Friday, February 4, 2011

நினைவுகளின் வார்த்தைகள்



ஒரு இலையுதிர்வை போல்தான்,
இருந்தது அக்கணம்.
மிகவும் இலகுவாக
அதே சமயம் மிகவும் கனமாக.

நீர்த்துப் போன மௌனங்களுடன்
கடந்துக் கொண்டிருந்தன 
தொடர்ந்து வெளிப்பட்ட 
ஒவ்வொரு கணங்களும்.
O
முன்தீர்மாணங்கள் இல்லாத 
எந்த நிகழ்விற்குமே
நான் இதுவரை பழகியதில்லை.
நேரங்காட்டியை மீண்டுமொருமுறை
சரி பார்த்துக் கொள்கிறேன்.

சொற்களை கையாள்வதுப் போல்
காலத்தினையும்,மிகுந்த நேர்த்தியுடனே
நீ கையாள்கிறாய்.
O                                                                      
                                                                                                 
உன்னுடைய கேள்விகள் அனைத்திற்குமே
என்னிடம் பதில்கள் உள்ளன,
பொருத்தமான வார்த்தைகள்தான் இல்லை.
நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
ஒரு சிகரெட் இருந்தால் தேவலாம்.
O
கூண்டு புலியின் கண்கள்
இரும்புக் கதவின் கம்பிகளை
எதிர்கொள்ளும்
அதே வேட்கையுடன்
அதே கோபத்துடன்
அதே ஏமாற்றத்துடன்
அதே வேதனையுடன்
நான் அந்த கணங்களை
எதிர்கொள்ள துணிகிறேன்

எந்த நியாயங்களுக்கும் தகுதியற்ற                                                            ஒரு குடிகார சூதாடி                                                         மீண்டுமொருமுறை                                                                   சீட்டுக்கட்டை கலைத்தடுக்குகிறான்
o
உன்னிடம் இருக்குமளவிற்கு
என்னிடம் சாட்சியங்கள் இல்லை.
நீ எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
நானும் எதையும் நிரூபிப்பதற்கில்லை.
நாளையும் மழை பெய்யும் என்ற
எளிய நம்பிக்கை மட்டுமே
என்னிடம் மீதமிருக்கின்றது.
O
இறுதியில்,
நீயும் சென்று விட்டாய்.
நானும் சென்றுவிட்டேன்.

சொல்லிக் கொள்ளாமல்
செல்வதில் தான் 
எவ்வளவு சௌகரியங்கள்.
யாரும் பார்க்கும் முன்னே
கண்களை துடைத்துக் கொள்ளலாம்.
O
நாம் சென்ற பிறகும்,
அந்த கணங்களுக்குள்ளாக,
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன 
நம் நினைவுகளின் வார்த்தைகள்.

வார்த்தைகள்
வெறும் வார்த்தைகளாக
மட்டும் இருப்பதில்லையே

4 comments:

Raja said...

மிக அருமையாக இருக்கிறது...சற்று நீளமோ? எல்லா வார்த்தைகளும் அட்டகாசமாக வந்து விழுந்துவிட்டால், எதை எடுத்து, எதை விடுப்பார் கவிஞர்? வாழ்த்துக்கள் விஷால்...

துரோணா said...

மிகுந்த நன்றிகள் ராஜா :)

மதி said...

காட்சியைக் கவித்துவமாக வெளிப்படுத்தும் கவிதை .. ஒரு சிறு ஊடலில் காதலியைச் சமாளிக்கும் நினைவோடு சேர்த்து ஒரு கவிதையையும் கண்டெடுத்த விழிப்புணர்வுக்குப் பாராட்டுக்கள் .. பிடித்த வரிகள்

//நீ எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
நானும் எதையும் நிரூபிப்பதற்கில்லை.
நாளையும் மழை பெய்யும் என்ற
எளிய நம்பிக்கை மட்டுமே
என்னிடம் மீதமிருக்கின்றது.//

துரோணா said...

மிகுந்த நன்றிகள் மதி.....

Post a Comment