Saturday, October 6, 2012

அன்பின் மலர்கள்


 
 
யாரோ ஒருவரது கதையின்

 
எழுதப்படாத பக்கங்களிலிருந்து

 
தவறிவிழுந்த வயதான மனிதர் அவர்

 
எந்த புனைவிலும் 

 
முழுமையாய் சொல்லப்படாத 

 
ஒரு வாழ்க்கையோடு 

 
நம் நகரத்தின் தெருக்களில்

 
மெலிந்த நிழல்களின் ஊடே அவர்

 
அலைந்து கொண்டிருக்கிறார்

 
அவரது உடலில் அரிசி மண்டி வாடையடிக்கிறது

 
யாரிடம் கொடுப்பதென்று தெரியாமல்

 
பழைய செய்திதாளில் பொட்டலம் கட்டிய

 
தன் வாழ்க்கையை அழுத்தி பிடித்தபடி

 
ஜன்னலோர ரயில் 

 
இருக்கையில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்

 
கிட்னியில் கல் வளர்ந்திருக்கிறது

 
சர்க்கைரை நோயுடன் சேர்த்து

 
நேரத்திற்கு சாப்பிடாததால்

 
வயிறு வேறு புண்ணாகி போயிருக்கிறது

 
ரொம்ப நாட்களுக்கு முன்னர்

 
தன் வீட்டு மொட்டை மாடியில்

 
செங்கற்களினாலான பெரிய தொட்டியில்

 
அம்பாரமாய் மணல் கொட்டி

 
நிறைய ரோஜாப் பூக்கள் நட்டு வைத்திருந்தார்

 
எப்பொழுது பார்த்தாலும் 

 
மனைவியோடு சண்டைதான்

 
அவளுக்கு சமைக்க தெரியாது 

 
அவளுக்கு அறிவு கிடையாது 

 
ஒரு பெரிய சரிவின்முடிவில்

 
நடுத்தெருவில் நிற்க நேர்ந்தபோது

 
மனைவி மட்டும் உடனில்லையென்றால் 

 
என்னவாகியிருப்போம் 

 
சமைக்க தெரியாத அறிவே இல்லாத

 
மனைவியின் கருத்த கைகள்

 
தோளை பற்றுவதாக உணர்ந்தவர் 

 
அதிர்ந்து கண் விழித்தார்

 
ஆளற்ற ரயிலில் 

 
ப்ளாஸ்டிக் கவர்களும் 

 
காய்ந்த பழத் தோல்களும் அசைவற்றிருந்தன

 
எவ்வளவு காலங்கள் காத்திருந்தும்

 
தொட்டியில் 

 
ஒரு ரோஜாப்பூக்கூட மலரவேயில்லை

 
மகனை படிக்க வைத்தார்

 
மகனின் நண்பர்கள் 

 
அவரை அவனது தாத்தா என்று நினைத்தனர்

 
இருந்தும் மகனுக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும்

 
அது கடைசிவரையிலும் அவருக்கு தெரியவேயில்லை

 
அவர் நினைத்தார்

 
அவர் ஆசைப்பட்டார்

 
அவர் கனவுகண்டார்

 
எப்பொழுதேனும் நம் வாழ்க்கைக்குள்

 
நாம் நுழைந்துவிடுவோமென

 
ஆஸ்பத்திரி வீச்சம் மூச்சுமுட்ட

 
எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல்

 
அவர் கிளம்பி வந்துவிட்டார்

 
போன வாரத்தில் ஒருநாள் 

 
அவரது 72 வயது சின்னமாமா 

 
புற்றுநோயில் தொடையிடுக்கு சதையழுகிப்போக

 
ரணமும் வலியும் தாளாது

 
ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்

 
சுருங்கிய தசையின் மீதேறி 

 
ரத்தமாய் பாய்ந்து மறைந்தது ரயில்

 
தனக்கேன் புற்றுநோய் வராமல் போனது

 
என யோசித்தபடியே தண்டவாளத்தையொட்டி

 
நடந்துக் கொண்டிருக்கிறார் அவர்

 
இரண்டு பக்கங்களிலும் பெருகும் 

 
கூவம் நதியில் பூத்து குலுங்குகின்றன

 
அன்பின் நீல வண்ன ரோஜா மலர்கள்

 
 
 
நன்றி : http://solvanam.com/?p=21932




1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை ரணமாக்கிய வரிகள்...

Post a Comment