந்த அந்த சருகுகளை
நான் அகற்றுகிறேன்.

கரைந்து மறைந்த
சருகுகளின் கருத்த நிழல்கள்
இப்பொழுது,என் வழிகளை
மறிக்கத் தொடங்கிவிட்டன.

"நிஜங்களைப் போல்
நிழல்கள் எளிதில்
மரித்துவிடுவதில்லை"
காற்றினில் எதிரொலிக்கிறது
மௌனத்தின் குரல்.

அழியா நிழல்களின்
நினைவுகளில்
சருகாகிக் கொண்டிருக்கிறேன்,நான்.
                                                                                      -துரோணா

Friday, February 4, 2011

நினைவுகளின் வார்த்தைகள்



ஒரு இலையுதிர்வை போல்தான்,
இருந்தது அக்கணம்.
மிகவும் இலகுவாக
அதே சமயம் மிகவும் கனமாக.

நீர்த்துப் போன மௌனங்களுடன்
கடந்துக் கொண்டிருந்தன 
தொடர்ந்து வெளிப்பட்ட 
ஒவ்வொரு கணங்களும்.
O
முன்தீர்மாணங்கள் இல்லாத 
எந்த நிகழ்விற்குமே
நான் இதுவரை பழகியதில்லை.
நேரங்காட்டியை மீண்டுமொருமுறை
சரி பார்த்துக் கொள்கிறேன்.

சொற்களை கையாள்வதுப் போல்
காலத்தினையும்,மிகுந்த நேர்த்தியுடனே
நீ கையாள்கிறாய்.
O                                                                      
                                                                                                 
உன்னுடைய கேள்விகள் அனைத்திற்குமே
என்னிடம் பதில்கள் உள்ளன,
பொருத்தமான வார்த்தைகள்தான் இல்லை.
நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
ஒரு சிகரெட் இருந்தால் தேவலாம்.
O
கூண்டு புலியின் கண்கள்
இரும்புக் கதவின் கம்பிகளை
எதிர்கொள்ளும்
அதே வேட்கையுடன்
அதே கோபத்துடன்
அதே ஏமாற்றத்துடன்
அதே வேதனையுடன்
நான் அந்த கணங்களை
எதிர்கொள்ள துணிகிறேன்

எந்த நியாயங்களுக்கும் தகுதியற்ற                                                            ஒரு குடிகார சூதாடி                                                         மீண்டுமொருமுறை                                                                   சீட்டுக்கட்டை கலைத்தடுக்குகிறான்
o
உன்னிடம் இருக்குமளவிற்கு
என்னிடம் சாட்சியங்கள் இல்லை.
நீ எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
நானும் எதையும் நிரூபிப்பதற்கில்லை.
நாளையும் மழை பெய்யும் என்ற
எளிய நம்பிக்கை மட்டுமே
என்னிடம் மீதமிருக்கின்றது.
O
இறுதியில்,
நீயும் சென்று விட்டாய்.
நானும் சென்றுவிட்டேன்.

சொல்லிக் கொள்ளாமல்
செல்வதில் தான் 
எவ்வளவு சௌகரியங்கள்.
யாரும் பார்க்கும் முன்னே
கண்களை துடைத்துக் கொள்ளலாம்.
O
நாம் சென்ற பிறகும்,
அந்த கணங்களுக்குள்ளாக,
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன 
நம் நினைவுகளின் வார்த்தைகள்.

வார்த்தைகள்
வெறும் வார்த்தைகளாக
மட்டும் இருப்பதில்லையே

Saturday, January 15, 2011

சாதாரணமானவன்


நான் சாதாரணமானவன்,
உங்களைப் போலவே.

இரும்பு கேட்டின் கம்பிகளை
இறுகப் பிடித்துக்கொண்டு,
என்றேனும் ஒருநாள்
இந்த பாதைகளனைத்தும்
மறைந்துவிடக்கூடுமென 
நம்பிக் கொண்டிருப்பவன்

உபயோகத்தில் இல்லாத
பழைய எண்கள் அனைத்தும்,
திரும்பவும் தொடர்புக்கொள்ளும் நிலைக்கு
திரும்பிவிட வேண்டுமென
ப்ரார்த்தித்துக் கொண்டிருப்பவன்.

என் அறையில் எந்த வாசமும் இல்லை.
என் டைரியில் எந்த கிறுக்கலும் இல்லை.
எந்த பாடலும், எனக்கு
எதையும் நினைவூட்டுவதில்லை.

நான் சாதாரணமானவன்
உங்களைப் போலவே.

கண்முன் விழுகின்ற சடலங்களில்
என் கைரேகைகள் இல்லை என்ற வகையில்
நான் நிபந்தனைகளற்ற நிரபராதி.

எல்லாம் சரியாகவே இருக்கிறது.
கடவுள்களின் மீது எனக்கு,
எந்த குற்றச்சாட்டும் இல்லை.
விதிமுறைகளை ஏற்பதில் எனக்கு,
எந்த ஆட்சபேனையும் இல்லை.

கொடுப்பதற்கும் எடுப்பதற்கும்
ஏதுமில்லாத தேசத்தில் நான் வாழ்வதற்கில்லை.
தாழிடும் ஓசை கேட்கும்பொழுதெல்லாம்
நான் கதவு தட்டுவதை நிறுத்திவிடுகிறேன்.
கையெழுத்திட நேரும்பொழுதெல்லாம
நான் அன்றைய தேதியை மறந்துவிடுகிறேன்.
அழுகை வரும்பொழுதெல்லாம்
நான் ஒரு கவிதையெழுத துவங்கிவிடுகிறேன்.

ஆம்.
நான் சாதாரணமானவன்,
மிகவும் சாதாரணமானவன்.
உங்களைப் போலவே.
                                                                                                                -துரோணா

Friday, January 7, 2011

சிதிலங்கள்

உரையாடல்களின் சொற்களுக்குள்ளாக,
நான் ஒளித்து வைக்கின்றேன்.
உன் மீதான குற்றச்சாட்டுகளை,
மீண்டும் நீ கண்டெடுக்கின்றாய்,
மன்னிப்பிற்கான மற்றுமொரு சாத்தியத்தை.


சதுரங்கத்தின் கட்டங்களுக்குள்ளாக,
நான் மாற்றியமைக்கின்றேன்.
அதன் கருப்பு வெள்ளை விதிமுறைகளை,
மீண்டும் நீ கடந்துவிடுகின்றாய்,
எளிதாக மிகவும் எளிதாக.

இன்னமும் இருக்கின்றது,
கொஞ்சம் ஏமாற்றம்.
நீ சொல்லும் உலர்ந்த பொய்களை,
நம்புகின்ற அந்தக் கணத்திற்குள்ளாக.

இன்னமும் இருக்கின்றது,
கொஞ்சம் துக்கம்.
நீ சொல்லும் நட்பின் உண்மைகளை,
சந்தேகிக்கின்ற காதலின் கண்களுக்குள்ளாக.

பிரிவின் இறுதி முத்தத்தில்,
சிதறிய உமிழ் நீரினை,நான்
எங்கும் தேடிக்கொண்டிருக்கின்றேன்,
தீராக் கண்ணீரின் பெருங்கடலில்.

நான் கட்டமைக்கின்றேன்,
என் நம்பிக்கைகளின் தீர்மாணங்களை.
எதிர்பார்ப்புகளின் நிச்சயமின்மைகளென
தொடர்கின்றன,நாட்களின் நினைவுகள்.

பிறழ்வுகளெனவும் கனவுகளெனவும்,
என்னை சூழ்ந்து பரவுகின்றன,
நம் காதலின் சிதைந்த இரவுகள்.

உன் கரம் பற்றுதலின் வெப்பம்,
அங்கு எரித்துக் கொண்டிருக்கிறது,
காற்றின் பெரு வெளியை.

முடிவுபெறாத ஒரு நூற்றாண்டு கவிதையென,
ஏங்குகின்றன ,உருக்குலைந்த என் இறுதி உணர்வுகள்,
தீனமாய் அழும் ஒரு முரட்டு கிழவனைப் போல்
                                                                                                                      -துரோணா