Saturday, February 19, 2011

சருகுகள்


செம்மண் தரைகள்
தார் சாலைகள்
நீர் தேங்கிய சகதிகள்
புழுதியில் மறையும் பாதைகளென
நான் பயணிக்கும் திசைகளெங்கும்
சருகுகள்.
ஆம்,வெறும் சருகுகள்.

சாயம்போன அந்த உதிரிலைகள்
தொடரும் நீள்க் கோடையின்
சுடும் நினைவாக
என் வழிகளில் படர்கின்றன
சில சமயம் சலசலத்தும்
சில சமயம் சலனமற்றும்

"கிழித்தெறியப் படும்
காதல் கடிதங்கள் யாவும்
சருகுகளாகத் தான் மாறுகின்றன"
தனது நாட்குறிப்பில்
எழுதி வைக்கிறான்
கவிஞன் ஒருவன்.

எரிமலையினிலிருந்து வெடித்து
சிதறும் அக்னி ஜீவாலைகள்
சருகுகளாய் கீழே விழுகின்ற
ஓவியத்தை வரைகிறான்
ஓவியன் ஒருவன்.

கண்ணீர்க் கோர்த்த சருகுகள்
என் வாயிலை நிரப்புகின்றன
என் காலணியில் சேர்கின்றன
என் இரவின் வானத்தில்
வெறிபிடித்தாற் போல் நடனமாடுகின்றன.

இனியும் மாளாது.
சருகுகளை அகற்றியே ஆக வேண்டும்.
அதுவொன்றும் அவ்வளவு சிரமம் கிடையாது.

உடலின் ரகசியங்களை திறக்கின்ற
உலர்க் காமத்தின் பெருமூச்சைக் கொண்டும்
நம்பிகையின் பேரில் சிந்தப்படுகின்ற
உதிரத்திலெழும் பேரலைகளைக் கொண்டும்
வண்ணங்களிழந்த அந்த சருகுகளை
நான் அகற்றுகிறேன்.

கரைந்து மறைந்த
சருகுகளின் கருத்த நிழல்கள்
இப்பொழுது,என் வழிகளை
மறிக்கத் தொடங்கிவிட்டன.

"நிஜங்களைப் போல்
நிழல்கள் எளிதில்
மரித்துவிடுவதில்லை"
காற்றினில் எதிரொலிக்கிறது
மௌனத்தின் குரல்.

அழியா நிழல்களின்
நினைவுகளில்
சருகாகிக் கொண்டிருக்கிறேன்,நான்.
                                                                                      -துரோணா

Friday, February 4, 2011

நினைவுகளின் வார்த்தைகள்



ஒரு இலையுதிர்வை போல்தான்,
இருந்தது அக்கணம்.
மிகவும் இலகுவாக
அதே சமயம் மிகவும் கனமாக.

நீர்த்துப் போன மௌனங்களுடன்
கடந்துக் கொண்டிருந்தன 
தொடர்ந்து வெளிப்பட்ட 
ஒவ்வொரு கணங்களும்.
O
முன்தீர்மாணங்கள் இல்லாத 
எந்த நிகழ்விற்குமே
நான் இதுவரை பழகியதில்லை.
நேரங்காட்டியை மீண்டுமொருமுறை
சரி பார்த்துக் கொள்கிறேன்.

சொற்களை கையாள்வதுப் போல்
காலத்தினையும்,மிகுந்த நேர்த்தியுடனே
நீ கையாள்கிறாய்.
O                                                                      
                                                                                                 
உன்னுடைய கேள்விகள் அனைத்திற்குமே
என்னிடம் பதில்கள் உள்ளன,
பொருத்தமான வார்த்தைகள்தான் இல்லை.
நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
ஒரு சிகரெட் இருந்தால் தேவலாம்.
O
கூண்டு புலியின் கண்கள்
இரும்புக் கதவின் கம்பிகளை
எதிர்கொள்ளும்
அதே வேட்கையுடன்
அதே கோபத்துடன்
அதே ஏமாற்றத்துடன்
அதே வேதனையுடன்
நான் அந்த கணங்களை
எதிர்கொள்ள துணிகிறேன்

எந்த நியாயங்களுக்கும் தகுதியற்ற                                                            ஒரு குடிகார சூதாடி                                                         மீண்டுமொருமுறை                                                                   சீட்டுக்கட்டை கலைத்தடுக்குகிறான்
o
உன்னிடம் இருக்குமளவிற்கு
என்னிடம் சாட்சியங்கள் இல்லை.
நீ எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
நானும் எதையும் நிரூபிப்பதற்கில்லை.
நாளையும் மழை பெய்யும் என்ற
எளிய நம்பிக்கை மட்டுமே
என்னிடம் மீதமிருக்கின்றது.
O
இறுதியில்,
நீயும் சென்று விட்டாய்.
நானும் சென்றுவிட்டேன்.

சொல்லிக் கொள்ளாமல்
செல்வதில் தான் 
எவ்வளவு சௌகரியங்கள்.
யாரும் பார்க்கும் முன்னே
கண்களை துடைத்துக் கொள்ளலாம்.
O
நாம் சென்ற பிறகும்,
அந்த கணங்களுக்குள்ளாக,
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன 
நம் நினைவுகளின் வார்த்தைகள்.

வார்த்தைகள்
வெறும் வார்த்தைகளாக
மட்டும் இருப்பதில்லையே