Thursday, November 4, 2010

சாத்தான் குகை

அந்த குகையின்
பாறைகளெங்கும் படர்ந்திருந்த
செடிகளின் வழியே பரவுகிறது
ஒரு பச்சை வாசம்

சின்னஞ்சிறு கற்களுக்கடியே
பதிந்திருந்த மணல் துகள்கள்
யாவற்றிலும் படிந்திருக்கிறது
ஒரு ஈர சாயம்

குகை வாயிலில்
மானின் கூரிய கொம்புகள்
மாட்டின் விலா எலும்பொன்றை
நீ குகையினுள்ளே கண்டெடுத்தாய்
மற்றொரு இடத்தில்
நரியின் அறுபட்ட வாலும்
காக்கையின் அலகும் ஒட்டிக்கிடந்தன
தரையினில் சிதறியிருக்கும்
புலியின் நகங்கள் வேறு
அவ்வப்போது நமது கால்களை  கிழிக்கின்றன

இத்தனை உயிரினங்களும்
சேர்ந்து வாழந்த அல்லது
மடிந்த அதிசயத்தை
நாம் பாதையெங்கும்
சிலாகித்து பேசிக்கொண்டே போகிறோம்

நமது கண்களில் சிக்காது
அந்த குகையின் சுவர்களில்
ஒளிந்துக்கொண்டிருக்கிறது
ஒரு இறந்த மனிதனின் கைரேகை
                                                                                                                         -துரோணா

3 comments:

மதுரை சரவணன் said...

//நமது கண்களில் சிக்காது,
அந்த குகையின் சுவர்களில்
ஒளிந்துக்கொண்டிருக்கிறது
ஒரு இறந்த மனிதனின் கைரேகை.....//

சூப்பர் ... திரிலிங்க்காக ஆரம்பித்து நச் டச் .. கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

துரோணா said...

நன்றி சரவணன்.....(நிச்சயம் மதுரையை சேர்க்க வேண்டுமா?)

மதி said...

நல்ல அடித்தளத்தில் அருமையாக முடிவு பெற்ற கவிதை

Post a Comment