Thursday, December 16, 2010

சிருஷ்டியின் கரங்கள்

தார் சாலைகள் கசிந்து உருகிய
நிழல்களில்லா ஒரு அகாலத்தில்
சிருஷ்டியின் கரங்களை நான் கண்டெடுத்தேன்
எங்கிருந்து வந்தன எனத் தெரியவில்லை,
எப்பொழுது பறிபோகும் என்பதிலும் நிச்சயமில்லை.

நிலையில்லாத தொடர் பிம்பங்கள்
இமைகளின்மீது படிந்தும் அகன்றும்
எதுவுமில்லாததிலிருந்து
எதை உருவாக்குவது?

கானகத்தை போலொரு கடல்
மலையை போலொரு நிலவு
நிர்வாண உடலை போலொரு வானம்
சாத்தானை போலொரு கடவுள்
சிருஷ்டியின் கரங்களை இறுக பற்றிக்கொண்டு,
உலகை முற்றிலுமாக மாற்றியமைக்கிறேன்.

பின்னர்,
என்னுடைய பழைய காலண்டரின் தேதிகளை,
சாக்கினுள் மறைத்து வைத்த கண்ணீர் துளிகளை,
சொல்ல நினைத்த பொய்களை,
கிழித்தெறிந்த கவிதைகளை,
மீண்டும் உருப்பெறச் செய்கிறேன்.
உண்மையென உலவுகின்றன, உருப்பெற்றவை.

பிரிவின் கடிதங்களையும்
அழிவின் செய்திகளையும்
மீள்தொடர்பின் முறிவுகளையும்
தீரா உவகையுடன்,நான் சிருஷ்டிக்கிறேன்

என் கனவிளவரசிக்காக,
முடிவில்லாத நதிகளை
இரவின் இசைக்குறிப்புகளை
எண்ணற்ற சேவகர்களை
நான் சிருஷ்டிக்கிறேன்

கனவிளவரசியை சிருஷ்டிக்க
முனையும் பொழுது மட்டும்
சிருஷ்டியின் கரங்கள் நடுங்குகின்றன.

இறுதியில்,
என்னை நானே சிருஷ்டிக்கிறேன்,
கொஞ்சம் கண்களை மாற்றி.
என்னை நானே சிருஷ்டிக்கிறேன்,
கொஞ்சம் தேகத்தை மாற்றி.
என்னை நானே சிருஷ்டிக்கிறேன்,
கொஞ்சம் என்னை மாற்றி.
இருந்தும், நான் நானாகவே இருக்கிறேன்.
நான் நானாகவே.

பெருங்குரலெடுத்து அழுகிறேன்.
சிருஷ்டியின் கரங்களை தூக்கியெறிகிறேன்
அவை குரூரமானவை
அவை இரக்கமற்றவை.

எரிதழலின் ஜீவாலைகளை கக்கியபடியே
துரத்துகின்றன, என் சிருஷ்டிகள்.
அழிவின் கரங்களை தேடி அலைகிறேன், நான்
                                                                                                                         -துரோணா

3 comments:

Raja said...

மிக அருமை துரோணா...

துரோணா said...

நன்றி ராஜா

Saran ajith said...

pictures the miseries of practical life!! very nice!!

Post a Comment