Saturday, March 24, 2012

காதலாகி..



காதல் எதனால் தோன்றும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?நான் காதலின் தோற்றம் மறைவு இரண்டுமே ஒருவனின் தலைவிதியை பொருத்தே அமையும் என்று சொல்கிறேன். உங்களுடைய கருத்து என்னவாக இருந்தாலும் சரி,என்னுடைய இந்த நம்பிக்கை திட்டவட்டமானது.நான் ஏதோ சும்மா அடித்துவிடுகிறேன் என்று நீங்கள் தப்பர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டாம்.என்னுடைய அநுபவங்களின் மூலம் இதை என்னால் ஆணித்தரமாய் நிறுவமுடியும். ஏன் ரொம்பதூரம் போவானேன்நம்முடைய விக்னேஷ் கதையையே எடுத்துக் கொள்ளுங்கள்.கல்லூரியில் சேர்ந்த புதிதில் அவனது முகத்தைப் பார்த்ததும் அப்பிராணியாய் இருப்பான்போல என்றுதான் நினைத்தேன்.ஆனால் பழகிய பின்தான் தெரிகிறது அவன் எவ்வளவு பெரிய திருட்டுபயல் என்பது.சராசரியாக மாதத்திற்கு ஐந்து பெண்களை காதலிப்பது அவனது வழக்கம்.மார்ச் மாதத்தின் அவனது ப்ராஜெக்டுகளை சௌமியாஸ்ருதிப்ளெஸ்ஸிதீப்தி மற்றும் கிருபா என்கிற வரிசையில் வகைப்படுத்தலாம்.(பெண்ணியவாதிகள் கோபித்துக் கொள்ளவேண்டாம்.விக்னேஷின் பேச்சுவழக்கில் ஒவ்வொரு ப்ராஜெக்டும் ஒவ்வொரு காதல் என பொருள்படும்.எனக்கு இந்த வார்த்தை பிரயோகத்தில் உடன்பாடில்லை யென்ற போதும் அவன் இக்கதையில் ஒரு கதாபாத்திரம் ஆகையால் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது)

விக்னேஷ் கல்லூரியிலிருக்கும் நேரத்தில் காதலே கண்ணாய் தீயாய் வேலை செய்வான்.காலை இடைவேளையின் போது காண்டீன் வாசலில் நின்று எக் பப்ஸை கொரித்தபடியே சௌமியாவிற்காக காத்து கிடப்பான்.பிறகு மதியம் சாப்பிடுவதற்கு முன்பாக ஏ-பிளாக்கில் இருக்கும் நோட்டீஸ் போர்டை வெறித்தபடி(அதில் புதிதாய் எதுவும் இல்லாதபோதும்) ஸ்ருதிக்காக தவம் இருப்பான்.சாப்பாட்டிற்கு பிறகு எலக்ட்ரானிக்ஸ்’ லேப் பக்கம் போனால் ப்ளெஸ்ஸியை பிடித்துவிடலாம். தீப்தியும்,கிருபாவும் எங்கள் காலேஜ் கிடையாது.என்றாலும் எங்கள் கேம்பஸில்தான் இருக்கிறாள்கள்.என்ன குழப்புகிறேனாஒன்றும் பெரிய காரியமில்லை. எங்கள் கேம்பஸிற்குள் மொத்தம் மூன்று பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன.அதில் வாசலுக்கருகில் ஒட்டிவைத்தது போலிலிருக்கும் நீலநிற கல்லூரியில்தான் தீப்தி படிக்கிறாள்.கிருபா அதற்கடுத்திருக்கும் மெரூன்நிற கல்லூரியை சேர்ந்தவள்.எங்கள் வெளிர் பச்சைநிற கல்லூரிதான் கடைசியில் மூன்றாவதாக இருக்கிறது.எனவே கல்லூரி முடிந்ததும் நேராக மெரூன் கல்லூரிக்கு சென்றுவிடுவான் விக்னேஷ். அங்கேயிருக்கும் ஏடிஎம் சென்டர் பக்கத்தில் நின்று பர்ஸை துலாவியபடியே ஒரு பத்து நிமிடம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால்கிருபா வந்துவிடுவாள்.அதற்கு பிறகு அங்கிருந்து நகர்ந்து கேம்பஸின் பிரதான சாலையில் வரிசையாய் நிறுத்தபட்டிருக்கும் மஞ்சள் பேருந்துகளில் 49ம் எண் பேருந்தை தேடவேன்டும்.அதில் நான்காவது வரிசையில் சிப்ஸ் பாக்கெட்டோடோ அல்லது காஃபி கோப்பையோடோ தீப்தி உட்கார்ந்திருப்பாள்.அவளையும் பார்த்துவிட்டு ஆத்ம சந்தோஷத்தோடு விக்னேஷ் வீட்டுக்குச் செல்வதற்குள் மணி ஏழரையாகிவிடும். மறுபடியும் அடுத்த நாள் இதே காரியங்கள் செவ்வனே தொடரும்.

மாதம் ஐந்து பெண்களை காதலிக்க வேண்டுமென்பதுதான் விக்னேஷின் அடிப்படை நோக்கம் என்று சொல்லமுடியாது.ஆரம்பத்தில் ஒரு பெண்ணைதான் அவனும் காதலித்தான்.அப்புறம் அவள் வேறொருவனை காதலிப்பது தெரியவரவும் அவன் இன்னொரு பெண்ணைத் தேட நேர்ந்தது.சரி இவளும் போய்விட்டால் என்ன செய்வது?எதற்கும் இருக்கட்டுமே என்று மற்றொரு பெண்ணையும் பார்த்து வைத்தான்.இரண்டு வாரங்கள் போகவும் வேறு டிபார்ட்மென்ட்டை சேர்ந்த வாட்டசாட்டமான இரு வாலிபர்கள் அவனிடம் வந்து தங்களது கரகரப்பான முரட்டுக் குரலை அதிக கரகரப்பாக்கி ங்கொம்மாலே இனி உன்னைய அந்த பொண்ணுங்க பின்னாடி பார்த்தேன்..அவ்வளவுதான்” என்று எச்சரிக்கை செய்துவிட்டு சென்றனர். விக்னேஷிற்கு எப்பொழுதுமே வன்முறையில் விருப்பம் இருந்ததில்லை.எனவே அவனும் அவ்விரு பெண்களையும் அந்த கணமே மறக்க துணிந்துவிட்டான். தொடர்ந்து அவன் யாரையெல்லாம் காதலித்தானோ அவர்கள் எல்லோருமே ஆளுக்கொரு காதலனோடு திரிய அதில் கடுப்பானதன் விளைவாய் தோன்றியதுதான் இந்த மாத ப்ராஜெக்டுகள் திட்டம்.

விக்னேஷ் காதலுக்காக  பெண்களை தேர்ந்தெடுக்கும் வழிகளும் அதற்காக  அவன் சொல்லும் காரணங்களும் சுவாரசியமானவை.அதேப் போல் ஒரு பெண் தன்னை காதலிக்கிறாள் என்பதை அவன் ஊர்ஜிதப்படுத்தும் முறைகூட பயங்கரமாக இருக்கும். ஒருமுறை  பாத்ரூம் வாசலில் முண்டியடித்த கூட்டத்தோடு மன்றாடிக்கொண்டிருந்த என்னை மடக்கி ஒய்யாரமாய் சுவரில் சாய்ந்துக் கொண்டு மச்சான் இன்னைக்கு கிருபா சிவப்புக் கலர் சுடிதார் போட்டிருக்காடா.. நான் அவளை லவ் பண்ணலாம்னு இருக்கேன்..என்று ராஜக்குரலில் கம்பீரமாகச் சொன்னான். நான் திகிலில் உறைந்தே போனேன்.இன்னொரு நாள் அரக்க பறக்க  ஓடிவந்து தீப்தி  கால்ல பார்த்தேன்டா..ரோஸ் கலர் நெயில் பாலிஷ்..அவ என்னை சீரியஸா  லவ் பண்றான்னு நினைக்கிறேன் மச்சான்..” என்று மூச்சிரைக்க அவன் கூறிமுடிக்கவும்,அதிர்ச்சியில் என் கையிலிருந்த கிளாஸ் தண்ணீரோடு தவறி கீழே விழுந்து உருண்டது.

விக்னேஷின் காதல்களை கணக்கில்கொள்கையில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் யாதெனில் அவனின் அனைத்துக் காதல்களுமே வெற்றிபெறாதவை அதாவது ஒரு தலையானவை.வெறும் பார்வை என்பதைத் தாண்டி அதில் வேறெந்த விசேஷமும் கிடையாது.பைக்,பீச்,சினிமா போன்ற வழமைகளுக்கு வேலையே இல்லை.சுற்றி சுற்றி வந்து பெண்களை பார்ப்பதிலேயே அவன் முழு திருப்தியடைந்து விடுவான்.அதை தாண்டிய தேவையென்று அவனுக்கு எதுவும் கிடையாது.

பார்வை என்றதும் நீங்கள் ஏதோ சாதாரணமான காரியம் என்று நினைத்து விடக் கூடாது.ஒரு பெண்ணை பார்ப்பதற்கே அசாத்தியமான திறமைகள் வேண்டும். இதில் குரு கில்லாடி.தீவிரமாக காதலிப்பது என முடிவெடுத்து விட்டால் தனது கண்களில் கொஞ்சல் தோரணை தானாக ஏறும்படி பார்த்துக் கொள்வான்.திரும்பி பார்க்க வைப்பது மட்டுமே நோக்கம் என்றால்,முறைப்பான மிரட்டல் பார்வையில் எதிர்வரும் பெண்ணை அப்படியே துளைத்துவிடுவான்.மூன்றாவதாக ஒரு வகையுண்டு,அதில் குருவிற்கு ஒப்புதல் கிடையாது.வெறும் பார்த்தல் சுவைக்காக ஏங்கும் மூன்றாவது வகையினர் ஒளிந்து கொண்டு பார்ப்பவர்கள். அத்தகையவர்களின் கண்களில் அவர்கள் அறியாமலேயே ஒரு யாசகனின் பார்வை தோன்றிவிடும்.விக்னேஷை இந்த வகையில் அடக்கலாம்.

கல்லூரி தொடங்கி மூன்று மாதங்களிலிருக்கும்.அப்பொழுதுதான் ஓரளவிற்கு புதிய சூழலுக்கு பழகி சகஜமாகி நட்புறவுகள் அரும்ப ஆரம்பித்திருந்தன.எங்கள் குரூப்பில் குருவையும் ராஜேஷையும் தவிர வேறு யாருக்கும் பெண்கள் விஷயத்தில் அவ்வளவாக ஞானம் கிடையாது.ஒரு அழகான பெண் எங்களைக் கடந்துவிட்டால் கெட்டது.பொறைக்கு வாலாட்டும் நாயைப் போல ஆவென்று” வாயில் நீர் வழியே எங்கள் குரூப்பே அவளை துரத்த தொடங்கிவிடும்.இப்படி நாய் பிழைப்பே வாழ்ந்துக் கொண்டிருந்தால் எப்படி?அதற்கும் ஒரு மாற்றுவழி பிறந்தது.கல்லூரியில் நடந்த நடனபோட்டியின்போது நாங்கள் ஞானோதயம் அடைவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதுவொரு செவ்வாய்கிழமை.வசதியாய் அரங்கத்தின் கடைசி இரண்டு வரிசைகளை நாங்கள் ஆக்கிரமித்துக் கொண்டோம்.எங்களுக்கு பின்னாடி அலங்காரம் செய்வதற்கான ஒப்பனை அறை இருந்தது.அப்பொழுதுதான் அவள் அங்கே வந்தாள். வெள்ளைச் சுடிதார் அணிந்திருந்த நீளிடை அழகி.அவள் நடனம் பார்க்கும் பொருட்டு அந்த அறை வாசலில் நின்றிருக்க வேண்டும்.இல்லையெனில் அவளது தோழிகளில் யாரேனும் போட்டியாளராக இருந்து உள்ளே ஒப்பனை செய்துகொண்டிருக்கலாம். எது எப்படியோ அவள் அங்கே நின்றுக்கொண்டிருந்தாள் என்பதை தவிர அவளைப் பற்றி வேறெதுவும் எங்களுக்கு தெரியாது.ராஜேஷ்தான் முதலில் அவளை பார்த்தான். பார்த்ததும் மெதுவாய் என்னிடம் பின்னாடி பாரு மச்சி,அந்த வொயிட்டு” என்று கம்மிய குரலில் சொன்னான்நான்தான் காய்ந்து போனவனாயிற்றே..அடித்து பிடித்து சடாரென திரும்பி பார்த்தேன்.நொடியில் கவனித்தால் என்னோடு சேர்த்து ஆறு ஜோடி கண்கள் அவளை வெறித்துக் கொண்டிருந்தன.எல்லாவனும் காய்ந்துபோய்தான் இருந்தான்கள் போல. அவ்வளவுதான் அந்த பெண் விட்டால் போதுமென்று ஓடியே போய்விட்டாள். நடனப் போட்டி முடிவடையும் வரை அவளை எங்குமே காணமுடியவில்லை. என்ன மாமா அந்த ஃபிகர காணவே காணோம்” அரவிந்த் ஏமாற்றம் தோய்ந்த வார்த்தைகளில் கேட்டான்.த்தா அப்படியே கண்லயே கற்பழிக்கிற மாரி அத்தன பேரும் அடிச்சி பார்த்தா எப்படிர்றா இருப்பா”,அவள் போன ஆத்திரத்தில் கோபமாய் கத்தினான் ராஜேஷ்.அதற்கு பிறகுதான் நாங்கள் பார்வைகள் குறித்த பாலபாடங்களை கற்றுக்கொள்ள தொடங்கினோம்.இப்பொழுது நாய் பிழைப்பு கிடையாது.கௌவரமாக பெண்களை பார்க்க பழகிக்கொண்டோம்.காய்ந்து போன பார்வையில் மட்டும் எப்பொழுதுமே பெண்களை நோக்கக்கூடாது.அப்படி செய்துவிட்டால் அவர்கள் எளிதில் கண்டுபிடித்து நம்மை எளக்காரமாக நினைத்துவிடுவார்கள்.அதற்கு பிறகு அவர்கள் அகராதியில் நாம் கேணைக்கூதான் என்பான் குரு.  

பொதுவாக ஒரு குரூப் என்று இருந்தால் அதில் எப்படியும் ஒருவனது காதல் மட்டும்தான் வெற்றிப்பெற்றதாக இருக்கும்.மற்றதெல்லாமே தோல்விதான். ஒன்று காதல் மறுக்கப்பட்டிருக்கும்.அல்லது காதலை தெரிவித்திருக்கவே மாட்டான்கள். ஆனால் ஒவ்வொருவனுக்கும் ஒரு காதலி கட்டாயமாக இருப்பாள். இது எழுதப்படாத விதி.எங்கள் குரூப்பில் குரு தனது காதலில் வெற்றிக் கண்டிருந்தான்.ராஜேஷ் என்னதான் பெண்களின் உளவியலை புட்டுபுட்டு வைத்தாலும் அவன் எங்கள் கல்லூரியில் யாரையும் காதலிக்கவில்லை.பள்ளியில் உடன்படித்த பெண்ணையே இன்னும் காதலித்து வருவதாக சொல்லிக் கொண்டு அலைந்தான்.சரி நாம் குருவின் காதல் சமாச்சாரத்திற்கு வருவோம்.சாய்திவ்யாதான் அவனுடைய காதலி.காதல் பிராயத்தில் அவள் இவனுக்கு செய்த சேவகங்கள் இருக்கின்றனவே.அப்பப்பா!! அசைன்ட்மென்ட் எழுதி தருவது,ரெக்கார்ட் முடித்து கொடுப்பது,அவளுடைய வீட்டிலிருந்து இவனுக்கு மதியம் சாப்பாடு கொண்டு வருவது என இன்னும் நிறைய இத்யாதிகளை செய்து எங்களுக்கு வயிற்றெரிச்சலை உண்டாக்கினாள் மகராசி.அது மட்டுமில்லாது,வகுப்பு சமயங்களில் சைகை பாஷையிலேயே சம்பாஷணை வேறு.கம்யூனிகேஷன் தியரி வகுப்பில் காதர் சார் பாடமெடுக்கிறேன் என்கிற பெயரில் ஒருபக்கம் தாலியை அறுத்துக் கொண்டிருக்க,மறுபக்கம் இவர்கள் காதலிக்கிறேன் பேர்வழி என்று உயிரை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.இப்படியெல்லாம் நீண்டுக்கொண்டிருந்த இந்த அமரக்காதல் ஒரு சுபதினத்தில் முடிவிற்கு வந்தது. என்ன காரணம் என்ன எழவென்றே இறுதிவரை தெரியவில்லை.அரவிந்த் அவர்களது பிரிவுக்கு வாரமொரு காரணம் சொல்லிக்கொண்டிருந்தான்.

அரவிந்தும் எங்கள் குரூப்பில் ஒருவன்தான் என்றாலும் அவன் கொஞ்சம் விசேஷம்.எனவே அவனை பற்றிய ஒரு சிறுகுறிப்பு  இங்கே அரவிந்த்தான் எங்கள் குரூப்பின் தொடுக்கு’. தொடுக்குகள் இல்லாவிட்டால் நாட்டில் ஒரு பயலும் காதல் செய்யமுடியாது.ஒருவன் ஒரு பெண்ணை காதலித்தால்,அவளை அவன் எப்படி உஷார் செய்வான்?.அவள் போகுமிடமெல்லாம் பின்னால் போய்தானே. அப்படி அவளை தொடரும்போது தனியனாக போனால் கெத்தாகவா இருக்கும்?அதற்குதான் இந்த தொடுக்குகள்.இவர்கள் எப்பொழுதும் கூடவே இருப்பார்கள்.என்ன அவர்களுக்காக கொஞ்சம் செலவழிக்க வேண்டியிருக்கும்.அந்த தொடுக்கு’ அரவிந்த் எனும்பட்சத்தில் செலவு இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும்.எப்படியென்றா கேட்கிறீர்கள்?போனவாரம் நடந்த ஒரு விஷயத்தை சொன்னால்,உங்களுக்கே காரணம் பிடிபட்டுவிடும்.

எல்லோரும் சாயங்காலம் கல்லூரியை விட்டுக் கிளம்பிக்கொண்டிருக்கும் நேரம்.ஜகதீஷ் அன்றைய மாலைக்கான திட்டத்தை விவரிக்கத் தொடங்கினான்"மச்சி..நாலு மணிக்கெல்லாம் ஆவடி பஸ் ஸ்டாண்டுல நின்னோம்னு வையேன். அந்த 47சி ஃபிகர பார்த்துடலாம்.அப்புறம் அப்படியே ரயில்வே ஸ்டேஷன் போனா அங்க அருள் இருப்பான்."

ஜகதீஷ் நிறுத்தியதும்,அருள் திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை முன்வைத்தான் "ரயில்வே ஸ்டேஷன்ல அந்த எத்திராஜ் பொண்ணப் பார்த்துட்டோம்னா..எந்த எத்திராஜா? அதான்டா என் ஆளு..அந்த பிங்க் லாங்க்செயின் பேக்..ஆங்க்..அவதான். . அப்புறம் அங்கயிருந்து மறுபடியும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டோம்னா மணி அஞ்சரை ஆயிடும்.."

"அஞ்சரைக்கு பூந்தமல்லி பஸ் வந்துரும்.அந்த பாலிடெக்னிக் பொண்ணை.. ம்ம்..சுப்ரியாதான் மாமா..அவள பார்த்துட்டுக் கிளம்புனோம்னா படத்துக்கு சரியா டைமுக்குப் போயிரலாம்டா" –இது ராகவேந்திரா.

இவ்வளவையும் பொறுமையாய்க் கேட்டுக்கொண்டிருந்த அரவிந்த் எல்லோரும் பேசி முடித்ததும் கடைசியாக "கரெக்டு மச்சான்.முதல்ல பஸ் ஸ்டாண்டு போறோம் அங்க சென்னா சமோசா சாப்பிடுறோம்.அப்படியே ஷிப்டாகி ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் சாம்பார் வடை.அஞ்சரை ஆனதும் கிளம்பி மறுபடியும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பேக்கரியில சிக்கன் ரோல் சாப்பிடுறோம்..கே?" என்று திட்டத்தை தான் புரிந்துகொண்ட வகையில் எடுத்துரைத்தான்.

எல்லோரும் கலவரமாகி ஒரே சமயத்தில் பேந்தப் பேந்த முழித்து அவனைப் பரிதாபமாகப் பார்த்தான்கள்.ஆனால் வேறு வழியில்லை. அவன் சொல்வதைக் கேட்டுதான் ஆகவேண்டும்.ஏனெனில் தொடுக்குகள் என்பவர்கள் வெறுமனே ஒட்டிக்கொண்டு இருப்பவர்கள் மட்டுமல்ல.கொஞ்சம் விவகாரமானவர்களும்கூட.

இப்பொழுது நீங்கள் சாலையில் ஒரு நண்பரோடு நடந்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.யாரோ முன்பின் தெரியாத ஒரு அழகிய பெண் உங்களை கடந்துச் செல்கிறாள்.அறிமுகமேயில்லாத அவளைக் கைதட்டியோ அல்லது விசிலடித்தோ நீங்கள் அழைத்துவிடுகிறீர்கள்.அவள் திரும்பவும் இவர் உங்களை காதலிக்கிறாராம்’ என்று உங்கள் நண்பரை கைகாட்டிவிட்டு,பின்னர் யாருக்கு வந்த விதியோ என்று எதுவுமே நடக்காதது போல் உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு செல்கிறீர்கள்.இது உங்களுக்கு நிஜத்தில் சாத்தியமா?ஆனால் இந்த தொடுக்குகள் இதை சர்வசாதாரணமாக செய்வார்கள்.இந்த பண்பின் அடிப்படையிலேயே காதலுக்கான தூதுவர்களாக இவர்களே பெரிதும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

சரி இவ்வளவு தூரம் கதை பேசிக்கொண்டே வந்துவிட்டோம்.நெருக்கமான நண்பராகிவிட்ட உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறதுநானும் துரதிருஷ்டவசமாக ஒரு பெண்ணைக் காதலித்து தொலைத்தேன். நான்காவது ரௌண்டுக்குப் பிறகு காதல் கதை சொல்வது நாகரீகம் இல்லையென்றாலும் கேட்பது நீங்கள் என்பதால் தொடர்கிறேன்.அவளும் எங்கள் கல்லூரிதான்.பெயர் எல்லாம் தேவையில்லை. கை லேசாய் நடுங்குவது மாதிரி தெரிகிறது.மனதிலிருப்பதை அப்படியே கொட்டலாமென தான் முந்தைய வரிவரை நினைத்திருந்தேன்.இனி முடியாதுபோல் இருக்கிறது.சுருக்கமாக சொல்கிறேன்.நான் போய் அவளிடம் காதலை தெரிவித்தேன்.அன்று வெயில் பலமாக அடித்ததாக நினைவு.அவள் சம்மத்தித்திருக்கலாம் அல்லது பிடிக்கவில்லையென்றால் நாகரீகமாக மறுக்கக்கூட செய்திருக்கலாம்.பிரச்சனை அதோடு போய்விட்டிருக்கும்.அந்த பாழாய்ப் போனவளுக்கு என்ன நேர்ந்ததோ கடகடவென அழ ஆரம்பித்துவிட்டாள்.அவள் காறித் துப்பியிருந்தாள்கூட நான் கவலைப் பட்டிருக்கமாட்டேன். அவள் அழுததை பார்க்கவும் எனக்கு என்னவோ போலாகிவிட்டது.அதற்கு பிறகு நான் அவளை பார்ப்பதையே முற்றிலுமாக தவிர்த்துவிட்டேன். 

வெளியே என்னவோ சத்தம் கேட்கவும் நானும் ஜகதீஷும் வாசலுக்கு வந்தோம். சாலையோரத்திலிருந்த த்ரிஷாபடம் போட்ட டாட்டா இண்டிகாம் பேனர் முன் நின்றுகொண்டு நான்கு இளைஞர்கள்-என் வயதுதான் இருக்கும் அவர்களுக்கும்- சலம்பல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.நிறைபோதை என்பது பார்த்தவுடனே தெரிந்துவிட்டது. சிறிது நேரத்திற்குள் அவர்களில் கருப்பு சட்டை அணிந்திருந்த ஒருவன் சத்தம்போட்டு அழத் தொடங்கினான்.அழுகையினூடே த்ரிஷா படத்தை கைகாட்டி என் அஞ்சல மச்சான் அவ..” என்ற புலம்பல் வேறு.த்ரிஷா அவனுக்கு எந்த தீபிகாவாக எந்த வினோதினியாக காட்சி தருகிறாரோ.. தெரியவில்லை. ஆமாம் கேட்க மறந்துவிட்டேன்.நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களாசும்மா சொல்லுங்கள்.நான் அதை கதையாக எல்லாம் எழுதிவிடமாட்டேன்.
*****
துரோணா.

No comments:

Post a Comment